(பல செபமாலைகள் மந்திரிக்கப்பட்டால் அவை மந்திரிக்கப்பட்டவுடன் அனைவரும் சேர்ந்து ஒரு செபமாலையோ, ஒரு தேவ இரகசியத்தையோ சேர்ந்து செபிப்பது நல்லது.)
குரு: அன்னையின் அன்பு மக்களே! செபமலர்களால் தொகுக்கப்பட்டது செபமாலை. இறைவனின் அன்னையை நோக்கிச் சொல்லப்படும் செபங்களுள் செபமாலை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. செபமாலையின் செபங்களைச் சொல்லும்போது மீட்பின் வரலாற்றைத் தியானிக்கின்றோம். அன்னையின் புகழை எத்திக்கும் பறைசாற்றுகின்றோம். இதற்குப் பயன்படும் செபமாலை(களை)யை இறைவன் ஆசீர்வதித்தருளுமாறு மன்றாடுவோம்.
புகழ்ப் பா
ஓ! அருள் நிறைந்த மரியே வாழ்க.
1. இறைவாக்கை உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்த தூய கன்னிமரியா பேறு பெற்றவர் (லூக் 2:19).
2. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் (1:45).
3. அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர் (1:42).
புனிதம் செய்தல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
அன்புத் தந்தாய், கன்னிமரியாவை அருள் நிறைந்தவராய், பெண்களுள் பேறுடையவராய், புகழ் அனைத்திற்கும் தகுதி பெற்றவராய், படைப்பிற்கே சிகரமாய்ப் படைத்தீர். அத்தகைய அன்னையோடு ஒன்றுபட்டு உம் திருமகனின் மீட்பின் வரலாற்றைத் தியானிக்கப் பயன்படுத்தும் இச்செபமாலை (களை)யைக் கனிவுடன் ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இதனைப் (இவற்றைப்) பயன்படுத்தும் யாவரும் மீட்பின் கொடைகளை நிறைவாகப் பெற்று மகிழ்வதோடு கன்னி மரியாவைக் காலமெல்லாம் புகழ்ந்தேத்துவார்களாக; இந்த அன்னையின் அன்புக்கும் அரவணைப்புக்கும் உரியவர்களாகத் திகழ்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு செபமாலைகள்மீது தீர்த்தம் தெளிக்கிறார்.)