அருள்பொருள்களைப் புனிதப்படுத்துதல்

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

நற்செய்தி (விருப்பமானால்) மத் 6:5-6

அந்நாள்களில் இயேசு கூறியதாவது: "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக் கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்று கொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

(சிறிது நேரம் மெளனம்)

குரு: மன்றாடுவோமாக:

விண்ணகத் தந்தையே! நாங்கள் உம்மை நோக்கிச் செபிக்க உமது ஆவியை எங்கள் இதயங்களில் பொழிந்ததற்காக உம்மைப் போற்றுகிறோம். இப்பொழுது இப்பொருளை ஆசீர்வதித்து, இதனை எம் செப வாழ்க்கைக்கு உதவும் சாதனமாக அமையச் செய்து, நன்முறையில் செபிக்க எங்களுக்குக் கற்றுத்தாரும். செப வாழ்வில் நாங்கள் அனைவரும் வளர்ந்து, வளம் மிக்க எமது வாழ்வால் உமக்கு ஏற்றவர்களாவோமாக. தூய ஆவியின் ஒன்றிப்பில் உம் திருமகனும் எங்கள் மீட்பருமான இயேசுவின் வழியாக, எல்லாப் புகழும் மகிமையும் என்றென்றும் உமக்கே உண்டாவதாக.

எல்: ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)