வியாகுல மாதா செபமாலை.

நம் அன்னை, தன் அன்பு மகனின் பிறப்பு முதல் இறப்பு வரை எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார்கள். துணை மீட்பராக விளங்கிய நம் தாய், தன் மகனின் பாடுகளில் தனது மாசுமருவற்ற தூய இருதயத்தை அடித்து நொறுக்கி செயலிழக்க செய்வது போன்ற வேதனையை அனுபவித்தார்.

இவ்வாறு வானவனின் வார்த்தைக்கு 'ஆகட்டும்' என, தன்னைக் கையளித்த நாள் முதல் நம் தாய் அனுபவித்த வியாகுலங்கள் பற்பல. என்றாலும் நம் தாயாம் திருச்சபை அவற்றில் ஏழு வியாகுலன்களைப் பற்றி தியானிக்க அழைக்கிறது. நாமும் நம் அன்னையின் வியாகுலங்களை தியானிப்போம்.

முதல் வியாகுலம் - சிமியோனின் இறைவாக்கு.

லூக் 2: 25 முதல் 35.

இந்த முதல் வியாகுலத்தில் நம் அன்னை மரியா தன் குழந்தையை யூத பாரம்பரியப்படி கோவிலில் காணிக்கையாகக் கொண்டு செல்கிறார். அங்கே பல ஆண்டுகளாக வாக்களிக்கப்பட்ட மீட்பராகிய மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்த முதியவர் குழந்தையைக் கையில் எடுத்து "இதோ இக்குழந்தை பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாகத் திகழும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் விளங்கும்" என்றார் . மேலும் அதன் தாயாகிய மரியாவைப் பார்த்து "உமது இதயத்தை ஒரு வாள் ஊடுருவும்" என்றார்.

 என்ன ஒரு கொடுமையான வாழ்த்து! இதுவரை எந்தத் தாயும் தன் மகனைப் பற்றி முதன் முதலில் கேட்டிராத வாழ்த்து இது. இன்று குழ்ந்தை பிறந்தவுடன், கூடும் உறவுகள்,உன் மகன் நன்கு படிப்பான்,பெரிய ஆளாக வருவான், உன் குடும்பப் பெயரை சிறக்கச் செய்வான் என்பன போன்ற வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் சூழலில் இப்படியும் ஒரு வாழ்த்து. இறைவனால் வாக்களிக்கப்பட்ட தன் மகனுக்கும், அவரால் தனக்கும் நேர இருக்கும் கொடுமையை அறிந்தும் பதறவில்லை நம் தாய்!. காரணம், எல்லாம் இறைத் திருவுளம் என்று ஏற்கும் மனப்பக்குவம். இந்தத் துணிவு நமக்கும் வாய்க்கப்பெற ஜெபிப்போம்

1  பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.

இரண்டாம் வியாகுலம் - குழந்தையுடன் எகிப்துக்கு தப்பி ஓடுதல்.

மத் 2:13,14

இந்த இரண்டாம் வியாகுலத்தில் நம் தாய் மரியாள், தன் மகன் இயேசுவைக் கொல்லத் திட்டமிட்ட ஏரோதுக்குப் பயந்து, வானவரின் வழிகாட்டுதலின் பேரில் எகிப்துக்குத் தப்பியோடி அங்கே இருக்கின்றார். எங்கும் இருள், தெரியாத முகம், அறியாத மொழி, புரியாத கலாச்சாரம் என எல்லாமே புதிது!

உணவுக்கு என்ன வழி புரியவில்லை. தங்க இடத்திற்கு என்ன செய்வது தெரியவில்லை. யாரிடம் உதவி கேட்பது என எதுவுமே தெரியாதவர்களாய், முன்பு தன் இனத்து மக்களை தன் வீட்டு மாட்டிலும் கேவலமாக நடத்திய மக்கள் மத்தியில் வாழ்ந்து அனுபவப்படுகின்றார். யூத மக்களின் அடிமை வீடு என அழைக்கப்பட்ட எகிப்தில் யூத மக்களுக்கு உரிமை வாழ்வை அளிக்க கடவுளால் கொடுக்கப்பட்ட மகன் வருகிறார். இந்தத் துயர் அன்னையை எவ்வளவு வேதனைக்கு உள்ளாக்கி இருக்கும் என உணர அன்னையின் துணை வேண்டி ஜெபிப்போம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.

மூன்றாம் வியாகுலம் - மூன்று நாள் இயேசு காணாமல் போதல்.

லூக் 2: 43,44.

திருவிழாக் காலங்களில் குழந்தைகள் தாய் தந்தையை விட்டுப் பிரிந்து செல்வதும் பின்னர் நீண்ட தேடலுக்குப் பின் பிள்ளைகளைக் கண்டடைந்து மகிழ்ச்சி கொள்வதும் நம் அனுபவத்தை ஒத்தது. இதோ இங்கே ஒவ்வோர் யூதக் குழந்தையும் 12 வயது நடக்கின்ற போது எருசலேம் ஆலயம் சென்று காணிக்கை செலுத்தி மறைநூலை வாசிக்கும் தகுதி பெறுகின்றனர்.

இந்த மதச் சடங்கை நிறைவேற்றவே இயேசுவின் பெற்றோர் இயேசுவைக் கோவிலுக்கு அழைத்து வந்தனர். சடங்குகள் முடிந்து வீட்டுக்குச் செல்ல முற்படும்போது இயேசுவைக் காணவில்லை.

"கடவுள் வாக்களித்த திருமகன், உலகை மீட்க வந்த இரட்சகன், தூய ஆவியால் பிறந்த திருமகனை" காணாமல் போக விட்டுவிட்டேனே என்ற குற்ற உணர்வு ஒரு புறம், பிள்ளைப் பாசம் மறுபுறமுமாக பிரிந்த மகன் கிடைப்பானா என்ற ஏக்கத்தோடு கண்ணில் படும் குழந்தைகள் அனைத்தும் தன் மகனோ என்ற பிரமை, இந்தப் பக்கம் போயிருப்பானோ அந்தப் பக்கம் போயிருப்பானோ, என்ற குழப்பத்தோடு நம் தாய் தன் நிலை மறந்து தவிப்பதைத் தியானித்து, எந்த நிலையிலும் இயேசுவை விட்டுப் பிரிந்து போகாமலிருக்க மன்றாடுவோம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.

நான்காம் வியாகுலம் - இயேசு சிலுவை சுமந்து செல்லுதல்.

லூக் 23:27.

இந்தக் கொடூரச் செயலைக் கன்னுற்ற நம் தாய் எங்கோ, யாருக்கோ கிடைக்க வேண்டிய தண்டனை இன்று தன் ஒரே மகனுக்கு, குற்றமற்றவருக்குக் கிடைத்திருப்பதைக் கண்டு வருத்தம் மேலிட வதங்கி நிற்கிறார். இது அன்னையின் மனதை உடைத்து நொறுக்குவது போன்ற வேதனையைத் தந்தது.

30 ஆண்டுகளாக கண்ணுக்குள் கண்ணாகப் பொத்திப் பொத்தி வளர்த்த மகன் இந்த மூன்று ஆண்டுப் பணி வாழ்வால், விரோதியாக, வேண்டாதவராக, எதிர்க்கப்பட வேண்டியவராக, ஒழித்துக் கட்டப்பட வேண்டியவராகப் பார்க்கப்படுவதைக் கண்டு குமுறுகிறது அன்னையின் உள்ளம்.

"எப்போதும் மக்கள் கூட்டத்தோடு நடந்து, எல்லோரையும் ஏற்றுக் கொண்டு, எவரும் அன்னியரல்ல என்று போதித்து, எல்லோருக்கும் என் இதயத்தில் இடமுண்டு" என சொன்னவர் , இன்று நாதியற்று, நையப் புடைக்கப்பட்டு, உடல் முழுதும் காயங்களோடு தள்ளாடி தூக்க முடியாத பாரச் சிலுவையைத் தூக்கிச் செல்வதைக் கண்டு, அன்னை அனுபவித்த துயரைத் தியானித்துச் செபிப்போம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.

ஐந்தாம் வியாகுலம் - இயேசுவின் சிலுவை அடியில் அன்னை.

யோவா 19:41,42.

முதலும் முடிவுமானவர், இருக்கின்றவராய் இருக்கின்றவர் நானே என்று கூறிய இறைவனின் மகன் இன்று மூன்று ஆணிகளுக்கு மத்தியில் முடக்கப்பட்டு இறப்பதைக் காண்கிறார் மரியா. இறுதியாகத் தன்னிடம் கொடுக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் தன் தாயை வாரிக் கொடுக்கிறார் இயேசு. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை இறுதிவரைக் காத்த இயேசு இந்த நேரத்திலும் தன் தாயை அவர்களுக்குத் தாயாக, சிறந்த வழிகாட்டியாக, "அம்மா, இவர்களைக் கவனித்துக் கொள்" என்ற அர்த்தத்தில் "இதோ உம் மக்கள்" என்கிறார்.

கருவிலே தனக்குப் புரட்சி கீதம் பாடி புதுமையாகச் செயல்படத் தூண்டியது போல தன் சீடர்களுக்கும் இறைவனுக்குள் தாயாக, இறைவிருப்பத்தைச் செய்யத்தூண்டும் புத்துணர்வுப் பெட்டகமாக இரும் என அன்புக்கட்டளை இட்ட போது, அன்னையின் மனம் எத்தகைய கலக்கத்தை உணர்ந்திருக்கும் எனத் தியானித்து வாழ்வில் வரும் சிறிய பெரிய இழப்புகளை இறைவனின் துணையால் மேற்கொள்ள அருள் வேண்டி ஜெபிப்போம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.

ஆறாம் வியாகுலம் - மாதாவின் மடியில் மரித்த மகன்.

 யோவா 19:40 .

தாலாட்டி வளர்த்த தங்க மகன், சீராட்டி வளர்த்த சிறந்த மகன், பாராட்டி வளர்த்த பாச மகனின் உடல் உயிரற்றுக் கிடப்பதை உற்று நோக்கி மடியில் தாங்கி இருக்கும் அன்னையின் மனத்துயரைச் சிறிது நேரம் அமைதியில் உணர்ந்து பார்ப்போம்.

சிறு குழந்தையாய் இயேசு இருந்தபோது தூங்க வைப்பதற்காகத் தாங்கிய மடி, இன்று தாங்குகிறது 33 வயது இளைஞனின் உயிரற்ற உடலை. "அம்மா, என் பணியை முடித்து விட்டேன், செல்லவா?" என்று கேட்பது போன்ற உணர்வு அன்னைக்கு. உள்ளம் நொறுங்குண்டவராக, இனி யாருக்காக வாழ வேண்டும்? எனக்கென்று யார் இருக்கிறார்கள்? எனப் பற்பல கேள்விகள் உள்ளத்தைக் குத்த மௌனியாகிப் போனார் நம் தாய்மாரி. அன்று எருசலேம் ஆலயத்தில் உன் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று சீமோன் சொன்னாரே; அந்த அம்பு இத்தகைய கொடுமையானதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை எனத் திகில் கொண்டவராக இருக்கும் அன்னையின் துயரைத் தியானிப்போம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.

ஏழாம் வியாகுலம் - இயேசுவை அடக்கம் செய்த பின், அன்னை அனுபவித்த துயரம்.

யோவா 19:41,42.

இல்லாமை இயலாமை, ஆக அனைத்திலும் பெரிய கொடுமை தனிமை. எனக்கென்று யாருமில்லை, சொந்தம் என்று சொல்ல ஒருவரும் இல்லை, என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆளில்லை, என்ற தனிமைத் துயரை ஒரு நேரமாவது அனுபவித்தவர்கள் மட்டுமே அன்னையின் இந்த ஏழாம் வியாகுலத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

யாருக்காக ஆகட்டும் என்றார்களோ, யாருக்காகத் தன் வாழ்வைப் பணயம் வைத்தார்களோ, யாருக்காக வாழ்க்கையின் அத்தனை இடர்களைச் சமாளித்தார்களோ, அவரே இன்று இல்லை என்ற போது இனி ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் மிஞ்சும். அகன்ற பாலைவனம், எங்கும் இருள் என வெறுமை மட்டுமே மனதை நிறைத்து நிற்கும் சூழலில், ஓர் அகல் விளக்காகத் தனித்து இருக்கும் அன்னைக்கு துணையாக நாமும் அமர்ந்து செபிப்போம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.

வியாகுல மாதா மன்றாட்டு மாலை.

சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.

பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

அர்சிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனுடைய அர்சிஷ்ட மாதாவே,

கன்னியரில் உத்தம புனித கன்னிகையே,

உபாதனை அடைந்த அன்னையே,

வியாகுல அன்னையே,

கண்ணீர் சொரிந்த அன்னையே,

துயரமடைந்த அன்னையே,

கைவிடப்பட்ட அன்னையே,

ஆறுதலற்ற அன்னையே,

குமாரனை இழந்த அன்னையே,

வாளால் ஊடுருவப்பட்ட அன்னையே,

சஞ்சலத்தில் அமிழ்ந்திய அன்னையே,

இருதயத்தினுள் சிலுவையை ஊன்றிய அன்னையே,

துக்கமுள்ள அன்னையே,

கண்ணீர் சுனையே,

பாடுகளின் திரளே,

பொறுமையின் கண்ணாடியே,

உறுதி நிலையின் குன்றே,

நம்பிக்கையின் பெட்டகமே,

கைவிடப்பட்டவருக்கு பேரின்ப அடைக்கலமே,

உபத்திரவப்படுகிறவர்களுக்குக் கேடயமே,

அவிசுவாசிகளின்  ஜெயசீலியே,

நிர்ப்பாக்கியவர்களுக்கு ஆதரவே,

வியாதியஸ்தர்களுக்கு அமிழ்தமே,

மெலிந்தவர்களுக்குத் திடனே,

யாத்திரையில் அவதிப்படுகிறவர்களுக்கு துறைமுகமே,

பெரும் புயலைத் தணித்தவளே,

துன்பப்படுகிறவர்களுக்குத் தஞ்சமே,

துஷ்டர்களுக்கு அச்சமே,

விசுவாசிகளின் பொக்கிஷமே,

தீர்க்கத்தரிசிகளின் நேத்திரமே,

அப்போஸ்தலர்களின் உதவியே,

வேத சாட்சிகளின் கிரிடமே,

ஸ்துதியர்களின் ஒளியே,

கன்னியாஸ்திரிகளின் ஆ ரமே,

கைம்பெண்களின் தேற்றரவே,

சகல புனிதர்களின் ஆனந்தமே,

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக:
சுவாமி! தேவரீர் சிமியோன் தீர்க்க தரிசனம் சொன்னபடியே பாடுபட்ட பொழுது மகிமைப் பிரதாபமுள்ள கன்னித்தாயான மரியாயின் மகா மதுரமான ஆத்துமம் வியாகுலங்களால் ஊடுருவப்பட்டதாமே, அவரது வியாகுலத்தையும் வேதனையையும் வணங்கி ஆராதிக்கிற நாங்கள் அவருடைய சிலுவையை சுமத்திரையாய் நேசித்து சகல மனிதர்களின் மகிமையுள்ள பேறுகளினாலும் மன்றாட்டுகளினாலும் திருப்பாடுகளின் பலனை அடையும் படி தயை புரிந்தருளும்.

ஆமென்.