தமிழகத் திருவழிபாட்டுப் பணிக்குழுவினரால் தயாரிக்கப்பட்டு தமிழக ஆயர்களின் அங்கீகாரம் பெற்றது
பதிப்புரிமை: தமிழக விவிலிய, மறைக்கல்வி, திருவழிபாட்டு நடுநிலையம், திண்டிவனம் 2021
ஆசியுரைகளும், அர்ச்சிப்புகளும் நம் இறைவழிபாட்டின் சிறப்பான சொத்தாக இருந்து வருகின்றன. இவை வழியாக நாம் இறைவனைப் போற்றிப் புகழ்கின்றோம்; அதேவேளையில் நம்மையும், அவருடைய சேவைக்காகவும் மகிமைக்காகவும் பயன்படுத்தப்படும் இடம், பொருள் அனைத்தையும் ஆசீர்வதிக்க மன்றாடுகிறோம். மனித வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. காலம் மாறிவரும்போது புதுப்புதுத் தொழில் முறைகள், புதிய தேவைகள் என்று புதிய சூழ்நிலை உருவாகின்றது. இந்தக் காலச் சூழ்நிலைக்கேற்ப புதிய அர்ச்சிப்பு ஆசியுரைகளும், மந்திரிப்புகளும் தேவைப்படுகின்றன.
1984-ஆம் ஆண்டு தமிழக ஆயர்களால் திருச்சடங்கு நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதிலுள்ள ஆசியுரைகளோடும், மந்திரிப்புகளோடும் புதிய தேவைகளுக்கேற்பப் புதிய ஆசியுரைகளை இணைத்து இந்தப் புதிய பதிப்பு வருகிறது. இந்நூல் தமிழக ஆயர்களின் அங்கீகாரம் பெற்றது.
நம் தமிழக ஆயரவையின் இறைவழிபாட்டுக் குழு, அனைவருடைய ஒத்துழைப்போடு இந்நூலை வெளியிடுகிறது. தமிழக ஆயரவையின் இறைவழிபாட்டுக் குழுவினர் அனைவரின் கடும் உழைப்பையும் முயற்சியையும் பாராட்டி நன்றி கூறுகிறேன்.
மிலான் ஆயர் புனித அம்புரோஸ் பின்வருமாறு கூறியுள்ளதை நாம் நினைவுகூர்வோம்:
"நீங்கள் செல்வந்தராயில்லாமல் இருக்கலாம்; உங்களுடைய மக்களுக்குப் பெருஞ்சொத்தைப் பகிர்ந்து கொடுக்க முடியாத நிலையில் இருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் உங்களால் அவர்களுக்குத் தர இயலும் - அதுதான். ஆசீரளிக்கும் உங்களுடைய சொத்துரிமை. பணக்காரராய் இருப்பதைவிட ஆசீர்வதிக்கப்பட்டவராக இருப்பது எவ்வளவோ மேன்மை."
எனவே, நாம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனுடைய அருளை மன்றாடிப் பெறுவோம். அவருடைய அருளே நமது செல்வம்; நமது பாக்கியம். இத்தகைய செல்வத்தை நம் கத்தோலிக்கர்கள் பெற்று வாழவைப்பது திருச்சபை நமக்களிக்கும் மாபெரும் கொடை.
தமிழகக் கத்தோலிக்க மக்கள் இந்நூல் வழியாக இறைவனின் அருளைப் பெற்று மகிழ்ந்து வாழ்வார்களாக.
ச. மிக்கேல் அகுஸ்தீன்
தமிழக ஆயரவை இறைவழிபாட்டுக்குழு தலைவர்.