✠ புனிதர் பீட்டர் சானேல்

"பியர்ரே லூயிஸ் மேரி சானேல்" (Pierre Louis Marie Chanel) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் பீட்டர் சானேல் ஒரு கத்தோலிக்க குருவும், மறை பணியாளரும், மறைசாட்சியும் ஆவார்.

கி.பி. 1803ம் ஆண்டு, ஜூலை மாதம், பிறந்த பீட்டர் சானேலின் தந்தை, "கிளாட்-ஃபிரான்காய்ஸ் சானேல்" (Claude-François Chanel) ஆவார். இவரது தாயார் பெயர் "மேரி-ஆன் ஸிபெல்லாஸ்" (Marie-Anne Sibellas) ஆகும். இவர் தமது 7 முதல் 12 வயதுவரை கால்நடை மேய்க்கும் பணி செய்தார். உள்ளூர் ஆலய பங்குத் தந்தை, தாம் தொடங்கி நடத்தும் சிறு பள்ளியில் பீட்டரை சேர்க்குமாறு இவரது பெற்றோரை வற்புறுத்தி பீட்டரை பள்ளியில் சேர்த்தார். உள்ளூர் பள்ளியிலேயே கல்வி பயின்ற பீட்டர், கி.பி. 1817ம் ஆண்டு, மார்ச் மாதம், 23ம் நாளன்று, புதுநன்மை வாங்கினார்.

தன் பிறந்த ஊரில், சிறுவயதிலேயே மறைபரப்புப் பணியில் ஆர்வம் காட்டினார். ஆனால் இவர் தொடர்ந்து கல்வி கற்க வேண்டுமென்பதால் மறைபரப்புப் பணியை விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மரியன்னையிடம் இடைவிடாமல் செபித்தார். இதன் பயனாக கல்வி கற்றுக்கொண்டே, மறைபரப்புப் பணியில் ஈடுபட்டார்.

கி.பி. 1827ம் ஆண்டு, ஜூலை மாதம், 15ம் நாளன்று, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அதன் பின்வரும் மூன்று ஆண்டுகளுக்கு "க்ரோசெட்" (Crozet) எனும் பங்கின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். மிகவும் மோசமான நிலையிலிருந்த அந்த பங்கினை புத்துயிரூட்டி, புத்துணர்ச்சியுடன் புது மெருகேற்றினார். அதற்காக அவர் செய்தது, நோயாளிகளிடம் அன்பும் அக்கறையும் காட்டியதாகும்.

அதன்பிறகு, நான்கு ஆண்டுகள் கழித்து கி.பி. 1831ம் ஆண்டு, "மேரிஸ்ட்ஸ்" (Marists) என்றழைக்கப்படும் "மரியாளின் சபை" (Society of Mary) எனும் துறவற சபையில் சேர்ந்தார். கி.பி. 1833ம் ஆண்டு, அருட்தந்தை "ஜீன்-கிளாட் கொலின்" (Fr. Jean-Claude Colin) என்பவருடன் இணைந்து "மரியாளின் சபை" (Society of Mary) திருத்தந்தையின் ஒப்புதல் வாங்குவது தொடர்பாக ரோம் பயணித்தார். இறுதியில் 1836ம் ஆண்டு, "மரியாளின் சபைக்கு" திருத்தந்தை பதினாறாம் கிரகோரியால் (Pope Gregory XVI) ஒப்புதல் அளிக்கப்பட்டது. "தென்மேற்கு பஸிஃபிக்" (South West Pacific) பிராந்தியங்களுக்கு மறைப்பணியாளர்களை அனுப்புமாறு திருத்தந்தை அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஏழு மரியாளின் சபை மறைப் பணியாளர்களுடன் கி.பி. 1837ம் ஆண்டு ஒஷினியாத் தீவுக்கு மறைபரப்பு பணிக்காக புறப்பட்டுச் சென்றார். அவர்களது குழுவுக்கு "நியுஸிலாந்து" (New Zealand) நாட்டின் முதல் ஆயரான "ஜீன் பேப்டிஸ்ட் பொம்பள்ளியர்" (Bishop Jean Baptiste Pompallier) தலைமை தாங்கினார். அப்போது பசிஃபிக் பெருங்கடலை ஒட்டிய ஃப்யூச்சினா (Futuna) தீவை அடைந்தார். அங்கு தட்பவெப்ப நிலையினால் மிகவும் கஷ்டப்பட்டார். உணவின்றி பட்டினியால் தவித்தார். மறைபரப்பு பணியை முடித்துவிட்டு திரும்பும்போது, தன் உடலில் வலுவிழந்தவராக காணப்பட்டார். இருப்பினும் தன் பணியை மகிழ்ச்சியோடு செய்தார்.

மக்களுக்கு போதிப்பது சிரமமாக இருந்தபோதிலும் ஒரு சிலரையேனும் மனந்திருப்பி கிறிஸ்துவின் பாதையில் சேர்த்தார். இதனால் நம்பிக்கையின் மீது வெறுப்பு கொண்ட கொலைகாரர்களால் மிகவும் மோசமாக வதைக்கப்பட்டார். ஆனால் இவர்களின் மேல் சிறுதுளிகூட வெறுப்பு காட்டாமல் அவர்களையும் அன்பு செய்தார் பீட்டர் ச்சானல். இதனை அறிந்து, இவரின் பாசத்தை சுவைத்த ஃப்யூச்சினா தீவினர் இவரை "உயர்ந்த உள்ளம் கொண்ட பீட்டர்" என்றே அழைத்தனர். மரியன்னை மீது கொண்ட பக்தியில் சிறந்து விளங்கிய இவர், மரியன்னையின் முன் பல மணிநேரம் மண்டியிட்டு செபிப்பார்.

அப்போது ஃப்யூச்சினா தீவை ஆட்சி செய்த அரசனின் மகன், அருட்தந்தையிடம் அதிகம் பாசமாக இருந்தான். இதனால் தானும் ஞானஸ்நானம் பெற விரும்பினான். இதனால் கோபமுற்ற தீவின் அரசன், தன் படையாட்களை அனுப்பி பீட்டரை கொடுமையாக கொல்லக் கூறினான். அதனால் அக்கொடியவர்கள் அருட்தந்தை பீட்டர் சேனலை கி.பி. 1842ம் ஆண்டு தடிகளால் அடித்தே கொன்றனர்.

இவரோடு சேர்ந்து ஃப்யூச்சினா தீவில் கிறிஸ்தவம் அழிந்துவிடும் என்று அரசன் கருதினான். ஆனால் இதற்கு எதிர்மாறாக அருட்தந்தை இறந்த இரண்டே ஆண்டுகளில் ஃப்யூச்சினா தீவு முழுவதும் கிறிஸ்தவ மறை பரவியது. ஒசியானியாத் தீவுகள் (Ozeanien) முழுவதும் இன்றுவரை கிறிஸ்தவ மறை செழித்து வளர்ந்து வருகிறது. இப்புனிதரை இப்பகுதியில் வாழ்பவர்கள் தங்களின் முதல் மறைசாட்சி என்று கூறி வாழ்த்தி மகிழ்கின்றனர்.

பி.கு. : நம் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் "இன்றைய புனிதரை" தமிழில் மொழி பெயர்த்து தொகுத்து வழங்கிய மறைந்த திரு.புஷ்பராஜா அவர்களின் ஆன்மா இளைப்பாற்றிக்காக வேண்டுவோம்.