பாத்திமா காட்சிகள் - நரகக் காட்சி

“இந்தக் கடைசி வார்த்தைகளைக் கூறியபடி நமதன்னை முந்திய  இரு மாதங்களிலும் செய்தது போல் தன் கரங்களை விரித்தார்கள். அவற்றிலிருந்து பாய்ந்த ஒளி பூமியைப் பிளந்தது போல் காணப்பட்டது. 

அங்கே ஒரு நெருப்புக் கடலை நாங்கள் கண்டோம். அந்நெருப்பினுள் பசாசுக்களும், ஆன்மாக்களும் அமிழ்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் பழுக்கச் சிவந்து ஊடுருவிப் பார்க்கக் கூடிய தணல் போலிருந்தனர்.  

மானிட வடிவத்தில், சிலர் கறுப்பாக, அல்லது பித்தளை நிறமாக இருந்தனர்.  மேகம் போல் புகையுடன் அவர்கள் உள்ளிருந்தே பீறிட்டு வந்த நெருப்புச் சுவாலைகளால் அங்கு மிங்குமாக வீசப்பட்டனர். பெருந்தீயிலிருந்து சிதறும் நெருப்புப் பொறிகளைப் போல பாரமோ, நடுநிலையோ இல்லாமல் எப்பக்கமும் விழுந்தனர். 

வேதனையாலும் எல்லாவற்றையும் இழந்து விட்ட துயரத்தாலும் அவர்கள் அழுத சத்தம் எங்களுக்குப் பயங்கரத்தை உண்டாக்கியதால், நாங்கள் அச்சத்தால் நடுங்கினோம்.  (இந்தக் காட்சிதான், ஜனங்கள் கேட்டதாகச் சொல்லுகிறபடி, என்னை சத்தமாகக் கத்தும்படிச் செய்திருக்க வேண்டும்.)  

பசாசுக்கள் அகோர, அரோசிகமான இனந்தெரியாத மிருகங்களைப் போலும், ஊடுருவிப் பார்க்கக் கூடிய எரியும் நிலக்கரி போலும் மற்றவர்களிடமிருந்து பிரித்தறியக் கூடியனவாயிருந்தன. பயம் மேலிட்டு உதவி தேடுவது போல் நாங்கள் நம் அன்னையை நோக்கிக் கண்களை உயர்த்தினோம்.  அவர்கள் எங்களைப் பார்த்து அன்புடன், ஆனால் துயரத்தோடு இவ்வாறு கூறினார்கள்:

பரிதாபத்திற்குரிய பாவிகளின் ஆன்மாக்கள் செல்லும் நரகத்தை நீங்கள் கண்டீர்கள்.  அவர்களைக் காப்பாற்ற உலகில் என் மாசற்ற இருத யத்தின் மீது பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார்.  நான் உங்களிடம் கூறுவதை நீங்கள் செய்தால், அநேக ஆன்மாக்கள் காப்பாற்றப்படுவார்கள்.  சமாதானமும் நிலவும். இந்த யுத்தம் முடிவடையும்.  ஆனால் மனிதர்கள் சர்வேசுரனை நோகச் செய்வதை நிறுத்தாவிட்டால், இன்னொரு இதை விடக் கொடிய யுத்தம் 11-ம் பத்திநாதர் காலத்தில் ஆரம்பிக்கும்.

இனந்தெரியாத ஒரு ஒளியால் ஓர் இரவு வெளிச்சம் பெறுவதை நீங்கள் காணும்போது, உலகத்தின் பழி பாவங்களுக்காக யுத்தத்தாலும், பசியாலும், திருச்சபைக்கும், பாப்பரசருக்கும் எதிரான கலாபனையாலும் உலகைக் கடவுள் தண்டிக்கப் போகிறார் என்பதற்கு அவர் கொடுக்கும் அடையாளம் அதுவே என அறிந்து கொள்ளுங்கள்.

இதைத் தடுத்து நிறுத்த, ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்றும், முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்க வேண்டுமென்றும் கேட்க வருவேன்.  என் விருப்பங்கள் நிறைவேற்றப் பட்டால், ரஷ்யா மனந்திரும்பும். சமாதானம் நிலவும். இல்லாவிட்டால் ரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும். யுத்தங்களையும் திருச்சபைக் கெதிரான கலாபனைகளையும் எழுப்பி விடும்.  நல்லவர்கள் கொல்லப்படுவார்கள்.  பாப்பரசர் அதிக துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.  பல நாடுகள் இல்லாமல் அழிக்கப்படும்.

ஆனால் இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்.  பாப்பரசர் ரஷ்யாவை எனக்கு ஒப்புக்கொடுப்பார். அது மனந்திரும்பும்.  உலகிற்கு ஒரு சமாதான காலம் கொடுக்கப்படும்.

போர்த்துக்கலில் விசுவாச சத்தியம் எப்போதும் காப்பாற்றப்படும்...

இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்.  பிரான்சிஸிடம் சொல்லலாம்.

நீங்கள் ஜெபமாலை சொல்லும்போது, ஒவ்வொரு தேவ இரகசியத்தின் முடிவிலும், “ஓ என் சேசுவே, எங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும்.  எல்லா ஆன்மாக்களையும், விசே­மாய் யார் அதிகத் தேவையிலிருக்கிறார்களோ அவர்களையும் மோட்சத்திற்கு அழைத்தருளும்” என்று சொல்லுங்கள்.” 

இத்துடன் நம் அன்னை அக்குழந்தைகளிடம் இன்னொரு இரகசியத்தையும் கூறினார்கள். அது இன்று வரை யாருக்கும் வெளியிடப்படவில்லை.

மாமரி அன்னை இவ்வளவும் பேசி முடிய அங்கு ஒரு தனியான அமைதி நிலவியது. குழந்தைகளும் சற்று நேரம் எதுவும் பேசவில்லை.  மக்கள் கூட்டத்திலிருந்து ஒரு சிறு சத்தம் முதலாய்க் கேட்கவில்லை.  காற்றின் ஓசை கூட இல்லாதிருந்தது.

“உங்களுக்கு வேறு ஏதாவது நான் செய்ய விரும்புகிறீர்களா?” என்று லூஸியா கேட்டாள்.  இறுதியாக, “இன்று இதற்கு மேல் நான் ஒன்றும் விரும்பவில்லை” என்று கூறிய மாமரி, அக்குழந்தைகளை மிகவும் அன்புடன் நோக்கியபின் வழக்கம்போல் “கீழ்த்திசை நோக்கிச் சென்று, அளப்பரிய விண்வெளியின் தொலைவில் மறைந்தார்கள்.” 

நரகக் காட்சியைக் கண்ட மூவரும், தாங்கள் மோட்சம் செல்வதாக முன்கூட்டியே தேவதாய் உறுதி கூறாதிருந்தால், அந்த இடத்திலேயே பயத்தால் இறந்திருக்கக்கூடும் என்று உணர்ந்தார்கள்.

சற்று நேரம் குழந்தைகள் மூவரும் கிழக்கு நோக்கிப் பார்த்தபடியே  இருந்தார்கள்.  காட்சியின்  மகத்துவம்  குறைந்து  அவர்கள்  ஒருவர் ஒருவரைப் பார்த்துக்கொள்ள சற்று நேரமாயிற்று.  அதற்குள் கூட்டத்திலிருந்து பலர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். ஆவலுடன் பலப் பல கேள்விகளைக் கேட்டனர்.

“அந்த அம்மா எப்படி இருந்தார்கள்? அது மாதாதானா? என்ன சொன்னார்கள்?  இனி எப்போது வருவார்கள்?  ஏன் நீங்கள் இவ்வளவு துயரமாக இருக்கிறீர்கள்?...” இப்படி எத்தனையோ கேள்விகள்.

“இது இரகசியம். ஒரு இரகசியம்” என்று மட்டும் கூறினாள் லூஸியா.

“நல்லதா, கெட்டதா?” 

“சிலருக்கு நல்லது; சிலருக்கு கெட்டது.” 

“அதைச் சொல்ல மாட்டாயா?” 

“கூடாது.  அது ஒரு இரகசியம்.  அந்த அம்மா அதைச் சொல்லக் கூடாதென்று கூறியிருக்கிறார்கள்.” 

மார்ட்டோ தம் மகள் ஜஸிந்தாவை அக்கூட்டத்திலிருந்து தூக்கித் தம் தோள்மேல் வைத்துக்கொண்டு கூட்டத்தின் நடுவே வழி உண்டாக்கி, வீடு நோக்கிப் புறப்பட்டார். லூஸியாவும், பிரான்சிஸும் பின்தொடர்ந்தனர். 

ஆயினும் கூட்டத்தில் பலரும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தனர்.  “அது இரகசியம், இரகசியம்” என்ற பதிலையே லூஸியாவும், பிரான்சிஸும் கூறிக் கொண்டு மார்ட்டோவின் பின்னால் நடந்தனர்.

குழந்தைகளை தன் மோட்டார் வாகனத்தில் ஏற்றிச் செல்ல ஒரு மனிதன் முன்வந்ததால், அவர்கள் அதில் ஏறி அல்யுஸ்திரலை எளிதாக வந்து அடைந்தனர்.

இரட்சகருடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.