அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-23

புனித சந்தியாகப்பர் வழி ( The Way of St. James or St. J ames Way ) :

ஒன்பதாம் நூற்றாண்டில் புனித சந்தியாகப்பர் கல்லறை இருந்த இடத்தில் ஒரு ஆர்ச் பிசப்பால் கட்டப்பட்ட அவரது ஆலயம்“Santiago De Compostela “ என்று அழைக்கப்படுகிறது.

அவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு முதல், அவரது திருத்தலத்தை நோக்கி மக்கள் உலகெங்கிலும் பல பகுதிகளிலிருந்தும் வர ஆரம்பித்தார்கள். முக்கியமாக பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஐரோப்பாவின் பல பகுதிகள் மற்றும் உலகெங்கும் பல பகுதிகளிலிருந்து வர ஆரம்பித்தார்கள். புனித சந்தியாகப்பர் பாதையில் பெரும்பாலான மக்கள் கால் நடையாகவே நடக்கிறார்கள். சைக்கிள் பயணத்தை மேற்கொள்பவர்களும் உண்டு. ஜெருசலேம், ரோம் இவைகளோடு சண்டியாகோ டி கொம்பெஸ்தெல்லாவும் ஒரு புகழ்பெற்ற திருப்பயண தலமாக உருவெடுத்தது.

அவரது ஆலயத்துக்கு செல்ல மொத்தம் 12 பாதைகள் உள்ளன. அதில் முக்கியமான திருப்பயண பாதை (Earlier Roman trade route) ஸ்பெயின், கலிசீயா பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடற்கரையில் தொடந்து கேப் ஃபினிசர்ஸ் ( Cape Finisterre) என்ற பகுதியில் முடிகிறது. இந்த பகுதியை ரோமானியர்கள் உலகின் முடிவு பகுதி (the end of the world or Land's End ). ஏற்கனவே முந்தைய ஒரு பகுதியில் சந்தியாகப்பர் உலகின் எல்லை (முடிவு) வரை சென்று நற்செய்தி அறிவித்தார் என்று பார்த்தோம். ஆண்டவர் இயேசுவின் “ உலகின் எல்லை வரை என்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள்” என்ற வார்த்தையை நிறைவேற்றி விட்டார் நம் பரிசுத்த யாகப்பர். இது  நம்மவருக்கு கிடைத்த ஒரு பெரிய சிறப்பு ஆகும். 

Santiago De Compostela -விற்கு 12-ம் நூற்றாண்டில் சென்ற திருப்பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது.. (அந்த கால கட்டத்தில் நம் புனிதர் செய்த மாபெரும் அற்புதத்தை பின்பு பார்க்கலாம்).

அங்கு உலகின் பல பகுதிகளிலிருந்து மக்கள் வருகிறார்கள் என்று பார்த்தோம். பெரும்பாலும் அவர்கள் நடை பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இப்படி நடைபயணமாக வரும் பயணிகளுக்கு என்று சிறப்பு பாஸ்போர்ட் சலுகை வழங்கப்படுகிறது. அது என்னவென்றால் வழி நெடுகிலும் அவர்களுக்கு சாப்பாடு இலவசம், குளிர் பானங்கள் இலவசம், தங்குமிடம் இலவசம் என்று நிறைய சலுகைகள் கொடுக்கப்படுகிறது. 

இப்போது கொரோனாவிற்கு முன் 2019 - ஆண்டில் பல நாடுகளிலிருந்து நடைப் பயணமாக வந்த திருப்பயணிகளின் எண்ணிக்கை மட்டும் 3,47,578 இதில் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 1,77,801 ஆண்களின் எண்ணிக்கையைவிட கூடுதல். 2018 லிருந்து பெண் நடைபயணிகள் கூடிக்கொண்டிருப்பதாக பதிவு ( Record) தெரிவிக்கிறது. இது தவிர சைக்கிளில், குதிரையில் மற்றும் படகில் செல்பவர்களும் ஏராளமானோர் உண்டு. வழக்கமாக விமானங்களில் செல்பவர்களும் அதிகம்.

மொத்தத்தில் நம் யாகப்பருக்கு ஒரு Record- இருக்கு உலகம் முழுவதும் அதிகமாக திருப்பயணிகள் செல்வதில் முதல் இடம் வகிப்பது ஸ்பெயின் தேசத்தில் புனித சந்தியாகப்பரின் கல்லறையில் எழுப்பப்பட்ட சண்டியாகோ டி கொம்பெஸ்தெல்லா ஆலயத்திற்குத்தான்.

கொம்பெஸ்தெல்லா என்றால் விண்மீன்களின் தோட்டம் என்று பொருள் (Campus of star). ஏற்கனவே நம் புனிதர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது நட்சத்திரங்களை வைத்துதான் என்று முந்தைய பகுதியில் பார்த்தோம்.

ஜெபம் : விண்மீன்களின் தோட்டத்தில் உம் திருச்சரீரம் துயில் கொண்டாலும் நீர் துயில் கொள்ளாமல் 24- மணி நேரமும் விழிப்போடும், துடிப்போடும் உம் பிள்ளைகளை பாதுகாத்து வருகிறீர்.. நீர் ஆலயம் கொண்டுள்ள இடங்களில் எல்லாம் உம் மக்களை விசேசமாக பாதுகாத்து வருகிறீர்.

உம்மை எந்த ஆபத்தில் இருக்கும்போது, எங்கு இருந்து அழைத்தாலும் உடனே ஓடி வந்து பாதுகாக்கிறீர்.. உமக்கு எங்கள் மேல் பாசமும், நேசமும் அதிகம்.

அருமைப் புனிதரே ! அற்புதப் புனிதரே ! நிறைய நேரங்களில் நேரில் வந்து காப்பவரே ! கண்ணுக்கு தெரியாத வைரஸ் என்னும் உடலுக்கு எதிரான நோய் அச்சுறுத்தல் ஒருபுறம்.. கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் ஆன்மாவுக்கு எதிரான பிசாசின் அச்சுறுத்தல்கள், சூழ்ச்சிகள் ஒருபுறம்.. இவைகளுக்கு மத்தியில்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..

நீர் வெளியில் தெரியும் எதிரிகளையும், தெரியாத எதிரிகளையும் அடித்து நொறுக்குவதிலும், விரட்டி அடிப்பதிலும் வல்லவர் என்று தெரியும்.. ஆகையால் நீர் வெண் குதிரையில் சாட்டையோடு வந்து இந்த இரண்டு எதிரிகளையும் முறியடித்து எங்களை ஆண்டவர் இயேசுவின் திருப்பாதத்தில் சேர்க்க படை மிரட்டி புனித சந்தியாகப்பரே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !