உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆன்மாக்கள் எத்தனை காலம் இருக்க வேண்டும்?

உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆன்மாக்கள் உத்தரிக்க வேண்டிய கால அளவு பின்வரும் காரணிகளை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

(அ) தவறுகளின் எண்ணிக்கை,
(ஆ) குற்றத்தின் நோக்கமும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளின் அளவும்.
(இ) உலகில் வாழும்போது பாவத்திற்காக அனுபவித்த தண்டனை மற்றும் செய்த பாவ பரிகாரங்கள்.
(ஈ) இறப்பிற் குப் பின், அவர்களது ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டவைகள்.

பொதுவில், நாம் சாதாரணமாக நினைக்கக் கூடிய கால அளவினை விட மிக மிக அதிக காலம் ஆன்மாக்கள் உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனையை அனுபவிக்கின்றன.

புனிதர்கள் எதிர்கொண்ட மற்றும் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

புனித லூயி பெர்ட்ராண்ட் அவர்களின் தந்தை ஒரு முன்மாதிரிகையான கிறிஸ்தவராக வாழ்ந்தவர். ஒரு பெரிய புனிதரின் தந்தையிடம் எதிர்பார்க்கப்படும் குணங்கள் பொருந்தியவர். கடவுளின் விருப்பம் வேறு என அறிந்து கொள்ளும் வரைதான் ஒரு கர்த்தூசியன் துறவியாக வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தவர்.

அதிக ஆண்டுகள் நல்ல கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து இறந்த பிறகு, கடவுளின் நீதியை நன்கு அறிந்த அவரது புனிதமான மகன், தாம் மிகவும் நேசித்த தந்தையின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக அதிக அளவில் பலி பூசைகளும் தவக்கிரியைகளும் ஒப்புக் கொடுத்தார்.

தனது தந்தை உத்தரிப்பு ஸ்தலத்திலேயே இன்னும் வேதனை அனுபவிப்பதை ஒரு தரிசனத்தில் கண்டு உத்தரிப்பு கடன் தீர்க்கும் கிரியைகளை நூறுமடங்காக தீவிரப்படுத்தினார். பலிபூசை ஒப்புக்கொடுத்தல், செப் முயற்சிகளுடன், கடுமையான பாவப் பரிகார செயல்களையும், உபவாசங்களையும் மேற்கொண்டார். இருப்பினும் அவரது தந்தை உத்தரிப்பு ஸ்தலத்தை விட்டு வெளியேற எட்டு முழு ஆண்டுகள் ஆயின.

இதே போன்று புனித மலாக்கியும், தனது சகோதரியின் ஆன்ம இளைப்பாறுதலுக்காக பல பலி பூசைகளும், செபங்களும், உடலை வருத்தி தவமுயற்சிகள் பல மேற்கொண்டும், நீண்ட காலங்கள் உத்தரிப்பு ஸ்தலத்தில் அவரது சகோதரியின் ஆன்மா வேதனையை அனுபவித்தது.

ஃபாம் லூனா என்ற இடத்தில், பல கார்மேல் சபை கன்னிகைகளின் ஆன்மாக்களை மீட்ட புனித கன்னிகை ஒருவருக்கு, அதில் அநேக ஆன்மாக்கள் 30 முதல் 60 ஆண்டுகள் வரை உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்பட்டதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் சிந்திக்க வேண்டும். உத்தரிக்கிற ஸ்தலத்தில், கார்மேல் கன்னிகைகளின் ஆன்மாக்களே நாற்பது, ஐம்பது மற்றும் அறுபது ஆண்டுகள் என உத்தரிப்பு கடன் அனுபவிக்க வேண்டியதிருந்தால், பலவிதமான சோதனைகளுக்கு மத்தியிலும், பல நூறுவிதமான பலவீனங்களுடனும் வெளி உலகில் வாழ்பவர்களின் நிலை என்னவாக இருக்கும்?

புனித வின்சென்ட் பெரர், தனது சகோதரியின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, தீவிர வேண்டுதல்களுடன் செபங்களும், பல திருப்பலிகளும் ஒப்புக்கொடுத்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவருடைய சகோதரி தரிசனமாகி, புனிதருடைய வல்லமையான பரிந்துரையினாலேயே தாம் மீட்படைந்ததாகவும், இல்லையென்றால் ஒரு மிக மிக நீண்ட காலத்திற்கு தாம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்க வேண்டியதிருந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

தேவபக்தி மற்றும் படிப்பிற்கு பெயர் பெற்ற தோமினிக்கன் சபையில், தங்களது சபை குருக்களுக்காக அவர்களது நினைவு நாளில் பெயர் சொல்லி செபிப்பது பாரம்பரிய கட்டளையாக உள்ளது. இதில் அநேக குருக்கள் மரித்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன! தேவையும், அத்தியாவசியமும் இல்லாமல் இருந்தால் இத்தகைய விதிமுறையை திருச்சபை பிறப்பித்திருக்காதல்லவா?

அனைத்து ஆன்மாக்களுமே, தண்டிக்கும் நெருப்பில் சமமாக நீண்ட காலம் வேதனையுற வேண்டும் என்பதாக அர்த்தம் கொள்ள வேண்டாம். அநேகர், குறைவான பாவங்களே செய்து அதற்காக அதிகமாக பாவப்பரிகாரம் மேற்கொண்டதால், மிகக் குறுகிய காலமே தண்டனையை அனுபவிக்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் ஒரு கருத்தினையே ஆழமாக வலியுறுத்திக் காட்ட விரும்புகிறது. வாழும் காலத்தில் பல புனிதர்களின் அன்பு, அரவணைப்பு மற்றும் பரிந்துரைகளைப் பெற்றும், இறந்தபிறகு அவர்களது தீவிரமான செபங்கள் மற்றும் பரித்தியாகங்களின் பலன்களை பெற்றிருந்தும், நீண்ட காலம் ஆன்மாக்கள் தண்டனையை உத்தரிக்கிற ஸ்தலத்தில் அனுபவித்தன என்றால் இத்தகைய பரிசுத்த சலுகைகள் ஏதும் இல்லாத நமது நிலை என்னவாக இருக்கும்?