நவம்பர் 30

உத்தரிக்கிற ஸ்தலத்தை நினைத்து தியானிக்கிறது எவ்வளவு நல்லதென்று காண்பிக்கிற விளக்கமாவது.

தியானம்.

இந்தக் கடைசி தியானத்தில், நமது நினைவினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இறங்கி நமது விசுவாசமாகிய ஞானக்கண்ணால் அதிலே அகோரமாய் எரியும் நெருப்பைக்கண்டு, அங்கே வெகுவாய் வருத்தப்படுகிற ஆத்துமாக்களைத் தரிசித்து, அதனால் நமக்கு யாதொரு சுகிர்த பிரயோசனத்தைத் தேட வேணும். இந்தத் தியானத்தினால் அநேக பெரும் பாவிகள் மனந்திரும்பினதுமன்றியே, தேவ ஊழியத்தில் அசட்டையாயிருந்தவர்களில் அனேகர் ஞானச் சுறுசுறுப்படைந்து உத்தம கிறிஸ்துவர்ளானார்களென்கிறது சரியே.

கிறிஸ்துவர்களே! நீங்களும் முன் தியானங்களில் சொன்னதைச் சுருக்கமாய்த் தியானிப்பதற்காகவும் உங்கள் பக்தியை எப்போதும் தூண்டி விடுகிறதற்காகவும் பின் வரும் புத்திமதிகளை தெரிந்து கொள்ளவேணும்:

முதலாவது சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்டு நமது ஆண்டவரான சேசுநாதருடைய திவ்விய இரக்கத்தினால்
மீட்டிரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமாக்கள் அவ்வளவு கடின வேதனைகளால் உபாதிக்கப் படுகிறதற்கு முகாந்தரமென்ன ? அவர்கள் பூலோகத்தில் கட்டிக் கொண்ட சொற்ப பாவங்களுக்கும் செய்ய வேண்டிய பரிகாரமே, இந்த வேதனைகளுக்குக் காரணமல்லாமல் வேறல்ல. இது இப்படியிருக்க இப்படிப்பட்ட வேதனைகளை வருவிக்கும் பாவங்களைக் சொற்பமென்று கருதி அவைகளை அச்சமின்றிப் பயமின்றிச் செய்யக்கூடுமோ?

இரண்டாவது எந்த பாவத்துக்கும் தேவ நீதியின் படியே பரிகாரம் செய்ய வேண்டுமென்பது சத்திய விசுவாசமல்லவோ ? இவ்வுலகத்திலே தான் அந்தப் பரிகாரத்தை , ஜெப தப தான தருமங்களினாலும் ,திருச்சபையின் பலன்களினாலும் நேரிடுகிற பற்பல துன்பங்களைப் பொறுமையோடு அனுபவிப்பதினாலும், வெகு எளிதாய்ப் பண்ணலாம். அப்படிச் செய்யாவிட்டால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மனோவாக்குக்கு எட்டாத வேதனைப்பட்டு அந்த பரிகாரத்தைச் செய்ய வேண்டியதாயிருக்குமென்பது தப்பாது. இது குன்றாத சத்தியமென்றறிந்து, நீங்கள் மென்மேலும் அதிக பக்தியோடும் சுறுசுறுப்போடும் உங்களாலான நற்கிரியைகள் எல்லாவற்றையும் நடப்பிக்கிறதுந் தவிர, வருகிற எல்லாப் பொல்லாப்புகளிலும் சலியாத பொறுமையை அநுசரிக்க வேணுமல்லவோ?

மூன்றாவது: எந்த மனுஷனுக்கும் பிரியப்பட வேணுமாகில் அவனுடைய பிள்ளைகளை நன்றாய் விசாரிக்க வேணுமென்பார்களே. அவ்வண்ணமே அவ்வளவு கடின ஆக்கினைகளைப்படுகிற அந்த ஆத்துமாக்கள் சர்வேசுரனுக்கும் சேசுகிறிஸ்துநாதருக்கும் மிகவும் உகந்த ஆத்துமமாக்களாகையால் அவர்களை மீட்டிரட்சிக்கப் பிரயாசைப்படுவது உத்தம தேவ சிநேகந்தான். அந்த ஆத்துமாக்களை மறந்து அவர்களுக்கு உதவிசகாயம் பண்ணாத மனுஷன், தான் சர்வேசுரனைச் சிநேகிக்கிறேனென்றால் தன்னைத்தானே ஏய்க்கிறானொழிய மற்றப்படியல்ல. மகனை நெருப்பிலே வேகவிடுவாயானால் அவனுடைய தகப்பனை நேசிக்கிறேனென்பாயோ? மேலும், சர்வேசுரன் உனக்குச் செய்த உபகாரங்களை மறந்தாயோ? நீ கட்டிக்கொண்ட பாவங்கள் எத்தனையென்று அறிவாயோ? அடைந்த உபகாரங்களுக்கு நன்றியறிதலைக் காண்பிக்கவும், பண்ணின துரோகங்களுக்கு மன்னிப்பை அடையவும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருப்பது உத்தம வழியல்லவா?

நான்காவது : அவ்வளவான வேதனைகளைப்படுகிற ஆத்துமாக்களைக் கண்டு, அவர்கள் புலம்புகிற புலம்பல்களையும் இடுகிற அபயக் குரல்களையும் கேட்டு புலி முதலாய் இரங்குமே. உங்களுக்குமாத்திரம் இரக்கமில்லாமற். போகுமோ அந்த ஆத்துமாக்கள் அகோர நெருப்பிலே வேகும்போது நீங்கள் சந்தோஷத்தைக் கொண்டாடலாமா? அந்த ஆத்துமாக்கள் இவ்வளவு துன்பப்படும்போது உங்களுக்கு நன்றாயிருக்குமோ?

ஐந்தாவது: உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் பக்தியுள்ளவர்களுக்கு நானாவித நன்மை பிரயோஜனம் வருமென்பது நிச்சயமாகையால், உங்களுக்கு வரக்கூடிய சொந்த ஆதாயத்தைப் பற்றியாவது அந்த ஆத்துமாக்களுக்கு வேண்டிய முயற்சியைப் பண்ணுங்கள். நீங்கள் இவ்வுலகத்தில் படுகிற சோதனைகளில் மோசம்போகாமலும், வருகிற துயரங்களில் கலங்காமலும், நேரிடுகிற பொல்லாப்புகளில் மயங்காமலும், நன்னெறியிலே வழுவாதொழுகி நன் மரணமடைந்து, பேரின்ப வீட்டுக்குப் போவோமென்று உறுதியான நம்பிக்கை உங்களுக்கு உண்டாயிருக்க வேணுமானால் அந்த ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருங்கள்.

ஆறாவது: உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ண அநேக நல்ல வழிகளிருப்பதால் வருத்தமின்றித் துன்பமின்றி அவர்களுடைய வேதனைகளை அமர்த்தித் தணித்துக் குறைத்து முடியச் செய்யலாமே. நீங்கள் தினந்தினம் வழக்கமாய்ச் செபிக்கும் ஜெபங்களையும். நடத்தும் நற்கிரியைகளையும் தகுந்த கருத்தோடே செய்வீர்களேயானால், எத்தனையோ பலன்களையும் ஞானத்திரவியங்களையும் அடையக்கூடுமே. அப்படியிருக்க அவைகளை உங்களுடைய அசட்டையினாலே இழந்து போய், ஆத்துமாக்களுக்கு வரக்கூடிய உதவி சகாயத்தைத் தடுக்கிறீர்களே. இது பெரிய அநியாயமல்லவோ?

ஏழாவது அந்த ஆத்துமாக்களுக்கு உங்களாலான , உதவிசகாயமெல்லாம் பண்ணவேணுமென்று உங்களுக்கு அதிக ஆசையாயிருக்கிறதோ, முன் சொன்னவண்னமே நீங்கள் அடையக்கூடிய பரிகாரப்பலன் யாவற்றையும் அவர்களுக்கு முழுமையும் நேர்ச்சி செய்துவிடுங்கள். அப்படிச் செய்பவர்களுக்கு இம்மையிலேயும் மறுமையிலேயும் தாங்கள் கொடுத்ததற்கு ஒன்றுக்கு நூறாகக் கொடுக்கப்படுமென்கிறதை ஒரு போதும் மறவாதேயுங்கள்.

எட்டாவது கடைசியிலே எந்தப்பிரகாரமாய் அந்த ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணியிருப்பீர்களோ அந்தப்பிரகாரமாய்த்தானே நீங்களும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படுகிறபோது உங்களுக்கு செய்யப்படும். உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கொஞ்சம் உதவி சகாயம் மாத்திரம் வருவிக்க விரும்புவீர்களேயானால், உங்களுக்கும் கொஞ்சம் உதவிசகாயந்தான் வருமென்பது நிச்சயமாகையால், இனிமேல் உங்களுக்கு வேண்டியதை இப்போதே சேகரித்துக் கொள்ளுங்கள்

கிறிஸ்துவர்களே ! நெருப்பிலே விறகு போடாதே போனால் நெருப்பு அவிந்து போகுமே. அவ்வண்ணமே இந்த மாதத்திலே உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் உங்களிடத்தில் பற்றுவித்த பக்தியானது குறைந்து அவிந்துபோகாதபடிக்கு வருஷத்தில் வரும் அந்தந்த திங்கட்கிழமைகளிலே இப்போது சொன்ன தியானங்களில் ஒவ்வொன்றாய் வாசிக்க வேணுமென்று அறியக் கடவீர்களாக

இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம் 

அர்ச் மரியாயின் மாசற்ற இருதயமே ! எனக்கு ஆதரவாய் இரும்

செபம் 

எங்களுடைய உத்தம ஏக நன்மையாகிய சேசுவே ! தேவரீர்  எங்கள் பாவங்களை உம்முடைய திருத்தோளின் பேரில் சிலுவையோடு சுமந்தீரே , இந்த மட்டில்லாத உபகாரங்களைப் பார்த்து மரித்த கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களுக்குக் கிருபை செய்யும். விசேஷமாய் ஆறுதலற்றிருக்கிறவர்கள் பேரில் அதிகமாய் இரங்கி அவர்களுக்கு விரைவில் மோட்ச வாசலைத் திறக்க அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று தேவரிரைப் பிரார்த்தித்துக்கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.

முப்பதாம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது

உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பக்தியோடு தேவநற்கருணை வாங்குகிறது.

புதுமை 

ஆயிரத்து எண்ணுாற்று அறுபத்தேழாம் ஆண்டில் பாஸ்பட்டணத்தில் ஓர் ஏழைப் பெண்மணி ஒர் எஜமானிடத்தில் ஊழியம் பண்ணிக்கொண்டிருந்தாள். அவள் மாதந்தோறும் தான் பெற்றுக்கொள்ளுகிற சம்பளத்தில் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு பூசைக்கு வேண்டிய பணங்கொடுத்துப் பூசை பண்ணுவிக்கிற வழக்கமாயிருந்தாள். எந்த ஆத்துமம் மோட்சத்துக்குப் போகிற தறுவாயிலிருக்குமோ அந்த ஆத்துமத்துக்கு அந்தப் பூசையை ஒப்புக்கொடுக்கவேணுமென்பாள். அவளுக்கு ஒரு கடின வியாதி வந்ததின் பேரில் தான் சேவித்த எஜமானை விட்டுவிட வேண்டியிருந்ததுமல்லாமல், தனக்குச் செளக்கியமாகிறதற்குத் தன் கையிலுள்ள பணமெல்லாம் செலவழிக்கவும் வேண்டியதாயிருந்தது.

கொஞ்சம் செளக்கியமாகி தான் வெளியே புறப்படுகிறநாளிலே அவள் கையில் அரை ரூபாய் மட்டும் இருந்ததல்லாமல் வேறே ஆஸ்தியில்லை. நல்ல நம்பிக்கையோடு சர்வேசுரனை பிரார்த்தித்துக்கொண்ட பிற்பாடு வேறே வேலை தேடப்போனாள். இவள் தேடப்போகையில் அர்ச் எஸ்தாக்கியாருடைய கோவிலைக் கண்டு அதில் கொஞ்சம் ஜெபம் பண்ணவேணுமென்று உள்ளே பிரவேசித்தாள். அந்நேரத்திலே ஒரு குருசுவாமியார் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து திவ்விய பூசை பண்ணிக்கொண்டிருந்தார். அதை அந்தப் புண்ணியவதியானவள் கண்டு, தான் அந்த மாதம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காகப் பூசை பண்ணுவிக்கவில்லையென்று நினைத்துக் வருத்தப்பட்டாள்.

ஆனால் தன்னிடத்தில் அரை ரூபாய் மாத்திரம் இருந்ததைப் பற்றி அதைக் கொடுத்து விட்டால் தான் என்ன செய்வதென்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். சற்று யோசித்தபிற்பாடு, பூசையைப் பண்ணுவிப்பேன். சர்வேசுரன் என்னை விட்டுவிடுவாரோ என்று நினைத்து, தன்னுடைய அரை ரூபாயை அங்கேயிருந்த வேறொரு குருவானவரிடத்திலே கொடுத்து உடனே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக பூசை பண்ண வேணுமென்று கேட்டாள்

அப்படியே அந்த பூசையை மகா பக்தியோடு தானுங் கண்ட பிற்பாடு தனக்கு ஏதேனும் பிழைப்பு கிடைக்குமோவென்று அஞ்சி நடந்து போனாள். கொஞ்ச தூரம் போன பிற்பாடு , ஒரு யோக்கியமான வாலிபன் அவளுக்கு எதிராய் வந்து ,  துக்கமுகத்தோடும் மகா வணக்க மரியாதையோடும், அவளுக்கு வந்தனஞ் சொல்லி நீ வேலை தேடுகிறாயல்லவோ? என்று அவன் கேட்க அவள் ஆமாம் ஐயா, வேலையைத்தான் தேடுகிறேன் என்றாள். அப்போது அவன் இன்ன தெருவீதியிலே இன்ன விட்டிலே இன்ன அரைசானியிடத்திலே போ அந்த துரைசானி உன்னை ஏற்றுக் நடத்துவாளென்றும் நீ அவளிடத்திலே நன்றாய் நிலைத்திருப்பாயென்றும்  நினைக்கிறேன்" என்று சொன்னவுடனே தெருவீதியிலே நடந்துக்கொண்டிருந்த ஜனங்களுக்குள்ளே மறைந்து போனான்.

அந்தப் புண்ணியவதியோவெனில் அவ்வாலிபன் சொன்ன வீதியையும் வீட்டையும் விசாரித்து குறிப்பிட்ட விட்டுக்குப் போனாள். போனவுடனே கதவைத்தட்டிக் கூப்பிடவே, ஒரு துரைசானி கதவைத் திறந்து அவளை உள்ளே வா என்று பட்சத்தோடு கூப்பிட்டாள். அவள் உள்ளே பிரவேசித்தவுடனே அம்மா, உங்களுக்கு ஊழியம் பண்ண ஒரு வேலைக்காரியைத் தேடுகிறீர்கள் என்று அறிந்து என்னை ஏற்றுக் கொள்ளுவீர்களோவென்று கேட்க வந்தேன் என்றாள்.

அதற்கு அந்த துரைசானியானவள் " என் பிரியமுள்ள தங்கச்சியே , நீ சொல்லுகிறது வெகு ஆச்சர்யமாய் இருக்கிறது . இப்போது தானே என்னிடத்திலே ஊழியம் பண்ணினவளைத் தள்ளினேன் . இது எனக்கு மாத்திரம் தெரியுமேயல்லால் வேறு யாருக்கும் தெரியாதே .  உன்னை அனுப்பினது யார் சொல் என்றாள்.

அதற்கு அவள் "நான் தெரு வீதியிலே நடக்கும் போது ஒரு நல்ல வாலிபனான துரை என்னை இவ்விடத்திற்குப் போகச் சொன்னான். ஆகையால் எனக்கு ஒரு காசு முதலாய் ஐவேசியில்லாததினாலே இன்றைக்கே ஏதாவது ஒரு வேலையில் நான் அமர வேனும்" என்றாள்.

அதை துரைசானியானவள் கேட்டு அதிகமாய் பிரமித்து அந்த வாலிபன் யாரென்று ஆலோசித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் பெண்ணானவள் சுற்றிலும் பார்த்து அந்த அறையில் தொங்கும் ஒரு படத்தைக் காட்டி "அந்த படத்திலேயிருக்கிற சாயல் என்னை அனுப்பின துரையினுடைய சாயல்" போலிக்கிறதென்றாள். துரைசானி அந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே பெருமூச்சுவிட்டு மூர்ச்சையாய் விழுந்தாற்போல சத்தம் போட்டுச் சொன்னதாவது "நீ என்ன சொல்லுகிறாய்? உனக்கு இன்றைக்கு சம்பவித்த சேதியை எனக்கு விவரமாய் சொல் "என்றாள். ஏழைப்பெண்

நடந்ததையெல்லாம் விவரமாய் சொன்னபிற்பாடு துரைசானி அவளைக் கட்டியனைத்து" நீ எனக்கு ஊழியக்காரியல்ல, மகள்தான்.இன்று நீ கண்ட வாலிபன் என் மகன்தான். அவன் இரண்டு வருஷத்துக்கு முந்திச் செத்துப்போய் நீ இன்று செய்வித்த பூசையினாலே உத்தரிக்கிற ஸ்தலத் திலிருந்து புறப்பட்டு மோட்சத்துக்குப் போயிருப்பானென்று எனக்கு நிச்சயமாய்த் தெரிகிறது. ஆனதினாலே நாம் இருவரும் இனிமேல் பிரியாமல் உத்தரிக்கிற ஆத்துமாக் களுக்காக வேண்டிக்கொள்ளுவோம் என்று சொல்லி, அவளைத் தன்னுடைய வீட்டிலே ஏற்றுக்கொண்டு தன் மகளைப் போல் நடத்தி வந்தாள்.

கிறிஸ்துவர்களே உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து இன்னின்ன காரியத்தைச் செய்து கொண்டு வருவோமென்று உறுதியான பிரதிக்கினை செய்ய வேணுமென்று அறியக்கடவீர்களாக

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.