கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் பாகம் - 06

“ அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே “

இந்த வாழ்த்து மூவொரு கடவுளின் வாழ்த்து. கபரியேல் தூதர் கடவுள்  சொல்லி அனுப்பியதை அன்னையிடம் சொன்னார். கடவுளே அன்னையை வாழ்த்துகிறார். அருள் நிறைந்தவர் என்றால் அருள் மட்டுமே நிறைந்தவர். பழைய ஏற்பாடுகளிலோ கடவுள் ஏத்தனையோ பேருக்கு தோன்றி இருக்கிறார். எத்தனையோ பேருக்கு செய்தி அனுப்பியிருக்கிறார். ஆனால் யாரையும் இப்படி வாழ்த்தியதும் இல்லை. வாழ்த்தப்போவதும் இல்லை

அருள் நிறைந்தவளுக்கு அடுத்தபடியாக, “ ஆண்டவர் உம்முடனே “ 

ஆண்டவராகி கடவுளாகிய நானே உன்னுடன் இருக்கிறேன் என்று கடவுளே சொல்லும் பேறு யாருக்கு கிடைக்கும். தூய்மையே உருவான கடவுளின் துணையிருப்பு யாருக்கு கிடைக்கும் தூய்மையான ஒருவருக்குத்தான் கிடைக்கும்.

அதை உறுதிபடுத்துவது போல் அடுத்த இறைவார்த்தை மரியே அஞ்சாதீர். கடவுளின் அருளை அடைந்துள்ளீர் “

கடவுளின் அருளை பெற்ற பின் பயம் ஏதற்கு ? என்று அன்னைக்கு அடுத்த இறைவார்த்தை.

இப்படி தூய்மையே உருவான அன்னைக்கு, கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட அன்னைக்கு கடவுளின் மீட்புக்காக தன்னையே அர்ப்பணித்த அன்னைக்கு, கடவுளுக்கு, ஆண்டவராகிய இயேசுவுக்கு என்றும் மகிமையாய், மணி மகுடமாய் விளங்கும் அன்னைக்கு, கடவுளுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் தாயாய் விளங்கி தன் அன்பான பிள்ளைகளை தன் திருக்குமாரனிடம் கொண்டு வந்து சேர்க்கும் சீடத்துவத்தை இன்றும் புரியும் இந்த தூய்மைக்கு, இந்த கருனைக்கு இது ஒரு சோதனை காலம்..

ஒரு புறத்தில் “எங்களுக்கு இந்த அன்னையே வேண்டாம் என்று ஒதுக்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல். அன்னையை நிந்திக்கும், பழிக்கும் ஒரு பகுதியினர். தாங்கள் கடவுளின் தாய்க்கு மட்டுமல்ல கடவுளுக்கும் அவசங்கை தருகிறோம் என்று நெஞ்சுரமும், நெஞ்சில் பயமும் இல்லாத ஒரு பகுதியினர். இவர்களிடம் பேசி பயனில்லை..

இன்னொரு புறம் திருச்சபைக்கு உள்ளே இருந்து கொண்டே அன்னைக்கும் ஆண்டவராக இயேசுவுக்கு மனக்கஷ்டம் ஏற்படுத்துகிறார்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் (எல்லாரும் அல்ல). நாங்கள் எல்லாரையும் திருப்திபடுத்தி எல்லாரையும் ஒன்றினைக்கிறோம் என்று விவிலயத்தை பொது மொழிபெயர்ப்பு என்று பெயரில் வெளியிடுவோம். முக்கியமான வசனங்களையே மாறினாலும் பரவாயில்லை. பொருள் மாறினாலும் பரவாயில்லை. அது யாருக்கு சாதகமாக அமைந்தாலும் பரவாயில்லை.

அன்னை அருள் நிறைந்தவள் அல்ல. அருள் மிகப்பெற்றவள்தான் என்று கூறி நாங்கள் மாடர்னாக, தூய தமிழில் சொல்லுகிறோம் என்று அருள் நிறைந்த மரியே என்று துவங்கிய மங்களவார்த்தை ஜெபத்தை மாற்றுவோம்.

உண்மையான அன்னையின் பிள்ளைகளின் வலி எங்கே அவர்களுக்கு புரிய போகிறது. ஆலய வழிபாட்டின் தூய்மை, பக்தி குறைந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு ஆடம்பரம்தான் முக்கியம். பக்தி முக்கியமா ? ஆடம்பரம் முக்கியமா?

மக்களுக்கு அறிவுறை கொடுக்கும்போது கூட புதுமையை புகுத்துவோம், பட்டிமன்றத்தை புகுத்துவோம். மற்ற சபையினர் போல் வைப்போம் (எல்லாரும் அல்ல)

அவர்களையும், இவர்களையும் யார் கேட்பது.?.

நாங்கள் கண்ணீர் விடுவது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்தாலும் கண்டு கொள்வதில்லை. எங்களின் நிலையோ, “தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார் “ என்றுதான் இருக்கிறது. யாரும் தவறாக எடுக்க வேண்டாம். 

ஜெபம் : என்றும் வாழும் மூவொரு இறைவா ! அன்னையை பற்றி உமக்கு தெரிந்த அளவுக்கு, உம் திருக்குமாரனுக்கு தெரிந்த அளவு, உம்முடைய தூய ஆவியானவருக்கு தெரிந்த அளவு எங்களுக்கு மட்டும் ஏன் தெரிய மாட்டேங்கிறது..

உம் திருமகனின் பிறந்த நாளை கொண்டாடும் முன் உம் திரு மகளான, உம் மாசில்லா அன்னையான எங்கள் தாய்க்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை, வணக்கம் கொடுக்கப்பட வேண்டும். உம் தாயின் தூய்மை மேலும் மேலும் போற்றப்பட வேண்டும். அவள் வாழ்த்தப்படவேண்டும் அதுவும் உம்மால் மீண்டும் நடக்க வேண்டும்.யாரும் எங்கும் அன்னைக்கு அவசங்கை ஏற்படுத்தக்கூடாது...

எல்லாம் வல்ல இறைவா எங்கள் அன்னைக்கும், உமக்கும் எந்த மனக்கஸ்டமும் கொடுக்காமல் உம் பிறப்பு விழாவை கொண்டாட எங்களையே தயாரிக்க வரம் தாரும் - ஆமென்

(இந்த கட்டுரையில் யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்)