அக்டோபர் 17

கர்த்தர் கற்றூணில் கட்டுண்டு அடிபடுகிறார்.

கோழை உள்ளம்  கொண்ட பிலாத்து இயேசுநாதர் குற்றமற்றவர் , நீதிமான் என்று தெளிவடைந்திருந்தும் துணிந்து நேர்முகமாக இயேசுவை விடுதலை செய்ய அஞ்சி பற்பல குறுக்கு வழிகளில் அவரை விடுவிக்கத் தேடினான் . பலனில்லை .யூதரின் மனத்தைக் கரைக்க எண்ணியவனாய் இயேசுவைக் கசையால் அடிக்கக் கற்பிக்கிறான் . என்ன கேவலமான தண்டனை . மனித யோக்கியதையை இழந்த பெரும் அக்கிரமிகளுக்குத் தான் இந்த ஆக்கினை . இந்த ஆக்கினைக்கு ஆளானவன் நாலு பேருக்கு முன் தலை காட்ட அஞ்சுவான் . எத்தகைய குரூரமான ஆக்கினை . கசையடி தாங்க மாட்டாமல் கட்டுமஸ்தான சரீரம் உள்ளவர்களில் பலர் அடிபடும்போதே சோர்ந்து செத்து வீழ்ந்திருக்கிறார்கள் . இயேசுவுக்கு நேர்ந்த இந்தக் கொடூர ஆக்கினையை நினைக்கும் போதே நாம் இதன் அர்த்தத்தை கண்டுபிடிக்காமல் மயங்குகிறோம் . மெய்யாகவே இறைவனுடைய இரகசியங்களில் இது ஒன்று

ஒரு தூணின் உச்சி நுனியில் ஆண்டவரின் கரங்கள் கட்டப்பட்டிருக்கின்றன .கால் விரல்கள் தரையை தொட்டும் தொடாமலும் இருக்கின்றன .ஆண்டவர் தொங்குகிறார் என்று சொல்லலாம் . சாட்டை நுனியில் சிறு ஈயக் குண்டுகளோ , எலும்புத் துண்டுகளோ முடியப்பட்டிருக்கின்றன .சேவகர்கள் அடிக்க வருகின்றனர் . இதைக் கண்டு ஆண்டவரின் உடல் முதல் நிமிடம் நடுங்குகிறது .அடிக்கிறார்கள் , சதை புடிக்கிறது . இரத்தக் கீற்றுகள் பாய்கின்றன . தோல் உரிகின்றது சதை துண்டு துண்டாய்ப் பறக்கிறது . இரத்தம் ஆறாய் ஓடுகிறது . முதுகு , தோள், நெஞ்சு , முகம் , கை , கால் , தொடை எங்கும் சரமாரியாய் அடி . ஆண்டவர் கண்களிலிருந்து கண்ணீர் ஓடுகிறது ; பெருமூச்சு விடுகிறார். அனர்த்துகிறார். அடித்து முடித்தவுடனே எலும்புக்கூடாய் சதையும் குருதியும் சேர்ந்த சேற்றில் இயேசு விழுந்து புழுப் போல் நெளிகிறார் . உருண்டு சென்று தன் ஆடையைத் தாமே தேடி எடுத்து அணிந்து கொள்ளுகிறார் .உதவிக்கு நாதியேது ?

உடலின்பத்தைக் கருதி மக்கள் கட்டிக் கொள்ளும் அக்கிரமங்கள் எத்தனை எத்தனை வகை ! நூதனம் நூதனமாக எத்தனை இனம் ! அவைகளுக்குப் பரிகாரமாக இக்கொடிய வேதனை ! சென்ம பாவதோஷத்தினால் மனிதனுக்கு இயற்கையாயுள்ள பலவீனத்தை ஆற்றுகிறார். மனிதன் தன் உடலுக்குத் தபம் அவசியமென்று காட்டுகிறார் . இன்பசுக நாட்டத்தின் அடிமைத்தனத்தினின்று தப்பிக்க ஆசிக்கிறவர்கள் இக்கசையடியில் இயேசுவோடு ஒன்றிக்க வேண்டும் . ஒருத்தல் ஜெப முயற்சிகளால் தங்களைத் தாமே கசக்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்காமல் ,ஈடேறலாம் என்று எண்ணி ஏமாந்து போகிறவர்கள் , கற்றூணில் கட்டுண்டு கசையடிபட்ட இயேசுவின் காட்சியைக் கண்டு பொய்காரப் பேயை ஓட்ட வேண்டும்

இயேசுவுக்கு நம் மேல் உள்ள அன்பு எத்தனை பெரிது ! எவ்வளவு தாராளமாய் நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்கிறார் . இயேசுவின் ஒரு சொட்டு கண்ணீர் , ஒரு துளி இரத்தம் ஒரு உலகத்தை அல்ல ஓராயிரம் உலகத்தையே ஈடேற்றப் போதும் . ஆனால் மோகப் பேயின் வலையில் வீழ்ந்த மனிதனின் மனம் அதைக் கண்டு அசையாது . இக்கொடிய வாதனை தான் சில பேருக்காவது பாவத்தின் அக்கிரமத்தை உணர்த்தும் .இயேசுவின் அன்பை நாம் அறிய வருவோமாக

வியாகுலத்தாய் அதை அறிவார் . அவர்தான் ஆண்டவரின் அன்பின் பெருமையை நமக்கு விளக்க வேண்டும் . இச்சமயம் மாசற்ற மாமரி எங்கு இருந்தார் ? பிலாத்தின் அரன்மனையண்டை பழுதற்ற கன்னிகை இருந்தார் என்றனர் சிலர் . இக்கோரக் காட்சியை எவாறு அவர் சகிக்கக் கூடும் என்பாயோ? அருகில் இல்லாவிட்டால் காட்சியால் இக்கண்ணறாவியை அவர் அவசியம் கண்டிருப்பார் . பல ஞானிகளின் எண்ணம் ஏதெனில் , பளீர் பளீர் என்னும் கசையின் அடியின் ஓசையையும் இயேசுவின் அனர்த்தத்தையும் பெருமூச்சையும் கேட்டார் , உள்ளது உள்ளபடி உணர்ந்தார் . தயையின் அரசி அதை எவ்விதம் தாங்கினார் ?

சரிதை.

வேத விரோதிகளும் , தேச விரோதிகளுமான ஹூகோனத்தியருக்கு விரோதமாய் 13 ஆம் லூயிஸ் என்னும் பிரான்ஸ் தேசத்து அரசன் போர் தொடங்கியபோது செபமாலை மாதாவின் அடைக்கலத்தைத் தேடினான் . பாரீசிலுள்ள ஜெபமாலை மாதாவின் ஆலயத்துக்கு கால்நடையாகத் திருயாத்திரை சென்றான் .எல்லோரும் சேர்ந்து செபமாலை சொல்லக் கட்டளையிட்டான் . 1627 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி பிரான்ஸ் பேராயர் , எல்லா குருக்கள் ,அரசி , பிரபுக்கள் , விசுவாசிகளின் பெருங்கூட்டம் நடுவில் செபமாலை சொன்னான். அரசனுடைய வெற்றிக்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் மோட்சத்திற்கு மன்றாட்டு பறந்து சென்றது . பாசறைகளிலும் செபமாலை செபிக்கத் தூண்டப்பட்டனர் . பதினையாயிரம் செபமாளைகளுக்கு மேல் சேவகர்களுக்கு வழங்கப்பட்டன . இரவும் பகலும் குறித்த நேரத்தில் சேவகர்கள் கூடி செபமாலை சொல்லி தேவதாயை வாழ்த்தினர் . செபமாலை செயமாலை அல்லவா ? பிரான்சிற்கும் கத்தோலிக்க மதத்திற்கும் வெற்றி !

பாரீஸ் பல்கலை கல்லூரி , இவ்வெற்றி ,செபமாலையினால் நடந்த புதுமையென்று உத்தியோக முறையில் பதிவு செய்து வைத்தது.

செபம்.

மத்தியஸ்தம் செய்யக் கருதிய பிலாத்தின் கோழைத்தனப் பிரயாசையால் தூணில் கசையால் அடிக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட ஆண்டவரே , மானிடர்களின் பலவீனத்தையும் புத்திக் கேட்டையும் கண்டு இரங்கும். சாந்த சுரூபியான இயேசுவே எங்களைப் பொறுமையுள்ளவர்களாய் ஆக்கியருளும் .

நாங்கள் இருக்கும் சூழ்நிலை பற்பல சமயங்களில் எங்களுக்குப் பெரும் வாதனையைக் கொடுக்கிறது . ஆதலால் அந்தச் சூழ்நிலை காசியைப் போல் எங்கள் வாழ்வைக் கிழிக்கிறது . அச்சூழ்நிலையைப் பொறுமையாய் நாங்கள் சகிக்க வேண்டும் . எங்கள் பலவீனத்தாலும் , அக்கிரமத்தாலும் , அறியாமையாலும் நாங்களே எங்களுக்குத் தானே பல இன்னல்களை விளைவித்துக் கொள்ளுகிறோம் .

எங்கள் பலவீனமும் அறியாமையும் பின்னிய சவுக்கு எங்களுக்கு வருவிக்கும் வாதனையையும் , துன்பங்களையும் முறையீடின்றிக் கௌரவத்தோடும் அவைகள் எங்களுக்கு உரியவை என்ற எண்ணத்தினால் உதிக்கும் தாழ்ச்சியோடும் உமது அரச சித்தத்திற்கு அமைந்து அவைகளை ஏற்றுக் கொள்ளக் கிருபை செய்யும் இயேசுவே

செபமாலை இராக்கினியே ! வியாகுலத் தாயே ! கற்றூணை நினைத்து உடலின்ப நாட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடக் கிருபை செய்யும்.

ஆமென்.