பன்னிரண்டு வயதில் காணாமற்போன கர்த்தரை தேவாலயத்தில் கண்டு களிகூர்ந்ததைத் தியானிப்போமாக.

சேசு கூறுகிறார்:

பன்னிரண்டு வயது பையனாக நான் தர்க்கித்த தேவாலயத்திற்குப் போவோம் - அதிலும் ஜெருசலேமுக்குச் செல்லும் சாலைகளுக்கும் ஜெருசலேமிலிருந்து தேவாலயத்திற்கும் செல்கிற வீதிகளுக்கும் செல்வோம்.

ஆண்களின் கூட்டமும் பெண்களின் கூட்டமும் சந்தித்த போது, நான் சூசையப்பருடன் இல்லாதிருந்ததைக் கண்டு பிடித்த மாதாவின் சஞ்சலத்தைப் பார்.

அவர்கள் சூசையப்பரைக் கசந்து கடிந்துகொள்ளவில்லை. வேறு எந்தப் பெண்ணும் அப்படிச் செய்திருப்பாள். நீங்கள் எவ்வளவோ சிறிய காரியத்திற்கும் அப்படிச் செய்கிறீர்கள்; ஆண் குடும்பத்தின் தலைவன் என்பதை மறந்துவிடுகிறீர்கள். ஆனால் எந்த கசந்த குற்றஞ்சாட்டுதலையும் விட அதிகமாக மாதாவின் முகத்தில் வெளிப்படும் துயரம் சூசையப்பரின் இருதயத்தை வெகுவாய் ஊடுருவுகிறது. மாமரி , எந்த உணர்வின் வெடிப்பிற்கும் இடமளிக்க வில்லை. நீங்கள் கவனிக்கப்படுவதற்கும் இரங்குதலுக்கும் விரும்பு வதால் மிக அற்பமானதற்கும் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். மாதா வின் அடக்கப்பட்ட துயரம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் நடுங்குகிறார்கள். முகம் வெளிறுகிறது. கண்கள் அகலத் திறக்கின்றன. இவற்றால், கண்ணீர்களையும் புலம்பல்களையும் விட அதிகமாக இரங்குதலை எழுப்பு கிறார்கள்.

அவர்களுடைய களைப்பும் பசியும் மறைகின்றன. பயணமோ நீண்டதாயிருந்தது. பல மணி நேரமாக அவர்கள் எதுவும் உண்ண வில்லை. ஆயினும் அவர்கள் தயாரித்த படுக்கையையும் பரிமாறு வதற்கு ஆயத்தமாயிருந்த உணவையும் விட்டுவிட்டு திரும்பிச் செல்கிறார்கள். இரவு நேரம். இருட்டாக இருக்கிறது. எதுவும் ஒரு பொருட்டாயில்லை. ஒவ்வொரு எட்டும் அவர்களை ஜெருசலேமை நோக்கிக் கொண்டு செல்கிறது. ஒட்டகப் பயணிகளையும் மற்ற யாத்ரீகர்களையும் நிறுத்தி விசாரிக்கிறார்கள். சூசையப்பர் மாதாவைப் பின் செல்கிறார். அவர்களுக்கு உதவி செய்கிறார். திரும்பவும் ஒரு நீண்ட நாள் நடைப் பயணம் ஜெருசலேமை அடைவதற்கு. அடைந்ததும் பட்டணத்தில் தீவிரமாக சேசுவைத் தேடுதல்.

அவர்களுடைய சேசு எங்கே? அவர் எங்கே இருக்கக் கூடும்? கடவுளின் ஏற்பாட்டின்படியே அநேக மணி நேரங்களுக்கு என்னை எங்கே தேடுவதென அவர்கள் அறிய மாட்டார்கள். தேவாலயத்தில் ஒரு குழந்தையைத் தேடுவதில் அர்த்தமேயில்லை. ஒரு குழந்தை பட்டணத்தில் தவறிப்போய் அவன் திரும்பவும் தேவாலயத்திற்கு வந்திருந்தால், அவன் தன் தாயைத் தேடி அழுதிருப்பான். அப்படி மக்களுடையவும் ஆலய குருக்களுடையவும் கவனத்தை ஈர்த்திருப் பான். அவர்களும் அவன் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்கு அறிவிப்புகளை வாசல்களில் வைத்து தேவையான நடவடிக்கை எடுத் திருப்பார்கள். ஆனால் அங்கே எந்த அறிவிப்பும் இல்லை. பட்டணத் தில் இருந்த யாருக்கும் இந்தக் குழந்தையைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அழகான பையனா? இளஞ்சிவப்பா? வலுவுள்ளவனா? அப்படிக் குழந்தைகள் ஏராளம் இருக்கிறார்களே! " அவனை நான் அங்கே கண்டேன், இங்கே கண்டேன்'' என்று யாரும் சொல்வதற்கு இந்த அடையாளங்கள் பற்றாது.

பின்னர், மூன்று நாளைக்குப் பிறகு மாதா களைத்துப் போய் தேவாலயத்தில் நுழைகிறார்கள். இந்த மூன்று தினங்களும் பின்னால் வரப்போகிற மூன்று நாள் அவஸ்தையின் அடையாளமாயிருந்தன. நான் மரித்தபின், உயிர்க்கும் வரை என் தாய் மூன்று நாட்கள் இதை விடக் கொடிய துயரத்தோடு என்னைப் பிரிந்திருப்பார்கள். தேவாலயத்தில் மாதா முற்றங்கள் வழியாகவும் நெடும் அறைகள் வழியாகவும் நடந்து செல்கிறார்கள். அவரைக் காணோம். ஒரு பைய னின் குரல் கேட்டபோதெல்லாம் அப்பக்கம் ஓடுகிறார்கள். பாவம்! பெற்ற தாய். ஆட்டுக்குட்டிகளின் கதறல் கூட தன் மகன் தன்னைத் தேடி அழுவது போல் அவர்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் சேசு அழுது கொண்டிருக்கவில்லை. அவர் போதித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று, ஒரு ஜனக் கூட்டத்திற்கு அப்பால் அவர் இப்படிச் சொல்கிற குரல் மாதாவுக்குக் கேட்கிறது : "இந்தக் கற்களே அதிரும்....'' என்று. அந்தக் கூட்டத்தினூடே செல்ல மாதா முயற்சிக்கிறார்கள். அதிகக் கஷ்டப்பட்டு போய்ச் சேருகிறார்கள். அங்கே நிற்கிறார் சேசு, சாஸ்திரிகள் மத்தியில் கைகளை விரித்துக் கொண்டு!

மரியம்மாள் விவேகமுள்ள கன்னிகை. ஆனால் இச்சந்தர்ப்பத்தில், கவலை விவேகத்தை மேற்கொள்கிறது. அது மற்ற எல்லாவற்றையும் உடைக்கும் சூறாவளி. மாதா சேசுவை நோக்கி ஓடுகிறார்கள். அவரை அரவணைத்துக்கொண்டு அவர் இருந்த மர ஆசனத்திலிருந்து அவரை இறக்கி தரையில் நிறுத்தி : "ஓ! எங்களுக்கு ஏன் இப்படிச் செய்தீர்? மூன்று நாளாக உம்மைத் தேடி அலைகிறோமே, மகனே! உம் தாய் வேதனையால் சாகிறாள். உம் தந்தை களைப்பால் சோர்ந்து விட்டார். ஏன் சேசு இப்படிச் செய்தீர்?” என்கிறார்கள்.

தெரிந்த அவரிடம் "ஏன்" என்று கேட்பதெங்ஙனம்? "எதற்காக" அவர் இப்படி நடந்து கொண்டார் என்று எவ்வாறு கேட்க முடியும்? தேவ அழைத்தல் பெற்றவர்களை, கடவுளின் குரலைப் பின் செல்வதற் காக அனைத்தையும் ஏன் விட்டுச் செல்கிறார்கள் என்று கேட்பதில்லை. நானே ஞானமாயிருக்கிறேன். எனக்குத் தெரிந்தே இருந்தது. நான் ஒரு அலுவலுக்கு அழைக்கப்பட்டேன்." அதை நிறைவேற்றினேன். பூமியில் தாய் தந்தைக்கு மேலாக தெய்வீக பிதாவான கடவுள் இருக்கிறார். அவருடைய காரியங்கள் நம்முடைய காரியங்களைவிட மேலானவை. அவருடைய விருப்பங்கள் மற்றெல்லாவற்றையும்விட சிறந்தவை. அப்படியே என் தாயிடம் நான் சொன்னேன்.

வேதபாரகர்களின் இராக்கினியான மாமரிக்கு இப்பாடத்துடன் அந்த சாஸ்திரிகளுக்கு என் போதனையை முடித்துக்கொண்டேன். அதை மாதா ஒருபோதும் மறந்ததில்லை. அவர்கள் பக்கத்தில் தாழ் மையான கீழ்ப்படிதலுடன் இப்பொழுது நான் கிடைத்து விட்டதால், அவர்களது இருதயத்தில் சூரியன் மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியது. ஆயினும் என் வார்த்தைகள் அவர்களின் மனதில் ஆழமாய் வேரூன்றி நின்றன. அவர்களுடன் நான் உலகில் இருக்கப் போகிற மீதி இருபத்தொரு வருடங்களிலும் ஆகாயத்தில் அதிக சூரிய ஒளியும் இருக்கும். அநேக மேகங்களும் திரளும். அந்த இருபத் தொரு ஆண்டுகளிலும் பெரிய மகிழ்ச்சிகளும், அதிக கண்ணீர்களும் அவர்களுடைய இருதயத்தில் மாறி மாறி நிகழும். ஆயினும்: ''மகனே எங்களுக்கு ஏன் இப்படிச் செய்தீர்?" என்று மட்டும் அவர்கள் இனிமேல் கேட்க மாட்டார்கள்.

தியானம்: மாதா அப்படிக் கேட்டதற்கு மற்றொரு காரணமும் இருப்பதாகத் தோன்றுகிறது. தம்முடைய சீடர்களாகிய நமக்கு இந்தப் பாடத்தைக் கற்பிக்கும்படியாக, ஆண்டவர்தாமே இந்த வார்த்தைகளைத் தம்முடைய தாயாரின் வாயிலிருந்து புறப்படச் செய்கிறார். அதன்பின், மாமரிக்குப் பதில் சொல்லும் விதமாக, அவர் நமக்கு ஓர் அழகிய போதனையைத் தருகிறார். சர்வேசுரனுக்கு ஊழியம் செய்வதாகிய மனிதனின் கடமைக்கு முன்பாக, எதுவும், யாரும் தடையாக இருக்க முடியாது. கிறீஸ்தவன் கிறீஸ்துவை முன்னிட்டே தன்னுடைய தாய் தந்தையருக்கும், குருக்கள், பெரியோருக்கும், ஏன், பாப்பரசருக்கும் கூட கீழ்ப்படிந் திருக்க வேண்டும். ஒரு வேளை, தனக்கு மேற்பட்டவர்களாகிய இவர்கள் சுயநலம், சுய நேசத்தின் காரணமாகவோ, உலகத் தன்மையான பாசத்தின் காரணமாகவோ, தேவ ஊழியத்திலிருந்து அவனைப் பிரிக்க முயல்வார்கள் என்றால், அவர்களுக்கல்ல, சர்வேசுரனுக்கே அவன் கீழ்ப்படிய வேண்டும் என்பதே அந்தப் பாடம்.

"ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் காரியங்களில் அலுவலாயிருக்கவேண்டுமென்று உங்களுக்குத் தெரியாதோ?'' (லூக். 2:49).