கர்த்தரை தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கிறார்கள்.

இஸ்ராயேல் மக்கள் எகிப்தை விட்டு ஓடிவரும் நாள் கர்த்தர் அவர்களுக்குக் கற்பித்திருந்ததாவது: இஸ்ராயேல் குடும்பத்தார் ஒவ்வொருவரும் ஓர் ஆட்டுக்குட்டியைக் கொன்று அதன் இரத்தத்தை வெளிக் கதவில் தடவ வேண்டும். அன்றிரவு தேவதூதர் இரத்தம் பூசப்பட்ட இல்லங்களில் ஏகாமல் இல்லாத இல்லங்களில், எகிப்தியர் வீடுகளில் இறங்கி தலைச்சனான ஆண் மகவைக் கொன்று விட்டனர் . இவ்விதம் இஸ்ராயேலர் காப்பற்றப்பட்டதால் இவர்களுடைய தலைச்சன் ஆண் குழந்தைகள் இறைவனுக்கு விசேஷ விதமாய்ச் சொந்தமானார்கள். அவர்களை ஆண்டவருடைய ஊழியத்திற்கு நேர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் ஆலய ஊழியத்திற்கு லேவி வம்சத்தார் தேர்ந்து கொள்ளப்பட்டதால் கடவுளுக்கு நேர்ந்து கொள்ளலாம் . வேறொரு சம்பவம் என்னவெனில் குழந்தையை பெற்றெடுத்த தாய் சட்டரீதியில் அசுத்தமானவளாகக் கருதப்பட்டாள். பேறு காலத்திற்குப் பின் நாற்பதாம் நாள் ஆலயத்தில் காணிக்கை செலுத்தி சுத்திகரம் செய்யப்படுவாள்.

யூதர்களுக்குப் பற்பல ஊர்களில் செபக்கூடங்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரே தேவாலயம் . அது எருசலேமில் இருந்தது. நாற்பதாம் நாள் குழந்தை சேசுவை கைத்தாதை சூசையும் கன்னித்தாயும் இங்கு கொண்டு வந்தனர். சாலமன் எழுப்பிய ஆலயத்தை விட இது மதிப்பில் குறைந்தது . எனினும் தீர்க்கதரிசிகள் இதை " அதைவிட மகிமை பொருந்தியது . ஏனெனில் தேவாதி தேவன் மெசியா அங்கு வருவார் " என்று சொல்லிப் போயினர்

இதோ ஆண்டவர் வருகிறார் . சிறு குழந்தையாக பெற்றோரால் தூக்கிக் கொண்டு வரப்படுகிறார் . கோவிலில் நேர்ந்து கொள்ளப்பட " அழிக்கவல்ல , நிறைவேற்றவே வந்தேன் " என்ற வாக்குக்கு இணங்கச் சட்டத்தை ஏற்படுத்தியவரே அதற்குப் பணிந்து நடந்து அதை நிறைவேற்றுகிறார் . எனினும் சட்டம் அவரைக் கட்டுப்படுத்தாது . அதே போல் சுத்திகரச் சடங்கு உட்படக் கன்னித் தாய்க்குத் தேவையில்லை . அசுத்தம் அல்லது குறை என்பது எந்த வழியிலும் அவளிடம் சிறிதளவும் இல்லை . ஆதலால் தம் மகனைப் பின்பற்றி அவரும் சட்டத்துக்குப் பணிந்து நடக்கிறார்.

அதனால்தானா முதல் கிறிஸ்தவர்களுக்குக் கீழ்ப்படிதலின் மேல் விசேச ஆர்வம் ? புண்ணிய சிகரத்தில் ஏறுவதற்கு ஏற்ற புத்திமதி கீழ்ப்படிவதாம் . பெற்றோர்கள் தங்கள் மக்களுக்கு கீழ்ப்படிதலின் கண்ணாடியாக இருக்க வேண்டும் . தாய் தகப்பனுக்கு மக்கள் எல்லா விதத்திலும் பணிந்து நடக்க வேண்டும். இருவரும் திருச்சபைச் சட்டங்களையும் , இறைவனின் கற்பனைகளையும் பிரமாணிக்கமாய்க் காப்பாற்ற வேண்டும் . ஊரில் பெரியவர்கள் , தலைவர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் பங்கு சுவாமியார் , ஆயருடைய திட்டங்களுக்கு செவிசாய்த்து நடக்க வேண்டும் . துறவற மடங்களில் தலைவர்களும் , தாய்மார்களும் ஒழுங்குகளை நுணுநுணுக்கமாய்   அனுசரிப்பதில் முதலில் நிற்க வேண்டும்

சிமியோனும் அன்னாளும் குரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் . இக்காலத்திலும் சில ஆலயங்களில் பார்க்கலாம், சில வயோதிகர்கள் கோவிலிலேயே கதியாய்க் கிடந்து செபமாலை சொல்லிக் கொண்டோ , தேவ நற்கருணைப் பேழையை நோக்கிக் கொண்டோ இருப்பார்கள். இவர்களைப் போலத்தான் சிமியோனும் அன்னாளும் தேவாலயத்தை ஓயாமல் தரிசனம் செய்து வந்தனர். அவர்களது பிரமாநிக்கமுள்ள உண்மையான வைரம் பாய்ந்த பக்திக்கு கடவுள் சன்மானம் அளிக்கச் சித்தமானார் . உலக இரட்சகரைக் கண்டு களித்தனர் . அந்நாளில் வேறு யாருக்கு இப்பாக்கியம் கிட்டியது ?

அர்ச் சூசையப்பர் எங்கே ? என்ன மறைந்த வாழ்க்கை , எவரும் அவரைச் சட்டை செய்ததாகத் தெரியவில்லை . தேவாதி தேவனுடையவும் , மேலுலக அரசியினுடையவும் , பிரமாணிக்கமுள்ள அன்பும் , கீழ்ப்படிதலும் அவருக்கு இருந்தன . இயேசுவைக் கையில் ஏந்தி நெஞ்சோடணைத்துக் கொஞ்சி விளையாடும் செல்வாக்கு அவருடையது . வேறென்ன வேண்டும் ? உன் ஜீவியத்தின் ,அக வாழ்வின் பேரின்பம் எவ்வளவு பெரியது ?

கர்த்தரைக் காணிக்கையாகக் கொடுத்த இலாபம் , பொருள் மாமரிக்கு எது ? 'உம் ஆத்துமத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும் .' சிறிது நாளில் எகிப்திற்கு ஓட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் . அப்பிரயாணத்தில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் என்ன பயம் ! என்ன கிலேசம் !

தம் மகனைப் பிதாவுக்கு நேர்ந்துகொண்டபோது அவரோடு அவரிலும் மனுக்குலம் முழுவதையுமே பிதாவுக்கு அன்னை நேர்ந்து கொண்டார். அவரது சித்தத்தை ,அவர் நோக்கப் பிரகாரம் நிறைவேற்றுவதற்காக .

இயேசு தாமே உண்மையும் , உயிரும் , வழியும் . அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் கற்றுக் கொடுத்த சத்தியத்தை ஏற்றுக் கொண்டு ,அவர் சீவியத்தை சீவித்து உலகின் எதிர்ப்பையும் , பழிச் சொல்லையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் . ஒவ்வொருவரும் தம் சொந்த எண்ணத்தையும் , நேர்மையற்ற நாட்டங்களையும் , வீட்டையும், வாசலையும் , உற்றார் பெற்றோரையும் விட்டு விட்டு சேசுவோடு சிலுவை மட்டும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.