கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமே ஜெபம்தான்!

அது சரியாக உறுதியாக இருக்கும்போது மாத்திரமே அழகான தேவனுக்குகந்த மாளிகையாக நம் வாழ்வை கட்டி எழுப்ப முடியும்.

ஒரு வேளை நம்முடைய ஜெப அனுபவம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். ஒரு நாள் உணர்ச்சி பூர்வமான இருக்கும். மற்றொரு நாள் அப்படியிராது. இன்னொரு நாள் தேவ பிரசன்னத்தை அதிகமாக உணர்வோம், அதினால் ஜெபத்தில் உற்சாகமடைவோம். இதை போலவே மற்றொரு நாள் அப்படி இல்லையென்றால் நாம் சோர்ந்து விடக்கூடாது. நான் ஜெபிப்தை தேவன் கேட்டிருப்பாரா என்ற சந்தேகம் எழக்கூடாது. அதாவது நமது ஜெப ஜீவியம் உணர்ச்சியை சார்ந்தாக இல்லாமல், உள்ளத்தின் உண்மை நிலையை சார்ந்தாhகவே இருக்க வேண்டும். சில வேளைகளில் நமது ஜெபத்தில் சோர்வு வரும். ஆகவே தான் தேவன் சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணுங்கள் என்றார். கர்த்தர் நம் உணர்ச்சிகளை பொறுத்தல்ல, நம் உள்ளத்தின் தாகத்தையும் வாஞ்சையையும் பொறுத்தே அவருடைய சித்தத்தின்படி பதிலளிக்கிறார்.

சிலர் நல்ல மனநிலை இருந்தால் மட்டும் ஜெபிப்பார்கள். இன்னும் சிலர் ஒரு நாள் நன்றாக ஜெபித்து விட்டால், ஒரு வாரம் ஜெபத்திற்கு லீவு போட்டு விடுவார்க்ள. பலர் கவலைகள் அதிகமாக நெருக்கும்போது மட்டுமே ஜெபிப்பர். இன்னும் பலர் நன்மையாக நடக்கும்போது மட்டுமே கர்த்தரை துதித்து பாடுவர். இப்படி உணர்ச்சியை சார்ந்து நமது ஜெபம் இருப்பதாலே அவ்வப்போது சோர்ந்து போய் விடுகிறோம். ஆனால் சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் ஜெபத்திலே உறுதியாய் தரித்திருப்போமானால் அதுவே வெற்றியுள்ள கிறிஸ்தவ ஜீவியமாகும்.

பிரியமானவர்களே, நம்மில் அநேகர் 'ஜெபமா, அது ரொம்ப கஷ்டம், டைம் கிடைப்பது இல்லை, ஜெபிக்க ஆரம்பிக்க போதுதான் எத்தனையோ எண்ணங்கள் வந்து ஜெபத்தில் கான்சென்ட்ரேட் பண்ண முடியவில்லை' என்று சர்வ சாதாரணமாக சொல்லி விடுகிறோம். அதே சமயம் வேலையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், வேலைக்கு தவறாமல் சென்று விடுகிறோம். பிள்ளைகளை சிரமப்பட்டு படிக்க வைக்கிறோம். சமையல் செய்ய இஷ்டம் இல்லாவிட்டாலும் தினமும் செய்கிறோம். ஆனால் ஜெபம் செய்ய மட்டும் முடிவதில்லை.

நம்மோடு கூட வராத அநேக கரியங்களுக்காக நம் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கும்போது நம் வாழ்வை ஆசீர்வாதமாய் மாற்றக்கூடிய ஜெபத்தை தினமும் கட்டயமாக்குவது எத்தனை அவசியம்? மனிதருக்காக நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய நல்ல காரியம் அவர்களுக்காக ஜெபிப்பதும், அவர்களுக்காக தேவனிடத்தில் திறப்பில் நிற்பதுமே என்றார் ஒரு வல்லமையான ஊழியர்.

இந்த நாட்களில் ஜெப வாழ்வே ஒவ்வொரு கிறிஸ்தவர்களிடமும் குறைந்து காணப்படுகிறது. ஓவ்வொரு கிறிஸ்தவரும் முழங்காலில் நிற்க ஆரம்பித்து விட்டால் சத்துரு நமது வீடுகளிலோ, வீதிகளிலோ, ஊர்களிலோ, நாட்டிலோ நிற்க முடியாது. ஆனால் ஜெபக்குறைவினாலேயே கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவமும், பிரச்சனைகளும். முழங்காலில் நிற்க ஆரம்பிப்போம். நமது குடும்பத்திற்காக, சபைக்காக, ஊழியங்களுக்காக, நாட்டிற்காக ஜெபிக்க ஆரம்பிப்போம். அந்த ஜெபங்களின் மூலம் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.

ஆமென்.