மாதாவின் வேறு பிள்ளைகள்!

இதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் வசனங்கள் மாற்கு. 6:3, மத். 13:55 மற்றும் மத்.12:47 ஆகியவை .

ஆனால் மாற்கு 6:3இன் கடைசிப் பகுதி மற்றும் மத். 13:57 ஆகியவற்றை வாசித்தால், இவை இயேசுவை ஏற்றுக் கொள்ளாதாரின் வசனம் என்று அடையாளம் காட்டுகின்றன. எனவே இந்த வசனங்களை ஆதாரம் காட்டக் கூடாது.

மேலும் பைபிளில் சகோதரர் என்று வரும் இடங்களில் அப்படியே அர்த்தம் கொள்ளக் கூடாது. ஏனெனில் தன் சகோதரன் மகன் லோத்தைக் (ஆதி. 11:27) கூட சகோதரன் என்று அழைக்கிறார் ஆபிரகாம் (காண்க. தொ. நூல் 12:5 அல்லது ஆதி. 13:8).

மேலும், இயேசுவின் சகோதரர் என்று குறிப்பிடப்படும் யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாய் மத்தேயு 27:56-ன் படியும், யோவான் 19:25 இன் படியும் வேறு ஒரு மரியாள். அந்த மரியாள் தேவமாதாவின் சகோதரியும் கூட. அவளது கணவன் பெயர் கிளேயோப்பா. அப்படியானால் இயேசுவின் தாயின் சகோதரியின் பிள்ளைகள் இயேசுவுக்குச் சகோதரர்கள் தானே.

இன்னும் மாற்கு 6:3இன்படி ஆண்டவர் இயேசுவோடு பிறந்தவர்கள் ஆறு பேர் என்று அர்த்தம் வரும் ; இயேசு மூத்தவர். அப்படி யானால் 12 வயதில் அவர் காணாமல் போனபோது மற்ற ஆறு பிள்ளைகள் எங்கே? மேலும் உடன்பிறந்த வர்கள் ஆறு பேர் இருக்கும்போது சிலுவையடியில் ஏன் தன் தாயைத் தன் சகோதரன் அல்லாத யோவானிடம் ஒப்படைத்தார் இயேசு? இதன் மூலம் மாதாவுக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்பது தெளிவு.

ஆனால் மேலே சொன்ன எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த ஆதாரம் ஒன்று உண்டு! அது பிதாவாகிய இறைவன் தரும் ஆதாரம். கபிரியேல் தூதர் வழியாக மாதாவிடம் பிதா கொடுத்த வாக்குறுதி இதோ! கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர் (லூக்.1:31) அதாவது மாதா கருவுறுவதும், பெறுவதும் ஒரு முறை;

ஒரே மகனை என்பது பிதாவின் வாக்குறுதி. இதற்கு மேல் மாதாவின் மேல் அவதூறு சொல்பவர்கள் மாதா மீது அல்ல, மாறாகப் பிதாவானவர் மீதே அவதூறு சொல்கிறார்கள்; அவரை எதிர்க்கிறார்கள். எனவே பிதாவின் ஆணைப்படி மாதா கருவுற்றுப் பெறுவது ஒரு மகனை மட்டுமே.
இனி அவர்கள் மற்ற பிள்ளைகளைப் பெற வேண்டுமானால் கருவுறாமல் பெறுவார்கள். உலகம் முழு வதும் உள்ள பிள்ளைகளைப் பெறுவார்கள். இதையே யோவான் 19:26-27ம், திருவெளிப்பாடு 12:17ம் தெளிவாக்குகிறது.

எனவே மாதாவுக்குப் பல கோடி பிள்ளைகள் உண்டு. ஆனால் கருவுற்றுப் பெற்றது இயேசு ஒருவரை மட்டுமே. மேலும் லூக். 1:34-ன்படியும், எசேக்கியேல் 44 : 2 இன்படியும், உன்னத சங்கீதம் இனிமை மிகு பாடல்) 4:12 இன் படியும் மாதாவின் கன்னிமை மாற்றப்பட முடியாதது. அது நித்திய கன்னிமை.