குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
அருள்வாக்கு பிலிப் 2:5-11
தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்.
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர்,கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
(சிறிது நேரம் மெளனம்)
குரு: மன்றாடுவோமாக:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, மனிதரை மீட்க மனுவுரு எடுத்த உம் திருமகனின் அடையாளமாய் அமைந்து உமது கனிந்த அன்பை நினைவூட்டும் இந்தச் சிலுவையை ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இது உம் மக்களுக்கு விசுவாச வாழ்க்கையின் சின்னமாகவும், மனிதரின் மீட்பாகவும், துன்பங்களில் ஆறுதலாகவும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் கருவியாகவும் வாழ்க்கையின் நம்பிக்கையாகவும் இருப்பதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு சிலுவையின்மேல் தீர்த்தம் தெளிப்பார். தூபமும் காட்டலாம். அனைவரும் சிலுவைக்கு வணக்கம் செலுத்தி முத்தி செய்கின்றனர்.)