வீடுகளை மந்திரித்தல் : பொது- II

(விரிவானது)

குரு: இவ்வீட்டிற்கும் இங்கு வாழ்வோர் அனைவருக்கும் அமைதி உண்டாவதாக.

(குரு திருவுடைகளை அணிகிறார்.)

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: பரம தந்தையின் பரிவும், திருமகனின் அன்பும், தூய ஆவியின் அருளும் உங்களோடு இருப்பதாக.

எல்: உம்மோடும் இருப்பதாக.

தொடக்க வழிபாடு

குரு: அன்பார்ந்த சகோதரரே, சகோதரிகளே! இச்சடங்கிலே நாம் அனைவரும் தகுந்த விதமாய்ப் பங்குகொண்டு இறையருளைப் பெற, நம் பாவங்களை நினைத்து மனம் வருந்துவோம்.

குரு: அனைத்தையும் படைத்த ஆண்டவரே, இரக்கமாயிரும். 

எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

குரு: பாவிகளைத் தேடிவந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும். 

எல்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

குரு: ஆறுதல் தரும் ஆண்டவரே, இரக்கமாயிரும்.

எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

குரு: (கையை நீட்டி) எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்: ஆமென்.

அருள்வாக்கு இச. 7:6-9

அந்நாள்களில் மோசே மக்களை நோக்கிக் கூறியதாவது : உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார். எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள் என்பதற்காக ஆண்டவர் உங்கள்மீது அன்பு கொண்டு உங்களைத் தேர்ந்து கொள்ளவில்லை. உண்மையில், எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்களே! மாறாக, உங்களிடம் அன்புகூர்ந்ததனாலும், உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டும், ஆண்டவர் தமது வலிமைமிகு கரத்தால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்து மன்னனாகிய பார்வோனின் கையினின்றும் உங்களை விடுவித்தார். எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் எனவும், அவரே உண்மையான இறைவன் எனவும் அறிந்து கொள்ளுங்கள். அவர்மீது அன்பு கூர்வோர்க்கும் அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கும் ஆயிரம் தலைமுறைவரைக்கும் தம் இரக்கத்தின் உடன்படிக்கையைக் காக்கின்றவர் அவரே!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 33:1,2,4,5,20,21

பதிலுரை : ஆண்டவர் பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

1. நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். – பல்லவி

2. ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. – பல்லவி

3. நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். - பல்லவி

நற்செய்தி யோவா. 15:9-12

அந்நாள்களில் இயேசு கூறியதாவது : "என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

(விருப்பமானால் குரு மறையுரை ஆற்றலாம்.)

மன்றாட்டுகள்

குரு: இயேசுவில் அன்பார்ந்தவர்களே! உலகெங்கும், சிறப்பாக இவ்வீட்டில் உண்மையான அன்பு என்றும் தொடர்ந்து வளரச் செபிப்போமாக.

1. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ, திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. இக் குடும்பத்திலுள்ள அனைவரும் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ இறைவா, உம்மை மன்றாடுகிறோம். 

3. உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவ்வீட்டில் வாழ்வோர் அனை வரும், உமது திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாய் விளங்க வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம். 

4. எங்கள் பங்கு மக்களை ஆசீர்வதித்து, எல்லாரும் இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்ந்து, சமுதாயத்தில் செழித்தோங்க வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு முடிவில்லா வாழ்வை அருள இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

குரு: (கைகளை விரித்து) அனைத்துக் குடும்பங்களையும் காத்து ஆண்டுவரும் இறைவா, இக்குடும்பத்தினர் உம் திருமுன் சமர்ப்பிக்கும் இம்மன்றாட்டுகளைக் கேட்டு, இவர்களின் இதய ஆவல்களை நிறைவேற்றுவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

குரு: இறைவா இவ்வீட்டையும், இதில் வாழ்வோரையும், இங்குள்ள பொருட்களையும் ஆசீர்வதித்தருளும், அனைத்துத் தீமைகளிலிருந்தும் இவர்களைக் காப்பாற்றும். உமது அமைதியை இவர்கள்மீது பொழிந்து, என்றும் உம் ஆவியை இவர்கள்மீது தங்கச் செய்யும். இம்மன்றாட்டுகளை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எங்களுக்கு நிறைவேற்றித் தந்தருளும்.

எல்: ஆமென்.

(குரு தீர்த்தத்தால் வீட்டை மந்திரிக்கிறார். அப்பொழுது மக்கள் கீழ்க்கண்ட பாடலை அல்லது வேறொரு பாடலைப் பாடலாம்.)

ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர் 
ஆண்டவரே நான் தூய்மையாவேன். 
நீரே என்னைக் கழுவ நானும்
உறைபனி தனிலும் வெண்மையாவேன்.

அல்லது

உம்மீது தூய நீரைப் பொழிந்திடுவேன் 
மாசு மறு அனைத்தினின்றும் தூய்மையாவீர் 
புதியதொரு இதயத்தை யாம் உமக்குத் 
தந்திடுவோம் என்கிறார் நம் இறைவன்.

(இறுதியாக, வீட்டார் மீது குரு தீர்த்தம் தெளித்து கீழுள்ள செபத்தைச் சொல்கிறார்.)

நாம் பெற்ற திருமுழுக்கை இத்தீர்த்தம் நினைவூட்டுவதாக. தம் பாடுகளாலும் உயிர்ப்பினாலும் நம்மை மீட்ட கிறிஸ்துவையும் நமக்கு நினைவுபடுத்துவதாக.

குரு: நம் மீட்பர் இயேசு நமக்குக் கற்பித்தவாறே. நாம் நம் பரம தந்தையை நோக்கி உருக்கமுடன் செபிப்போம்.

எல்: பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே ...

ஆசியுரை

குரு: (தம் இரு கைகளையும் அல்லது ஒரு கையை மக்கள்மேல் நீட்டி) 

தந்தை உங்கள்மீது அன்புகூர்ந்து, உங்களுடன் வாழ்வாராக. 

எல்: ஆமென்.

குரு: இறைமகன் உங்களோடு தங்கி, உங்களுக்குத் தமது அமைதியை அருள்வாராக.

எல்: ஆமென்.

குரு: இறை ஆவி உங்கள்மீது இறங்கி, உங்களுக்கு அனைத்தையும் கற்பிப்பாராக.

எல்: ஆமென்.

குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து என்றென்றும் காப்பாராக.

எல்: ஆமென்.