உத்தரிக்கும் ஸ்தலம் -8 : புனித தந்தை பாத்ரே பியோவின் அனுபவங்கள்..

ஓர் ஆன்மா உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்க வேன்டிய நேரத்தை தந்தை பியோ தீர்மானிக்கிறார்.

பாத்ரே பியோ தம்மிடம் சொன்ன ஒரு நிகழ்வு பற்றி தந்தை பியோவின் வார்த்தைகளில் பாத்ரே அனஸ்தாஸியோ தரும் சாட்சியம்...

“ ஒரு நாள் இரவில் கோவிலில் நான் தனியாக இருந்தேன். அங்கே அவ்வளவு நேரத்திற்கு பிறகு ஒரு துறவி பீடத்தை சுத்தப்படுத்திக்கொண்டு இருப்பதை நான் பார்த்தேன். வெகு நேரமாகிவிட்டதால் படுக்கச் செல்லுமாறு நான் அவரிடம் கூறினேன். அவர் என்னிடம்: “ நானும் உங்களைப் போன்ற ஒரு துறவிதான். இங்கேதான் என் நவ துறவறத்தைச் செய்தேன். அதன் பின் பீடத்தைக் கவனிக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. நான் தேவ நற்கருணைப் பேழைக்கு முன் முழந்தாழிடாமல் பல தடவைகள் அதற்கு குறுக்காக அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தேன். இந்தப் பாவத்திற்காக இப்போது நான் உத்தறிக்கிற ஸ்தலத்தில் இருக்கிறேன்.

ஆண்டவர் என்னை உங்களிடம அனுப்பினார். இன்னும் எவ்வளவு நேரம் நான் அந்தத் தீச்சுவாலைகளில் துன்புற வேண்டும் என்று நீங்கள்தான் தீர்மாணிக்க வேண்டும் “ என்று அவர் கூறினார். நான் அவரிடம், “ காலையில் பூசை முடியும் வரை “ என்றார். அவர் உடனே “ கொடூரம் “ என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். இது என் இதயத்தில் ஏற்படுத்திய காயம் இன்னும் உள்ளது. நான் அவரை உடனடியாக மோட்சத்திற்கு அனுப்பியிருக்கலாம். அதற்குப்பதிலாக, அவரை காலைவரை அவர் காத்திருக்கும்படி செய்துவிட்டேன் “

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், கிடைக்குமிடம் மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி. புத்தக தொடர்புக்கு சகோ.நேவிஸ் Ph :85258 21634

சிந்தனை : இது மிக மிக சிந்திக்க வேண்டிய விஷயம். திவ்ய நற்கருணை முன்பு நிறைய பேர் மண்டியிடுவதில்லை. குறுக்கும் நெடுக்குமாக சர்வ சாதாரணமாக நடக்கிறார்கள். அட்லீஸ்ட் ஒரு கால் முட்டியாவது போட வேண்டும்.. திவ்ய நற்கருணை ஆண்டவர் முன் நிறைய பேரின் கழுத்துகள் வணங்குவதில்லை. சிலருக்கு 5 டிகிரிக்கு மேல் கழுத்து எப்போதும் வணங்குவதில்லை. நிறைய பேர் எழுந்தேற்ற நேரத்தில் கூட முழங்காலில் இருப்பது இல்லை (நோயாளிகள்.. முடியாதவர்கள் பரவாயில்லை). நிறைய பேர் திவ்ய நற்கருணை ஆண்டவரை கரங்களில் வாங்குகிறார்கள், சிலர் இடது கரங்களில் வாங்குகிறார்கள். அபிசேகம் செய்யப்படாத பல கரங்கள் ஆண்டவரை சர்வ சாதாரணமாக தொடுகின்றன. இந்த துறவி ஒரு நாள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கிறதற்கே “ கொடூரம் “ என்று சொல்லி மறைந்தார் என்றால் உத்தரிக்கும் ஸ்தலம் எவ்வளவு கொடூரமாயிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.. ஆண்டவர் மட்டில் அச்சம் குறைந்து வருவது மிக மிக ஆபத்தானது.. நாமே பீட கிராதி வரை சென்று ஆண்டவரை முழங்காலில் நின்று வாங்கியது எவ்வளவு அழகாயிருந்தது.

இப்போது நாம் வரிசையில் சென்றாலும் ஆண்டவரை முழங்காலில் நின்று பக்தியோடு நாவில் வாங்குவோம்… அதுவும் தகுதியான உள்ளத்தோடு வாங்குவோம்.. வாங்கிய பின் நம் முன் நெற்றி தரையில் படுமளவும் அவரை ஆராதித்து வணங்கி அவருக்கு நன்றி செலுத்துவோம். நம் தேவைகளையும் கேட்போம்.. வணங்கா கழுத்து உள்ளவர்களே ! ஆண்டவர் முன் மண்டியிடாவிட்டால் யார் முன் நாம் மண்டியிடுவோம்.. அசமந்தம், அசட்டுத்தனம்,

சோம்பேரித்தனம், கடவுள் பயமின்மை மிக மிக ஆபத்தானது..

உத்தரிக்கிற ஸ்தல நெருப்பு ரொம்பவே சுடும் என்பதை நாம் மறவாமல் நம் கடவுளுக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை, வணக்கத்தை ஆராதனையை கொடுப்போம்..