இன்றைய புனிதர் - ஜனவரி 27 - புனிதர் ஏஞ்செலா மெரிசி ***


புனிதர் ஏஞ்செலா மெரிசி

(St. Angela Merici)

கன்னி/ சபை நிறுவனர்:

(Virgin and Foundress)

பிறப்பு: மார்ச் 21, 1474

டிசெஸானோ டெல் கார்டா, ப்ரெஸ்ஸியா பிராந்தியம், வெனிஸ் குடியரசு

(Desenzano del Garda, Province of Brescia, Republic of Venice)

இறப்பு: ஜனவரி 27, 1540 (வயது 65)

ப்ரெஸ்ஸியா, வெனிஸ் குடியரசு

(Brescia, Republic of Venice)

அருளாளர் பட்டம்: ஏப்ரல் 30, 1768 

திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமன்ட்

(Pope Clement XIII)

புனிதர் பட்டம்: மே 24, 1807 

திருத்தந்தை ஏழாம் பயஸ்

(Pope Pius VII)

முக்கிய திருத்தலங்கள்: 

புனித ஆஞ்சலா மெரிசி சரணாலயம், ப்ரெஸ்ஸியா, இத்தாலி

(Sanctuary of St. Angela Merici, Brescia, Italy)

நினைவுத் திருநாள்: ஜனவரி 27

பாதுகாவல்: 

நோய் (Sickness), 

பெற்றோரை இழந்தோர் (Loss of Parents), 

மாற்றுத் திறனாளிகள் (Handicapped People)

ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்ட ஏஞ்செலா மெரிசி, ஒரு இத்தாலி நாட்டின் ஆன்மீக கல்வியாளர் ஆவார். இவர் கி.பி. 1535ம் ஆண்டு, "ப்ரெஸ்ஸியா" (Brescia) என்ற இடத்தில் "புனிதர் ஊர்சுலாவின் துணைவர்கள்" (Company of St. Ursula) என்ற கல்வி நிறுவனத்தினை நிறுவினார். இக்கல்வி நிறுவனத்தின் பெண்கள், சிறுமிகளின் கல்விக்காக தமது வாழ்க்கையினை திருச்சபைக்கு அர்ப்பணித்தவர்கள் ஆவர். சிறிது காலத்திலேயே இக்கல்வி நிறுவனம் சட்டென்று "ஊர்சுலின் துறவற சபையாக" (Monastic Order of Ursulines) மாறி உயர்ந்தது. இத்துறவு சபையின் அருட்கன்னியர்கள் செபம் மற்றும் கற்றலுக்கான இடங்களை முதலில் ஐரோப்பா எங்கும், குறிப்பாக வட அமெரிக்காவிலும், பின்னர் உலகமெங்கும் அமைத்தார்கள்.

வாழ்க்கை:

கி.பி. 1474ல் பிறந்த மெரிசியும் இவரது மூத்த சகோதரியான "கியானா மரியாவும்" (Giana Maria) இவரது பதினைந்தாம் வயதிலேயே அநாதைகளானார்கள். தமது தாய்மாமன் வீட்டில் வாழ்வதற்காக பக்கத்து நகருக்கு சென்றனர். சிறிது காலத்திலேயே இவரது மூத்த சகோதரி "கியானா மரியா" அகால மரணமடைந்தார். மரணத்தின் முன்பும் அதன் பின்னரும் நடக்க வேண்டிய எந்தவொரு இறுதிச்சடங்குக்களும்கூட அவருக்கு நடக்கவில்லை. இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் மெரிசி. இந்நிலையில், மெரிசி "புனித ஃபிரான்சிஸின் மூன்றாம் நிலை சபையில்" (Third Order of St. Francis) இணைந்தார். தம்மை கடவுளுக்கு அர்ப்பணித்திருந்த மெரிசியின் அழகும் கவர்ச்சியான பொன்னிற கூந்தலும் பிறரைக் கவர்ந்தன. உலகினரின் கவனத்தை ஈர்க்க விரும்பாத மெரிசி, தமது கூந்தலை புகைக்கரியினால் கோரப்படுத்திக்கொண்டார்.

மெரிசியின் இருபதாம் வயதில் இவரது தாய்மாமன் இறந்து போனார். ஆகவே, தமது சகோதரர்களுடன் வாழ்வதற்காக சொந்த ஊர் திரும்பினார். இவருக்கு சேர வேண்டிய சொத்துக்கள் இவருக்கு தரப்பட்டன. பின்னர் இவருக்கு ஒரு திருக்காட்சி காணக் கிடைத்தது. அதில், இளம் பெண்களுக்கு சமய கல்வியூட்டுவதற்கு தமது வாழ்வினை அர்ப்பணித்த அருட்கன்னியர் கொண்ட சமூகம் ஒன்றினை நிறுவும்படி அறிவுறுத்தப்பட்டார். இங்ஙனம் இவர் ஆரம்பித்த இந்த அருட்கன்னியர் சமூகம் வெற்றி பெற்றது. பிறகு பக்கத்து நகரான "ப்ரெஸ்ஸியாவில்" (Brescia) மற்றுமொரு பள்ளி தொடங்க இவர் அழைக்கப்பட்டார்.

எண்ணிலங்கா சமூகப் பணிகளை செய்த இவர், என்ணிடலங்கா ஏழை மக்களின் வாழ்வை உயர்த்தினார். கி.பி. 1524ம் ஆண்டு தனது 50ம் வயதில் பாலஸ்தீனத்திற்கு புனிதப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். வழியில், "க்ரேட்டா" எனும் தீவில், திடீர் என்று அவரது கண்களின் பார்வை மறைந்தது. இருப்பினும் அவர் தமது புனித பயணத்தைத் தொடர்ந்தார். பாலஸ்தீன புனித பயணத்திலிருந்து திரும்புகையில், அவரது பார்வை பறிபோன அதே "க்ரேட்டா" தீவில், அவர் சிலுவையை செபிக்கையில், அவருக்கு அதிசயமாக மீண்டும் பார்வை திரும்பியது.

கி.பி. 1535ம் ஆண்டும், நவம்பர் மாதம், 25ம் நாளன்று, தம்முடன் இருந்த பன்னிரெண்டு இளம்பெண்களுடன் இணைந்து "ப்ரெஸ்ஸியா" (Brescia) என்ற இடத்தில் "புனித ஊர்சுலாவின் துணைவர்கள்" (Company of St. Ursula) என்ற கல்வி நிறுவனத்தினை நிறுவினார். அவர்களுடைய நோக்கம், எதிர்கால மனைவி, தாய் (தற்போதைய இளம்பெண்கள்) ஆகியோரின் குடும்ப வாழ்க்கை நிலையை கிறிஸ்தவ கல்வி மூலம் உயர்த்துவது ஆகும். நான்கு வருடங்களில் இக்கல்வி நிறுவனம் இருபத்தெட்டாக உயர்ந்தது. மெரிசி தம்முடனிருந்தவர்களை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து, அயலாரின் சேவையில் தம்மை அர்ப்பணிக்க கற்பித்தார். அதன் உறுப்பினர்கள் ஏதும் சிறப்பு பழக்க வழக்கங்களோ அல்லது சமய பிரமாணங்களோ எடுத்துக்கொண்டவர்கள் அல்ல. மெரிசி இக்கல்வி நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கான வாழ்க்கை நியதி அல்லது விதிகளை தாமே எழுதினர். அதில் பிரம்மச்சரியம், வறுமை, தாழ்ச்சி, கீழ்படிதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தார். "ஊர்சுலின்ஸ்" (The Ursulines) என்றழைக்கப்படும் இவர்களுடைய நிறுவனம், மென்மேலும் பள்ளிகளையும் அநாதை இல்லங்களையும் தொடங்கியது. கி.பி. 1537ம் ஆண்டு, மார்ச் மாதம், 18ம் நாளன்று, மெரிசி இந்நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையேற்றார். மெரிசி இந்நிறுவன உறுப்பினர்களுக்காக எழுதிய விதிகள் மற்றும் நியதிகளை கி.பி. 1544ம் ஆண்டு திருத்தந்தை “மூன்றாம் பவுல்” (Pope Paul III) ஒப்புதல் அளித்து அங்கீகரித்தார்.

கி.பி. 1540ம் ஆண்டு, ஜனவரி மாதம், 27ம் நாள், மெரிசி மரிக்கும்போது, 24 கல்வி நிறுவனங்கள் பிராந்தியம் முழுது கல்விச் சேவையில் இருந்தன. மெரிசியின் விருப்பப்படியே அவரது உடல் மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன் வழக்கப்படி ஆடை அணிவிக்கப்பட்டு "அஃப்ரா தேவாலயத்தில்" (Church of St. Afra) அடக்கம் செய்யப்பட்டது. கி.பி. 1945ம் ஆண்டு, மார்ச் மாதம், 2ம் தேதி "அஃப்ரா தேவாலயமும்" அதன் சுற்றுப்புற கட்டிடங்களும் தேவாலயத்தின் பங்குத்தந்தை மற்றும் இன்னபிற பங்கு மக்களுடேன் சேர்ந்து இரண்டாம் உலகப்போரின்போது நிகழ்ந்த குண்டு வீச்சில் முழுதும் அழிக்கப்பட்டன. பின்னர், இரண்டாம் உலகப்போரின் முடிவில் தேவாலயமும் அதன் சுற்றுப்புற கட்டிடங்களும் மீண்டும் கட்டப்பட்டு கி.பி. 1954ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 10ம் நாளன்று, திறக்கப்பட்டன. கி.பி. 1956ம் ஆண்டு, ஜனவரி மாதம், 27ம் நாளன்று, புதிதாக புனிதர் ஏஞ்செலா மெரிசிக்கு தேவாலயம் அர்ப்பணிக்கப்பட்டது.