இன்றைய புனிதர் - ஜனவரி 26 - புனிதர் தீத்துஸ் ***


புனிதர் தீத்துஸ்

(St. Titus)

ஆயர்/ மறைச்சாட்சி:

(Bishop and Martyr)

பிறப்பு: கி.பி. முதல் நூற்றாண்டு

இறப்பு: கி.பி. 96 அல்லது 107

கோர்ட்டின், கிரேட்

(Gortyn, Crete)

ஏற்கும் சபை/ சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

கிழக்கு மரபுவழி கத்தோலிக்க திருச்சபைகள்

(Eastern Catholic Churches)

லூத்தரன் திருச்சபை

(Lutheranism)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

புனிதர் பட்டம்: வழிமுறைகளுக்கு முற்பட்ட காலம்

முக்கிய திருத்தலங்கள்: 

ஹெராக்ளியோன் (Heraklion)

கிரேட் (Crete) 

நினைவுத் திருவிழா: ஜனவரி 26

பாதுகாவல்: கிரேட் (Crete) 

புனிதர் தீத்துஸ் (St. Titus), பண்டைய கிறிஸ்தவ சமய மறைப்பணியாளரும், திருச்சபையின் ஒரு தலைவரும், அப்போஸ்தலரான புனிதர் பவுலின் துணையாளரும், சீடரும் ஆவார். இவரைப்பற்றிய குறிப்புகள் பவுலின் பல திருமுகங்களில் காணக்கிடைக்கின்றன.

வாழ்க்கைக் குறிப்புகள்:

தீத்துஸ், பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவில் (Antioch) இருந்தார். பின்னர் அவர்களோடு எருசலேம் சங்கத்தில் கலந்துகொள்ளச் சென்றார். "பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் தீத்துசையும் கூட்டிகொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன்" (கலாத்தியர் 2:1) என்று பவுல் எழுதுகிறார். ஆயினும் தீத்துஸின் பெயர் திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படவில்லை.

தீத்துஸ் யூத இனத்தைச் சாராத புற இனத்தவர் (Gentile) என்று தெரிகிறது. அவர் விருத்தசேதனம் செய்ய வேண்டிய தேவையில்லை என்று பவுல் மிகக் கண்டிப்பாகக் கூறியதிலிருந்து இது தெளிவாகிறது: "என்னுடன் இருந்த தீத்துஸ் கிரேக்கராய் இருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை" (கலாத்தியர் 2:3). கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்று வாழ்வதற்கு விருத்தசேதனம் தேவையில்லை என்றுதான் பவுல் வாதாடினார்.

தீத்துஸ் ஆற்றிய அறப்பணி:

பவுல் எபேசு நகரில் கிறிஸ்தவத்தை அறிவித்தபோது, திமொத்தேயு மற்றும் தீத்துஸ் ஆகியோர் அவரோடு பணியாற்றினர். அங்கிருந்து பவுல் தீத்துசை கொரிந்து நகருக்கு அனுப்பினார். அந்நகரிலிருந்து காணிக்கை பிரித்து, எருசலேம் சபையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு தீத்துஸ் அனுப்பப்பட்டார். "எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துசே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக்கொண்டோம்" என்று பவுல் எழுதுகிறார் (2 கொரிந்தியர் 8:6).

பவுல் மாசிதோனியாவில் பணிபுரிந்த போது, தீத்துஸ் அவரிடம் சென்றார். கொரிந்து நகரில் திருச்சபை வளர்ந்து வந்ததை தீத்துஸ் பவுலிடம் எடுத்துக் கூறினார். அது பற்றி பவுல் இவ்வாறு கூறுகிறார்: "மாசிதோனியாவிற்கு வந்து சேர்ந்த போது எங்களிடம் மன அமைதியே இல்லை. வெளியே போராட்டம், உள்ளே அச்சம்; இவ்வாறு எல்லா வகையிலும் துன்புற்றோம். தாழ்ந்தோருக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள் தீத்துஸின் வரவால் எங்களுக்கும் ஆறுதல் அளித்தார். அவரது வருகையால் மட்டும் அல்ல; நீங்கள் தீத்துஸுக்கு அளித்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதல் அடைந்தோம். நாங்கள் மிகுதியான மகிழ்ச்சி அடைந்தோம்" (2 கொரிந்தியர் 7:5-8).

தீத்துஸ் “கிரேட்” (Crete) சபைக்குப் பொறுப்பேற்றல் :

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தீத்துஸின் பெயர், பவுல் சிறைப்பட்டதை ஒட்டியும், தீத்து கிரேட் (Crete) சபைக்குப் பொறுப்பேற்றது பற்றியும் வரும் குறிப்பில் மீண்டும் காணப்படுகிறது. "நான் உனக்குப் பணித்தபடியே கிரேட் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்" (தீத்து 1:5) என்று பவுல் தீத்துஸுக்கு எழுதுகிறார்.

பவுல் உரோமையில் இருந்தபோது தீத்துஸ் தல்மாத்தியாவுக்குச் சென்றார் என்பதே தீத்துஸ் பற்றிய இறுதிக் குறிப்பு. "தேமா இன்றைய உலகப்போக்கை விரும்பி என்னை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்துஸ் தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டனர்" (2 திமொத்தேயு 4:10) என்று பவுல் குறிப்பிடுகின்றார்.

இறப்பு:

தீத்துஸின் இறப்புப் பற்றிய குறிப்பு புதிய ஏற்பாட்டில் காணப்படவில்லை.

மரபுப்படி, பவுல் தீத்துசை ஆயராகத் திருநிலைப்படுத்தி, கிரேட் தீவின் 'கோர்ட்டின்' நகர ஆயராக அவரை நியமித்தார். தீத்துஸ் கி.பி. 107ல் தமது தொண்ணூற்று ஐந்தாம் வயதில் இறந்தார்.

புனித தீத்துஸின் மீபொருட்கள்:

துருக்கியர் ஆட்சிக்காலத்தில் வெனிசு நகருக்குக் கொண்டுபோகப்பட்டிருந்த புனித தீத்துஸின் மீபொருள்கள் அவர் பணிசெய்து உயிர்துறந்த கிரேட் தீவுக்கு 1969ம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டன. தற்போது அப்பொருட்கள் “கிரேட்” தீவில் அமைந்துள்ள ஹெராக்ளியோன்” ஆலயத்தில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளன.

புனித தீத்துஸ் விருது:

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் படைத் திருப்பணியாளர்களில், சிறப்பான சேவை செய்வோருக்கு "புனித தீத்துஸ் விருது" என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.