இன்றைய புனிதர் - ஜனவரி 10 - அருளாளர் பத்தாம் கிரகோரி ***


அருளாளர் பத்தாம் கிரகோரி

(Blessed Gregory X)

184வது திருத்தந்தை:

(184th Pope)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

பிறப்பு: கி.பி. 1210

பியசென்ஸா, தூய ரோம பேரரசு

(Piacenza, Holy Roman Empire)

இறப்பு: ஜனவரி 10, 1276 (வயது 66)

அரேஸ்ஸோ, தூய ரோம பேரரசு

(Arezzo, Holy Roman Empire)

முத்திபேறு பட்டம்: ஜூலை 8, 1713

திருத்தந்தை பதினொன்றாம் கிளமென்ட்

(Pope Clement XI)

நினைவுத் திருநாள்: ஜனவரி 10

பாதுகாவல்:

அரேஸ்ஸோ மறை மாவட்டம், 

ஃபிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை

(Diocese of Arezzo, Franciscan Tertiaries)

"டியபல்டோ விஸ்கன்ட்டி" (Teobaldo Visconti) எனும் இயற்பெயர் கொண்ட இவர், பத்தாம் கிரகோரி என்ற பெயரில் கத்தோலிக்க திருச்சபையின் 184வது திருத்தந்தையாக கி.பி. 1271ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், முதலாம் தேதி முதல், கி.பி. 1276ம் ஆண்டு, ஜனவரி மாதம், பத்தாம் தேதி - அவரது மரணம் வரை ஆட்சி புரிந்தவர் ஆவார். இவர் "மதச்சார்பற்ற ஃபிரான்சிஸ்கன் சபையின்" (Secular Franciscan Order) உறுப்பினரும் ஆவார். கி.பி. 1268ம் ஆண்டு முதல் கி.பி. 1271ம் ஆண்டு வரை மூன்றாண்டுகள் நடந்த திருத்தந்தைத் தேர்தலுக்குப் பின்னர் இவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் சரித்திரத்தில், திருத்தந்தை தேர்வுக்காக நடந்த தேர்தல்களில் மிக அதிக காலம் எடுத்துக்கொண்ட தேர்தல் இதுவேயாகும்.

இவர், "லியோன்” எனுமிடத்தில் “இரண்டாம் மகா சபையை" (Second Council of Lyons) கூட்டி புதிய திருத்தந்தைக்கான கட்டுப்பாடுகளை உருவாக்கினார். இக்கட்டுப்பாடுகள் திருத்தந்தையர்கள் “ஐந்தாம் அட்ரியான்” (Pope Adrian V) மற்றும் “இருபத்தொன்றாம் ஜான்” (Pope John XXI) ஆகியோரால் செல்லுபடியாகாததாக ஆக்கப்பட்டிருப்பினும், அவை இருபதாம் நூற்றாண்டு வரை அமலில் இருந்தன. பின்னர், அவை திருத்தந்தை ஆறாம் பவுலால் (Pope Paul VI) திருத்தி அமைக்கப்பட்டன.

ஆரம்ப வாழ்க்கை:

"டியபல்டோ விஸ்கன்ட்டி" (Teobaldo Visconti) ஏறக்குறைய கி.பி. 1210ம் ஆண்டு, "பியசென்ஸா" என்ற இடத்தில் பிறந்தவர் ஆவார். இவர், "இத்தாலிய உன்னத வம்சாவளி" (House of Visconti) குடும்பமொன்றின் உறுப்பினர் ஆவார். இவர், கி.பி. 1231-1244 ஆண்டுகளில், “ஸிஸ்டேர்ஸியன் கர்தினால்” (Cistercian Cardinal) மற்றும் "பலஸ்ட்ரினா" ஆயராக இருந்த (Bishop of Palestrina) "கியகொமோ டே பெகோராரி" (Giacomo de Pecorari) என்பவருடன் தம்மை இணைத்துக்கொண்டு பணியாற்ற தொடங்கினார் என்று சொல்லப்படுகின்றது.

திருத்தந்தை தேர்தல்:

ரோம் நகரில் அப்போதிருந்த கர்தினால்களின் பிரிவினை மற்றும் ஒற்றுமையின்மை காரணமாக, திருத்தந்தை “நான்காம் கிளமென்ட்” (Pope Clement IV) அவர்கள் மரணத்தின் பிறகு, சுமார் இரண்டு வருடங்களும் ஒன்பது மாதங்களும் அவரது பதவி காலியாக இருந்தது. "விட்டெர்போ" (Viterbo) நகரில் நடந்த "கர்தினால் கல்லூரி" (College of Cardinals) மாநாட்டில், இத்தாலி மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளின் கர்தினால்கள் சரிசமமாக பிரிந்தனர். ஃபிரெஞ்ச் கர்தினால்கள், ஃபிரான்ஸ் (France) நாட்டின் அரசன் “ஒன்பதாம் லூயிஸின்” (King Louis IX) தம்பி “சார்லசின்” (Charles of Anjou) செல்வாக்கினால் தமது நாட்டுக்கே திருத்தந்தை பதவி வேண்டுமென்றனர். சார்லஸ் சதி செய்து, ரோம் நகர அதிகார சபை (Senator of Rome) அங்கத்தினராக வெற்றியும் பெற்றான். முழு இத்தாலிய தீபகற்பத்தினதும் அரசியலில் அடிக்கடி தலையிட்டான்.

கி.பி. 1265ம் ஆண்டு, மே மாதம், 23ம் நாள், ரோம் வந்த சார்லஸ், திருத்தந்தை நான்காம் கிளமென்ட்டின் (Pope Clement IV) அனுமதியுடன் தம்மை "சிசிலியின்" அரசனாக (king of Sicily) பிரகடணம் செய்துகொண்டான்.

தேர்தலுக்கான முட்டுக்கட்டைகள் விலகாததால் "விட்டெர்போ" (Viterbo) பிரஜைகள் கர்தினால்களை அங்குள்ள ஆயர் அரண்மனையில் அடைத்து வைத்திருந்தனர். அவர்கள் அங்கேயே சந்திப்புகளை நடத்தினர். இறுதியில் ஆயர் அரண்மனையின் கூரைகள் கிழித்து எறியப்பட்டன. இறுதியில் கர்தினால்கள் ஒரு தேர்வுக் குழுவை ஏற்படுத்தினர். தேர்வுக்குழுவின் முடிவுக்கு அரை மனதுடன் இசைவு தெரிவித்தனர். இதன் காரணமாக, ஃபிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய இரண்டு நாட்டவர்களையும் ஒதுக்கினர். வெளி நாட்டவரான "டியபல்டோ விஸ்கன்ட்டி" முழு மனதுடன் தேர்வு செய்யப்பட்டார். இங்ஙனம், திருத்தந்தை தேர்வு இரண்டு வருடங்களும் ஒன்பது மாதங்களும் இழுக்கடித்தது. தேர்வின் முடிவுகள் "டியபல்டோ விஸ்கன்ட்டி"க்கு முழு ஆச்சரியத்தைத் தந்தது.

தேர்தல் முடிவுகள் வந்த வேளையில் விஸ்கன்ட்டி பாலஸ்தீனத்தில் இங்கிலாந்தில் அரசர் முதலாம் எட்வர்டின் (King Edward I of England) தலைமையில் சிலுவைப் போரில் ஈடுபட்டிருந்தார். உடனடியாக அவர் அதிலிருந்து விலகி செல்ல விரும்பவில்லை. சுமார் ஆறு மாதங்களின் பின்னர் ரோம் நகர் திரும்பினார். விஸ்கன்ட்டி ஒரு அருட்பணியாளர் அல்லாத காரணத்தால், அவர் உடனடியாக கி.பி. 1272ம் ஆண்டு, மார்ச் மாதம், பத்தொன்பதாம் நாளன்று, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். பின்னர், ஆயராக திருநிலைபடுத்தப்பட்டார். கி.பி. 1272ம் ஆண்டு, மார்ச் மாதம், 27ம் நாளன்று, புனித பேதுரு பேராலய திருத்தலத்தில் (St. Peter's Basilica) திருத்தந்தையாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.