இயேசுவின் திருமுகம் மற்றும் திருத்துகில்

இயேசுவின் திருமுகம்.


இயேசு அடக்கம் செய்யப்பட்ட விதம்.


1931 மே திங்கள் Guiseppe Enrine என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து இயேசுவின் முகத்தோற்றம்.


இயேசுவின் முன்புறத் தோற்றம்.


1931 மே திங்கள் Guiseppe Enrine என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து இயேசுவின் பின்புற முழுத் தோற்றம்.


இயேசுவின் பின்புற முழுத் தோற்றம்.


Aldo Guerreschi என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து இயேசுவின் 3D படம்.


P.Gastineau என்பவரால் 1974-ல் எடுக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து இயேசுவின் 3D படம்.


Home Ground Photo மூலம் எடுக்கப்பட்ட 3D படம்.


3D Ventral View of the Front Side


“என் கடவுளே! என் கடவுளே! ஏன் என்னைக் கை விட்டீர்!” (மாற்.15:34) என்று வருந்திய இயேசுவின் நெற்றியில் Reverted 3 வடிவில் இரத்த நாளங்கள் வெடித்ததால் ஏற்பட்ட பெரிய இரத்தக்கறையும் சிறிய இரத்தக்கறைகளும்.


இயேசுவின் தலையில் முள்முடி அழுத்தப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள்.


இயேசுவின் மார்பில் 5வது 6வது விலா எலும்புகளுக்கிடையே ஈட்டியால் குத்தப்பட்டதால் ஏற்பட்ட 6 செ.மீ. நீளமும் 15 செ.மீ அகலமும் கொண்ட காயம்.


இயேசுவின் மணிக்கட்டுகளில் ஆணி அடிக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் படம்.


இயேசு சிலுவை சுமந்துசென்றபோது மூன்றுமுறை கீழே விழுந்ததால் முழங்காலில் ஏற்பட்ட பெரிய காயங்கள்.


இயேசுவின் வலதுபாதத்தில் ஆணி அறைந்ததால் ஏற்பட்ட பெரிய காயம்.



9 அங்குல நீளமான ஆணி அறைந்ததால் ஏற்பட்ட இடது பாதக்காயம்.


உயரமான போர்வீரன் ஈயக் குண்டுகள் பொருத்திய சாட்டையால் அடித்ததால் ஏற்பட்ட 120க்கும் மேற்பட்ட முதுகுக்காயங்கள்.


குள்ளமான போர்வீரன் ஒருவனின் சாட்டை அடிகளால் ஏற்பட்ட இடுப்புப் பகுதி காயங்கள்.


இயேசுவின் திருமுகம்.


திருத்துகில் பயணித்த நாடுகள்.


திருத்துகிலில் படிந்த பல நாட்டு மகரந்தத் துகள்கள். இதுபோன்ற 57 வகையான மகரந்தத் துகள்கள் திருத்துகிலில் உள்ளன.


1578-ல் செப்டம்பர் 14-ம் நாள் திருத்துகில் வைக்கப்பட்ட இத்தாலியில் உள்ள டூரின் தேவாலயம்.


"ஏலீ ஏலீ லாமா சபக்தானி" என்ற பெரும் சத்தத்துடன் யேசுநாதரின் ஆவி, அவர் உடலை விட்டுப் பிரிகிறது. யேசுவின் சீடரும், பெரும் செல்வந்தருமான அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசப் என்பவர், ஆளுனர் பிலாத்துவிடம் சென்று, "இயேசுவின் உடலை அடக்கம் செய்வதற்காகக் கொடுத்துவிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட பிலாத்து, உடலை யோசப் வசமே கொடுக்கும்படி உத்தரவிட்டான். யேசுவின் உடலைப் பெற்றுக் கொண்ட யோசப்பும், அவரது சீடர்களும், இஸ்ரேலர்களை அடக்கம் செய்யும் முறையில், தூய்மையான மெல்லிய நீண்ட துணியினால் உடலை மூடிக்கட்டினார்கள்.

பின்னர் கன்மலையில் உள்ள கல்லறையொன்றில் உடலை வைத்துப் பெரிய கல்லொன்றினால் அதன் வாசலை மூடினார்கள். மூன்றாம் தினம் கல்லறையைப் பார்க்க வந்த மரிய மக்தலேனாவும், மற்றவர்களும், கல்லறையை மூடியிருந்த பெரிய கல் விலக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். கல்லறையின் வாயில் திறக்கப்பட்டிருந்தது. பயத்துடனும் ஆச்சரியத்துடனும் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கே யேசுநாதரின் உடலைப் போர்த்தியிருந்த துணி மட்டும் கீழே வீழ்ந்து கிடப்பதைக் கண்டனர். ஆனால் அங்கே யேசுநாதர் காணப்படவில்லை. "இறந்த மூன்றாம் நாள் நான் உயிர்த்தெழுவேன்" என்று யேசுநாதர் கூறியது அவர்களின் ஞாபகத்திற்கு வந்தது. அப்போது, அங்கு தோன்றிய இறைதூதன் ஒருவன், 'யேசுநாதர் உயிர்த்தெழுந்துவிட்டார்' என்ற நற்செய்தியை அவர்களுக்கு அறிவித்தான்….

     புதிய ஏற்பாடானது, யேசுநாதரின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், சீடர்களுடன் சில காலம் அவர் இருந்ததையும், அவர் பரலோகத்துக்குச் சென்றதையும், சீடர்களுக்கிடையே நடந்த சம்பவங்களையும் சொன்னதேயொழிய, யேசுநாதரின் இறந்த உடலைப் போர்த்தப் பயன்படுத்தப்பட்ட அந்தத் துணியைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. அதற்குப் பின்னர், அந்தத் துணிக்கு என்ன நடந்தது? அதை யாராவது கல்லறையிலிருந்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்களா? என்னும் தகவல் வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அந்தத் துணி பின்னாட்களில் வரலாற்றின் மிகப்பெரிய அதிசயத்துக்கு அத்திவாரமாகப் போகிறது என்று யாருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், நம்பவே முடியாத சாட்சியாக, அறிவியலையே திணறடிக்கப் போகின்றது அந்தத் துணி என்று யாரும் அறிந்திருக்கவுமில்லை. கிட்டத்தட்ட 1350 ஆண்டுகளின் பின்னர், அதாவது கி.பி.1357ம் ஆண்டளவுகளில், பிரான்ஸ் நாட்டின் 'லிரே' நகரத்தில் (Lirey, France) இறந்த உடலை மூடிவைத்த நீண்ட துணியொன்று, அழகிய பெட்டியொன்றினுள் புனிதமான பொருளாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததாக சரித்திரக் குறிப்புகள் சொல்கின்றன.

அரசர்களின் கொண்டாட்டங்களிலும், தேவாலயங்களில் நடைபெறும் புனித விழாக்களிலும், அந்தத் துணிக்கு முக்கிய இடமளிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்ததாகவும் குறிப்புகள் சொல்கின்றன. கி.பி.1354ம் ஆண்டளவுகளில் பிரான்ஸில் நடைபெற்ற போரொன்றில், நாட்டுக்காகப் போரிட்டு இறந்த ஒரு மாவீரனின் உடலைப் போர்த்திய துணியாகத்தான், அந்தத் துணி இருக்க வேண்டும் என்று அந்தக் காலங்களில் கருதப்பட்டிருக்கிறது. லிரே நகரத்து மக்கள், ஒரு மாவீரனுக்குரிய மரியாதையைச் செலுத்தினார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

     சில ஆண்டுகளின் பின்னர், இந்தத் துணி வரலாற்றில் மிக முக்கியமானதொரு வடிவத்தை எடுத்துக் கொண்டது. பிரான்ஸிலிருந்த இந்தத் துணி, கி.பி.1578ம் ஆண்டளவில் இத்தாலியைச் சேர்ந்த 'டுரின்' நகருக்கு (Turin, Italy) எடுத்துச் செல்லப்பட்டது. 'டுரின்' நகரில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்றில் (Cathedral of Turin), ஒரு முக்கிய காரணத்தை முன்னிட்டு, மிகவும் புனிதமான ஒரு பொருளாகப் பாதுகாக்கப்படவும் ஆரம்பித்தது. அந்தப் புனிதத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை இப்போது நீங்கள் ஊகித்திருப்பீர்கள். யேசுநாதர் இறந்தபோது அவரது உடலை மூடிய துணிதான் இது என்று முடிவுக்குத்தான் அவர்கள் வந்திருந்தார்கள். அப்படியொரு முடிவுக்கு அவர்கள் வருவதற்குக் காரணங்களிருந்தன.

வெரோனிக்கா, பட்டுத் துணியொன்றினால் யேசுநாதரின் முகத்தைத் துடைத்த போது, அவரின் முகம் அந்தத் துணியில் பதிந்தது போல, 'லிரே' நகரிலிருந்து 'டுரின்' நகருக்குக் கொண்டுவரப்பட்ட அந்தத் துணியிலும் முழுமையான மனிதனின் உருவ அமைப்பு பதிந்து காணப்பட்டது. நீளமான 'லினன்' (Linen) நூலினால் நெய்யப்பட்ட வெள்ளைத் துணியில், கைகளைக் குறுக்காக வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் முன்புற உடம்பும், பின்புற உடம்பும் சித்திரமாக வரைந்தது போல, அந்தத் துணியில் பதிந்திருந்தது. பதிந்திருக்கும் உடற்பகுதியெங்கும் இரத்தம் திட்டுத் திட்டாக வடிந்திருக்கும் அடையாளங்களும் காணப்பட்டன. யேசுநாதர் மரித்த போது கூட, அவரது உடல் அரிமத்தேயு யோசப்பினால், நீண்டதொரு வெள்ளைத் துணியொன்றினாலேயே மூடப்பட்டுக் கல்லறையில் வைக்கப்பட்டது. அதனால், யேசுநாதரின் உடலை மூடிக் கல்லறையில் வைத்த அதே துணிதான், இந்தத் துணியென்றும் பலரால் நம்பப்பப்பட்டது. டுரினுக்கு எடுத்துச் சென்ற அந்தத் துணிக்கு 'டுரின் பிரேதத் துணி' (Shroud of Turin) என்ற விசேச பெயரும் கொடுக்கப்பட்டது.

     கி.பி.1578ம் ஆண்டிலிருந்து, கி.பி.1898ம் ஆண்டுவரை, அந்தத் துணியில் காணப்படும் உருவம் யேசுநாதரினுடையதுதான் என்று பரவலாக நம்பப்பட்டு வந்தாலும், அதை உறுதிப்படுத்த முடியவில்லை. நம்பிக்கை ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு, அந்தத் துணியைப் புனிதமாகக் கருதிவந்தார்கள். காலம் செல்லச் செல்ல, அந்தத் துணியில் பதிந்திருந்த உருவம் மங்க ஆரம்பித்தது. அங்கங்களின் வடிவங்கள் மெதுமெதுவாக மறையத் தொடங்கியது. அதனால், அந்தத் துணியைப் புகைப்படமாகப் பிடித்து வைப்பதற்கு வத்திக்கான் விரும்பியது. கி.பி.1898ம் ஆண்டு புகைபடத்தை எடுக்க ஆயத்தம் செய்த போதுதான் அந்த உலகை உலுக்கும் அதிசயம் நடந்தது. அதுவரை இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்தது அந்தச் சம்பவம்.

     1898ம் ஆண்டு, மே மாதம், 28ம் தேதி இத்தாலியைச் சேர்ந்த புகைப்படப்பிடிப்பாளரான, 'செகண்டோ பியா' (Secondo Pia) என்பவர், டுரின் துணியை அவரது புகைப்படக் கருவியினால் (Camera) படமெடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். முதன்முறையாக அந்தத் துணி ஒரு நவீனப் புகைப்படக் கருவியினால் (அந்தக் காலத்தின்) படமெடுக்கப்பட்டது. தன் வீட்டிலிருந்த பிரத்தியேக அறையில், படத்தின் எதிர்மறைப் பிரதியை (Negative) உருவாக்கிய பின்னர், அதை உற்றுப் பார்த்தார் 'செகண்டோ பியா'. பார்த்தவர் பயத்தில் உறைந்து போனார். தான் காண்பது கனவா? நிஜமா? என்றே தெரியவில்லை அவருக்கு. அந்த எதிர்மறைப் பிரதியில் செகண்டோ பியா கண்டது, ஒரு மனித முகத்தை. அதுமட்டுமில்லை அவர் பயத்துக்குக் காரணம்.

அந்த மனித முகம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் சிலுவையில் அறையப்பட்டவர் என்று சொல்லப்படும் யேசுநாதரின் முகமேதான். செகண்டோ பியா கண்ட அந்த எதிர்மறைப் பிரதி உருவத்தில் மேலுமொரு அதிசயமும் அல்லது அதிர்ச்சியும் இருந்தது. அது இன்னும் விசேசமானது. ஒரு புகைப்படத்தின் எதிர்மறைப் பிரதியில் (நெகட்டிவ்) எப்போதும் எதிர்மாறான விம்பம்தான் காணப்படும். அதாவது, கருமையான பகுதிகள் வெண்மையாகவும், வெண்மையான பகுதிகள் கருமையாகவும் இடம் மாறிக் காணப்படும். ஆனால், செகண்டோ பியா எடுத்த படத்தின் எதிர்மறைப் பிரதியில் காணப்பட்ட உருவம், நெகட்டிவ் உருவமாக இருக்கவில்லை. பாசிட்டிவ் (Positive) உருவமாகவே காணப்பட்டது. அதாவது சாதாரணமான ஒரு புகைப்படம் போல இருந்தது. செகண்டோ பியா எடுத்த படத்தின் நெகட்டிவே, பாசிட்டிவாக இருந்தது.

 நம்பவே முடியாத ஆச்சரியம் இது. இப்படி இருப்பதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். எந்தத் துணியை செகண்டோ பியா படமெடுத்தாரோ, அந்தத் துணியில் இருந்த உருவம், ஏற்கனவே நெகட்டிவாகவே அந்தத் துணியில் பதிந்திருக்க வேண்டும். நெகட்டிவ் உருவம் ஒன்றைப் புகைப்படக் கருவியினால் படமெடுத்து, அதன் நெகட்டிவைப் பார்த்தால் மட்டுமே, பாசிட்டிவாகத் தோன்றும். அப்படியென்றால், அந்தத் துணியில் உள்ள உருவம் எப்படி எதிர்மறை விம்பமாகப் பதிந்தது? இந்தச் சம்பவம் அறிவியல் ரீதியாக ஒரு குழப்பத்தையே ஏற்படுத்தியது.

     இதை மேலும் தொடர்வதற்கு முன்னர், சில விசயங்களை நாம் பார்க்கலாம். ஆன்மீகவாதிகள், நம்பிக்கை என்னும் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள். அதனால் எதையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டிய கட்டாயங்களோ, நிர்ப்பந்தங்களோ அவர்களுக்கு ஏற்படுவதில்லை. நம்பிக்கை என்ற ஒன்றே அவர்களை வழிநடத்திச் செல்லும். ஆனால், கடவுள் மறுப்பாளர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், நம்பிக்கையினடிப்படையில் சொல்லப்படுபவைகளுக்கான ஆதாரம் எப்போதும் தேவைப்படுகிறது. நம்பிக்கை என்னும் ஒற்றை வார்த்தை அவர்களைத் திருப்திப்படுத்திவிடாது. முட்டாள்தனமான நம்பிக்கைகளை அவர்கள் மூடநம்பிக்கையென்று சொல்லி முழுமையாக நிராகரித்துவிடுகிறார்கள். அதேநேரம் உண்மையான நம்பிக்கைகளுக்கு ஆதாரம் கேட்டு நிற்பார்கள்.

மேலே சொல்லப்பட்ட்ட டூரின் துணியை எடுத்துக் கொள்வோம். அந்தத் துணியில் இருக்கும் உருவம் யேசுநாதருடையது என்று சொன்னாலே நம்பிகையுள்ளவர்கள் எந்தக் கேள்விகளையும் கேட்காமல் நம்பிவிடுவார்கள். ஆனால், அறிவியல் அதை அப்படியே ஏற்றுக் கொண்டுவிடாது. ஒரு இரத்தம் தோய்ந்திருக்கும் மனித முகத்தின்மேல் ஒரு துணியைப் போட்டால், அந்த முகம் புகைப்படம் போல அல்லது சித்திரம் போலத் துணியில் பதியவே முடியாது என்றுதான் அறிவியல் சொல்லும். அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லவே இல்லை என்றுதான் மறுக்கும். அப்படியொரு துணி இருக்கும் பட்சத்தில், அந்தத் துணியில் உள்ள உருவத்தை யாராவது நிஜம் போல வரைந்திருக்கலாம் என்றுதான் அறிவியல் சந்தேகப்படும். டுரின் துணியிலும் அறிவியல் அப்படியொரு சந்தேகத்தையே கொண்டிருந்தது.

 பல நுற்றாண்டுகளுக்கு முன்னர், யாரோ இந்தத் துணியில் மனித உருவத்தை வரைந்திருக்கலாம் என்றுதான் அறிவியல் நம்பியது. ஆனால், செகண்டோ பியாவின் நெகடிவ் விம்பக் கருத்தினால், அறிவியலும் கொஞ்சம் ஆடித்தான் போனது. ஒரு மனித உருவத்தைச் சித்திரமாக வரைபவர்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு நெகட்டிவ் பிரதியை எப்படி வரைந்திருக்க முடியும்? அப்படி வரைந்திருக்க முடியுமென்று வைத்துக் கொண்டாலும், இப்படியொரு புகைப்படக் கருவியைப் பிற்காலங்களில் கண்டுபிடிப்பார்கள் என்றும், அதில் நெகட்டிவாகப் படமெடுப்பார்களென்றும் அந்தக் காலத்து சித்திரம் வரைபவனுக்கு எப்படித் தெரியும்? அதனால், இந்த எதிர்மறை வடிவம் டுரின் துணியில் இருப்பது அறிவியலுக்கு ஒரு சவாலாகதான் இருந்தது. ஆனாலும், அறிவியல் இதை நம்பிவிடத் தயாராகவில்லை. தன் அடுத்த பரிசோதனைக்கே ஆயத்தமானது.

     'டுரின் பிரேதத் துணி' (Shroud of Turin) என்றழைக்கப்படும் அந்தத் துணி, கிட்டத்தட்ட நான்கரை மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்ட 'லினன்'  (Linen) வகைத் துணியாகும். இறந்த ஒருவரை நிர்வாணமாக அந்தத் துணியின் மேல் கிடத்தி எஞ்சிய பகுதியால் மேல் பகுதியையும் மூடிவிடுவது இஸ்ரேலர்களின் வழமைகளில் ஒன்று. அதனால் இறந்த உடலின் பின் கால்களிலிருந்து முதுகுப் பகுதி முதல், மார்பு, முன்கால்கள் வரை முழுவதுமாக அந்தத் துணியினால் மூடுவார்கள்.

யேசுநாதரின் உடலையும் அதே விதமாகவே மூடிக் கல்லறையில் அடைத்தார்கள் என்று நம்பப்படுகிறது. அந்த இரண்டு மீட்டர் நீளமான துணியில், யேசுநாதரின் பின் பகுதியும் (முதுகுப்பக்கப் பகுதி), முன்பகுதியும் (மார்புப் பக்கப் பகுதியும்), டுரின் துணியில் பதிந்துள்ளதாக நம்புகிறார்கள். அந்தத் துணியில் காணப்படும் உருவத்தின் கைகள் இரண்டும் நீட்டிய நிலையில் ஒன்றின் மேல் ஒன்றாகக் கைகள் வைக்கப்பட்டபடி இருக்கிறது. அந்த உருவத்தின் முகப் பகுதியிலும், மணிக்கட்டுப் பகுதியிலும், மார்புப் பகுதியிலும் இரத்தம் வழிந்த அடையாளங்கள் சிவப்புத் திட்டுகளாகக் காணப்படுகின்றன.

 இந்த அடையாளங்கள் அனைத்துமே யேசுநாதருக்கு பொருந்துவதாக இருக்கின்றன. அத்துடன், செகண்டா பியா எடுத்த படத்தின் நெகட்டிவில் தெரியும் உருவத்தில் இருக்கும் தாடியும், நீண்ட தலைமுடியும் யேசுநாதரின் தோற்றத்தையே ஒத்திருக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்து அந்தத் துணிக்கு மறுக்கவே முடியாத புனிதத் தண்மையையும், அற்புதத் தண்மையையும் வழங்குவதால், ஆன்மீகவாதிகளின் கொண்டாட்டத்திற்கு அடையாளமாக அது கருதப்படுகிறது.

     ஆனாலும், அறிவியல் ரீதியாக எதிர்ப்புக் குரல்களும் எழாமலும் இல்லை. அந்தத் துணியைக் 'கார்பன் தேதிப்' (Carbon Dating) பரிசோதனைக்குட்படுத்தக் கேட்டபோது, வத்திக்கான் அதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அனுமதியளித்தது. அதனல், அந்தத் துணியின் கீழ் மூலையில் சிறியதொரு பகுதி வெட்டியெடுக்கப்பட்டு. கார்பன் தேதிப் பரிசோதனையும் நடைபெற்றது. பரிசோதனையின் முடிவும் அதன் தொடர் சம்பவங்களும் ஆச்சரியமானதாகவே இருந்தது.

சிலுவையில் அறையப்பட்ட யேசுநாதரின் உயிர் பிரிந்துவிட்டதை அறிந்த அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப் என்பவர், அவரது உடலைப் பெற்றுக் கொண்டு கல்லறையில் வைக்க ஆயத்தம் செய்தார். இஸ்ரேலர்களின் வழக்கப்படி, யேசுவின் உடல் பின்புறமிருந்து முன்புறம்வரை, காலிலிருந்து தலைவரை நீளத்துணியொன்றினால் போர்த்தப்பட்டுச் சுற்றிக் கட்டப்பட்டது. அதுமட்டுமில்லாமல், தலைப் பகுதி வேறொரு சிறிய தனித் துணியொன்றினாலும் சுற்றிக் கட்டப்பட்டது. அதன் பின்னர் யேசுவின் உடல் கல்லறையில் வைத்து மூடப்பட்டது.

மூன்று நாட்களின் பின்னர் சீடர்கள் வந்து பார்த்தபோது, கல்லறையில் யேசுநாதர் காணப்படவில்லை. ஆனால், தலையில் கட்டப்பட்டிருந்த சிறிய துணி மடிக்கப்பட்ட நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்தது. உடலை மூடிக்கட்டியிருந்த நீளமான துணி, அப்படியே போடப்பட்ட நிலையில் காணப்பட்டது. இந்த இரண்டு துணிகளைப் பற்றிய பதிவுகள் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. தலையில் கட்டப்பட்ட துணி, 'யேசுவின் முகத்துணி' (Face Cloth of Jesus) என்றும் 'சுடாரியம் கிருஸ்து' (Sudarium Christi)   என்ற விசேசப் பெயருடனும் அழைக்கப்படுகிறது. இங்கு ஒன்றைக் கவனத்தில் எடுக்க வேண்டும். கடந்த பகுதியில் சொல்லப்பட்ட வெரோனிக்காவின் முக்காடும், 'சுடாரியம்' என்றே அழைக்கப்பட்டது.

அதையும் இதையும் பலர் குழப்பிக் கொள்வதுண்டு. இந்தச் சுடாரியம் துணியில் எந்த உருவமும் பதிந்திருக்கவில்லை என்பது குறிபிடத் தக்கது. ஆனால், இறந்தவரின் முகத்திலும், தலையிலுமிருந்து வழிந்த இரத்தம், திட்டுத் திட்டாக இந்தத் துணியிலும் படிந்திருந்தது. இந்தச் 'சுடாரியம் கிருஸ்து' என்றழைக்கப்படும் துணி, இரண்டு அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்ட மெல்லிய 'லினன்' துணியாகும். இது தற்சமயம் வடக்கு ஸ்பெய்னில் உள்ள 'சான் சல்வடோர் தேவாலயத்தில்' (San Salvador Cathedral) பாதுகாக்கப்பட்டு வருகிறது.

     யேசுநாதரின் இறப்பில் மொத்தமாக மூன்று துணிகள் சம்மந்தப்பட்டிருக்கின்றன. வெரோனிக்காவின் முக்காடு, சுடாரியம் கிருஸ்து, டூரின் துணி என்பவைதான் அவை. இன்று பலரையும் குழப்பத்தில் வைத்துக் கொண்டிருப்பது டூரின் துணியாகும். இந்தத் துணியில் காணப்பட்ட உருவம் விஞ்ஞானிகளையே மிரள வைத்திருக்கிறது. கிருஸ்துவுக்குப் பின் 1357ம் ஆண்டுவரை இந்தத் துணிபற்றி யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதன் பின்னர் மெல்ல வரலாற்றில் காலடியெடுத்து வைத்திருக்கிறது.

 இந்தத் துணி, அறிவியல் ரீதியான அடையாளத்தை எடுத்தது 1898ம் ஆண்டில்தான். 'செகண்டோ பியா' என்னும் படப்பிடிப்பாளர் எடுத்த படம்தான் முதல் முதலாக அறிவியல் உலகத்துக்கு இந்தத் துணியைக் கொண்டுவந்து நிறுத்தியது. இதுபற்றி விவரமாகக் கடந்த பகுதியில் சொல்லியிருக்கிறேன். அதன்பின்னர் 1970ம் ஆண்டில் விஞ்ஞானிகளின் குழுவொன்று, இந்தத் துணியை ஆராய்வதற்கான அனுமதியை வத்திக்கானிடம் கேட்டிருந்தது. வத்திக்கானும் அதற்கு அனுமதியளித்தது. இதுவே இந்தத் துணியின் மர்மத்தை வெளியுலகுக்குக் கொண்டுவரத் திறக்கப்பட்ட இரண்டாவது கதவாக இருந்தது. பல நாடுகளிலிருந்து ஒன்றுகூடிய ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் கிட்டத்தட்ட 40 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்தார்கள்.

 அந்தக் குழு 'STURP' (Shroud of Turin Research Project) என்று அழைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இருந்தவர்களில் பெரும்பாண்மையானவர்களுக்கும் கத்தோலிக்க மதத்திற்கும் எந்தவிதச் சம்மந்தமுமில்லாமலிருந்தது. அதில் பலர் இறை மறுப்புக் கொள்கையுடையவர்களாகவும் இருந்தனர். பலரால் நம்பிக்கையான குழுவென்றே ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இரண்டு மில்லியன் டாலர்கள் செலவிலான கருவிகளைக் கொண்டு, இக்குழுவினால் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள் பல அதிர்ச்சி வகையானவை. நம்பமுடியாதவை. அவை என்ன என்னவென்று படிபடியாகப் பார்க்கலாம்.

     டூரின் துணியில், மூன்று வகையான அடையாளங்கள் காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் அவதானித்தனர். 1. துணியில் காணப்படும் உருவம். 2. ஆங்காங்கே திட்டுத் திட்டாகவும், துளித்துளியாகவும் காணப்படும் இரத்தம். 3. ஏதோ ஒரு சமயத்தில் எரியும் சூழ்நிலையிலிருந்து துணி தப்பியதற்கான அடையாளம். துணியில் காணப்பட்ட உருவம், முன்பின்னாக இரண்டு உடற்பகுதியாக முழுமையாகப் பதிந்திருந்தது. ஒரு கால் நீட்டப்பட்டும் மற்றுமொருகால் மேல்நோக்கி மடங்கிய நிலையிலும், கைகளில் வலக்கைக்கு மேலாக இடக்கை வைத்திருப்பது போல உருவம் பதிந்திருந்தது. ஒருவரைச் சிலுவையில் எப்படி வைத்து அறைந்திருப்பார்களோ, அந்த நிலையில் அந்த உருவம் காணப்பட்டது.

 கைகளில் ஆணி அறைந்ததற்கான அடையாளமும் காணப்பட்டன. ஆனால் அதில் ஒரு சிறிய மாற்றமொன்று இருந்தது. யேசுநாதரைச் சிலுவையில் வைத்து அறைந்த ஓவியங்களையும், படங்களையும், சிலைகளையும் நாம் பார்த்திருக்கிறோம். அவரது உள்ளங்கைகளிலேயே ஆணியடித்தது போல அவற்றில் இருப்பதை அவதானிக்கலாம். ஆனால், இந்த டூரின் துணியில் காணப்படும் உருவத்தில் மணிக்கட்டில் ஆணியடித்திருப்பது தெரிகிறது. உள்ளங்கையில் ஆணியடிப்பது என்பது முன்னரே சந்தேகமான விவாதங்களுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. அதாவது உள்ளங்கையில் ஆணியடித்த நிலையில், ஒருவரைச் சிலுவையில் அறைந்து நெடுநேரம் வைத்திருக்கவே முடியாது. உள்ளங்கை ஒரு மனிதனின் எடையைத் தாங்க முடியாமல் பிய்ந்துவிடும். அதனால் யேசுநாதரின் உள்ளங்கைகளிலும் ஆணியடிக்கப்படவில்லை என்ற சந்தேகம் முன்னரே எழுப்பப்பட்டிருந்தது.

 அந்தச் சந்தேகங்களுக்கு விடை தருவது போல, மணிக்கட்டில் ஆணியடித்த நிலையில் துணியில் உள்ள உருவம் காணப்பட்டது. மணிக்கட்டில் ஆணியடித்து ஒரு மனிதனைத் தொங்கவிடும் பட்சத்தில், அவனது எடையை அந்த எலும்புகள் தாங்கிக் கொள்ளும். இது ஆச்ச்சரியமானதொரு விசயமாக இருந்தது. அத்துடன் அந்தத் துணியில் காணப்படும் உருவத்தின் இடப்பக்க மார்புப் பகுதியில் ஈட்டியொன்றினால் குத்தியது போலப் பெரும் காயம் ஒன்றும் காணப்பட்டது. மார்புப் பகுதியில் காணப்படும் ஐந்தாவது இடப்பக்க விலா எலும்பில் அந்தக் காயம் இருந்தது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. 

     யேசுநாதரின் சரித்திரத்தைச் சொல்லும் புதிய ஏற்பாட்டில், அவரைச் சிலுவையில் அறைந்ததற்குச் சற்று நேரத்துக்குப் பின்னர் ஈட்டியேந்திய காவலனொருவன் இடப்பக்க மார்புப் பகுதியில் குத்தியதாக எழுதப்பட்டிருக்கிறது. இது மிகச்சரியாக அந்த உருவத்துடன் பொருந்திப் போகிறது. அத்துடன் யேசுநாதருக்கு இரத்தம் வருமளவுக்கு எங்கெல்லாம் காயங்கள் ஏற்பட்டதாகப் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறதோ, அந்த இடங்களிலெல்லாம் காயத்தின் அடையாளமும், இரத்தத் திட்டுகளும் காணப்பட்டது. தொடர்ந்து துணியில் இரத்தத் திட்டுகள் இருக்கும் இடங்களும் முழுமையாக ஆராயப்பட்டன. தலை, மார்புப் பகுதி, மணிக்கட்டு, கால்ப்பகுதி என்பவறில் அதிகளவு இரத்தமும், உடல் முழுவதும் சிதறிய நிலையில் இரத்தத் துளிகளும் காணப்பட்டன.

இதனால், அந்தத் துணியில் இருக்கும் உருவத்திற்குச் சொந்தக்காரன், இறக்குமுன் சித்திரவதை செய்யப்பட்டும், தலையில் முள்கிரீடம் அணியப்பட்டும், சவுக்கால் அடிக்கப்பட்டும் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டுமிருக்க வேண்டும் என்ற முடிவுக்கே ஆராய்ந்தவர்கள் வரவேண்டியிருந்தது. ஆனாலும், 'துணியில் உருவம் எப்படித் தோன்றியது?' என்ற கேள்வி மட்டும் எஞ்சி நின்றது. 'யேசுநாதரின் உருவம் அப்படியே துணியில் பதிந்துவிட்டது' என்று அங்கு சென்ற எந்த ஆராய்ச்சியாளரும் நம்பும் நிலையில் இருக்கவில்லை. காரணம் அறிவியல் ரீதியாக அதற்குச் சாத்தியமேயில்லை. 'அந்தத் துணி வேண்டுமானால் யேசுநாதரை மூடிய துணியாக உண்மையாகவே இருக்கலாம். ஆனால், பிற்காலங்களில் யாரோ அவரது ஓவியத்தை அதில் வரைந்திருக்க வேண்டும்' என்றே அவர்கள் முடிவுக்கு வந்திருந்தனர். ஆனால், இந்த முடிவு தவறு என்பதற்கான ஆதாரங்கள் அவர்களுக்கு வேறு வடிவத்தில் கிடைத்தது.

     ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாகத் துணியின் பின்பக்கம் ஆராயப்பட்டது.. அப்போதுதான் பிரமிக்கத்தக்க ஒரு ஆச்சரியம் தெரிய வந்தது. துணியின் பின்பக்கத்திலிருந்து பார்த்த போது, இரத்தத் திட்டுகளின் அடையாளங்களும், எரிந்த அடையாளங்களும் தெளிவாகத் தெரிந்தனவேயொழிய, உருவம் எதுவும் தெரியவில்லை. "முன்பக்கம் பார்க்கும் போது தெளிவாகத் தெரியும் உருவம், ஏன் பின்பக்கம் பார்க்கும் போது தெரியவில்லை?" என்று சிந்தித்த போதுதான், 'அந்த உருவம் வரையப்படவேயில்லை' என்ற சந்தேகம் தோன்றியது.  உடனடியாகத் துணியைப் பலவிதமான நுண்காட்டிக் கருவிகளினால் சோதனையிட்டனர். துணியின் நூல் பலமடங்கு பெரிதாக்கப்பட்டு ஆராயப்பட்டது.

அதன்மூலம், நூலில் ஓவியத்துக்கான மை எதுவுமே காணப்படவில்லை என்று திடமாகத் தெரிந்தது. இரத்தம் துணியிலுள்ள நூலில் நன்கு படிந்திருந்தது. ஆனால், உருவம் துணியின் மேல் பகுதியில் மட்டும் காணப்பட்டது. அந்தத் துணியில் உள்ள நூற்களில், உருவம் பதிந்திருந்த இடங்களில் எந்தவித இரசாயன மாற்றங்களும் நிகழ்ந்திருக்கவில்லை. அப்படியென்றால் அந்த உருவம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது? என்னும் கேள்விக்கான விடை தெரியவேயில்லை. அதிசயம் அல்லது அற்புதம் என்பதை நம்பாதவர்களும் அதை நம்பும் நிலைக்கு வந்துவிடுவார்களோவென்று தோன்றியது. எப்படிப் பார்த்தாலும் அதை யேசுநாதருடைய துணியல்ல என்று மறுப்பதற்கு எந்த சான்றும் கிடைக்கவில்லை. 'புறஊதாக்கதிர்' (Ultra Violet Light) ஒளியைத் துணியின் மேல்புறம் செலுத்தியும் பார்த்தார்கள்.

அப்போது இன்னுமொரு ஆச்ச்சரியமும் காத்திருந்தது. புறஊதாக்கதிர்களின் ஒளியில், இரத்தமும், எரிந்த கோடுகளும் மட்டுமே தெரிந்தன. உருவம் தெரியவேயில்லை. தலையே சுற்றியது அவர்களுக்கு. அந்த உருவம் என்ன வகையாக அந்தத் துணியில் பதிந்தது என்று எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. இறுதியாகச் செய்து பார்த்துவிட வேண்டிய பரிசோதனையாக எஞ்சியிருந்தது ஒன்றேயொன்றுதான். அந்தப் பரிசோதனைதான் 'கார்பன் தேதிப் பரிசோதனை' (Carbon Dating).

     கார்பன் தேதிப் பரிசோதனைக்காக டுரின் துணியில் சிறுபகுதியை வெட்டியெடுக்க வேண்டியிருந்தது. அதில் பலருக்கு ஆரம்பத்தில் சம்மதமிருக்கவில்லை. பின்னர் ஒருவாறு 'இந்த உண்மையைக் கண்டுபிடித்தே தீர வேண்டும்' என்பதற்காக, அந்தத் துணியின் மேல்ப்பக்க மூலையில் ஒரு சிறிய துண்டை வெட்டியெடுக்கச் சம்மதித்தார்கள். கார்பன் தேதிப் பரிசோதனையின் முடிவு மட்டும், 'இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள துணிதான்' என்று வந்துவிட்டால், பொருந்தாமலிருந்த அனைத்துக் கட்டங்களும் மிகச்சரியாக அந்த அந்த இடங்களில் பொருந்திவிடும்.

இந்தத் துணி யேசுநாதரினுடையதுதான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லாமல் போய்விடும். அதனால் இந்தக் கார்பன் தேதிப் பரிசோதனையின் முடிவைப் பலர் ஆவலுடன் காத்திருந்தனர். இறுதியில் முடிவும் வந்தது. ஆனால் வந்த முடிவு பலரை ஏமாற்றத்துக்குக் கொண்டு சென்றது. கார்பன் தேதிப் பரிசோதனையின் முடிவு மிகத் தெளிவாகச் சொன்னது, "அந்த டூரின் துணி கி.பி.1260ம் ஆண்டிலிருந்து கி.பி.1390 ஆண்டு வரையிலான காலகட்டங்களில் உருவாக்கப்பட்டது". அதாவது பிரான்ஸ் நாட்டின் 'லிரே' நகரில் இந்தத் துணி இருந்த காலகட்டம் இந்தக் கார்பன் தேதிப் பரிசோதனையுடன் நூறுசதவீதம் ஒத்துப்போனது. பிரான்ஸ் நாட்டைக் காத்த மாவீரன் ஒருவனின் உடலைப் போர்த்திய துணிதான் இதுவென முன்னரே பலருக்குச் சந்தேகம் இருந்து வந்தது. அந்தச் சந்தேகத்தை கார்பன் தேதிப் பரிசோதனை தீர்த்து வைத்தது.

     அதுவரை டூரின் துணி, யேசுநாதருடையதுதான் என்பதற்கான சான்றுகள் அனைத்தும் சரியாக அமைந்திருந்தன. அதனால், முழுமையான நம்பிக்கையுடன் இருந்த கத்தோலிக்க மக்கள் மிகவும் ஏமாற்றத்துக்குள்ளானார்கள். இதற்கு எதிரானவர்கள், 'போலியை வைத்து இதுவரை மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்' என்று உலகமெங்கும் பேச ஆரம்பித்தனர். 'டூரின் துணி போலியானது' என்று முடிவு செய்யப்பட்டு அதைப் பற்றிப் பேசிவந்தவர்களெல்லாம், சிலகாலங்களின் பின்னர் மெல்ல மெல்ல அதை மறக்கவும் ஆரம்பித்தனர்.  'இனியென்ன விசயம் அத்துடன் முடிந்து போனது' என்றுதான் அனைவரும் நினைத்தனர்.

ஆனால் பல ஆண்டுகளின் பின்னர், வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்த 'சூ பென்ஃபோர்ட்' (Sue Benford) என்னும் பெண்மணி மூலம் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. 'சூ பென்ஃபோர்ட்டுக்கு டூரின் துணி சம்மந்தமாக ஒரு சந்தேகம் தோன்றியது. டூரின் துணியில் படங்களைப் பலவிதமாக வைத்து ஆராய்ந்து பார்த்த அவருக்குத் திடீரென மூளையில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. "அட! விசயம் இதுதான்" என்று முடிவுக்கு வந்த அவர், உடனடியாகக் கார்பன்தேதிப் பரிசோதனை செய்த ஆராய்ச்சியாளர்களுக்கு எதிரான அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில், அவர் சொல்லியிருந்தது இதுதான். "டூரின் துணியானது பல ஆண்டுகாலம் பலரின் கைகளுக்கு மாறி, இறுதியாக லிரே நகரை வந்தடைந்திருக்கிறது. இந்தக் காலகட்டங்களில் அந்தத் துணியானது ஒரு தீவிபத்தொன்றிலும் அகப்பட்டிருக்கிறது. அதனால், அந்தத் துணியைப் பாதுகாக்க விரும்பியவர்கள், அதன் கரையோரப் பகுதிகளுக்கு வேறு ஒரு துணியை நீளமாக வைத்துத் தைத்திருக்கின்றனர். அப்படி அவர்கள் தைத்திருந்த துணியையே கார்பன் தேதிப் பரிசோதனைக்கு வெட்டியெடுத்திருக்கிறார்கள். உண்மையான துணி வெட்டப்படவேயில்லை". சூ பென்ஃபோர்ட் அவர்களின் இந்தப் புரட்சிகரமான கருத்து, சோர்ந்து போயிருந்தவர்களுக்கு ஊக்க மருந்தாகத் தொழிற்பட்டது. உடனடியாக அவர் சொன்னதை ஆராய்ந்து பார்த்தார்கள்.

அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையென்று உறுதியானது. டூரின் துணியின் பாதுகாப்புக் கருதி, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதன் கரையோரப் பகுதிகளுக்கு வேறு துணி சேர்த்துவைத்துத் தைக்கப்பட்டது உறுதியானது. மிகவும் நவீன அறிவியல் கருவிகளின் மூலம் பலவிதங்களில் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்தார்கள். கார்பன் தேதிப் பரிசோதனை செய்தவர்கள் கூடத் தங்கள் தவறை ஒத்துக் கொண்டனர். தவறு கார்பன்தேதிப் பரிசோதனையில் இருக்கவில்லை. அந்தச் சோதனைக்குக் கொடுக்கப்பட்ட துண்டில் இருந்தது.

     டூரின் துணி மீண்டும் அனைவரின் பேசுபொருளானது. முன்னரை விட, அதில் அதிக நம்பிக்கையும் பலருக்குத் துளிர்விடத் தொடங்கியது. ஆராய்ச்சியாளர்களால் முன்னர் செய்த பரிசோதனைகளின் முடிவுகள் மீண்டும் ஆராயப்பட்டன. குறிப்பாக அதில் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் முடிவு, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாஸா பயன்படுத்தும் 'VP8 Image Analyzer' என்னும் கருவியினால், டூரின் துணியில் எடுக்கப்பட்ட உருவத்தைப் படமெடுத்திருந்தனர். VP8 Image Analyzer என்பது, விண்வெளியில் இருந்து கொண்டு பூமியின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்யும் ஒருவகைப் படப்பிடிப்புக் கருவி. நிலப்பரப்பின் முப்பரிமாணத்தைச் (3D) சரியாகக் கணித்துச் சொல்லும் கருவி அது. அந்தக் கருவியில் டூரின் உருவப் படத்தை வைத்துப் பார்த்த போது, அதிர்ந்து போனார்கள். அதில் தெரிந்ததைக் கண்ட நாஸாவினருக்கே தலைசுற்றத் தொடங்கியது.

அதில் அப்படித் தெரிந்தது என்ன தெரியுமா? யேசுநாதர் என்று நம்ப்பப்பட்ட அந்த முகம், முப்பரிமாணத் தோற்றத்துடன் அங்கு காணப்பட்டது. ஹோலோகிராமில் முப்பரிமாணத்தில் தெரிவது போல, அந்த முகம் மேல் நோக்கியபடி எழுந்து முப்பரிமாணத்தில் காணப்பட்டது. என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. நம்பவே முடியாத ஆச்சரியம் அது. ஆச்சரியம் அல்ல, அற்புதம். இந்த உருவம் நிச்சயமாக யேசுநாதரினுடையதுதான் என்ற முடிவுக்குச் சுலபமாக வரக்கூடியதாக இருந்தது. வியப்பின் மேல் வியப்புக் கூடிக் கொண்டே சென்றது. அறிவியலின் அனைத்து கோணங்களும் அடைக்கப்பட்டு, விஞ்ஞானிகளைத் திக்குமுக்காட வைத்தது.!

டூரின் சவப்போர்வை (The Shroud of Turin ) 

இந்த உலகத்தில் ஒரு துணி இவ்வளவு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்குமென்றால் அது இத்தாலியில் டூரின் நகரில் புனித ஜான் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் இறந்தவர்களது உடலை அடக்கம் செய்யும் போது உடலைச் சுற்றப் பயன்படுத்தப் படும் ஒரு பழைய சவப்போர்வைதான். 1578 ஆம் ஆண்டிலிருந்து அதாவது கடந்த 450 ஆண்டுகளாக ஒரு சிவப்பு பட்டுத்துணியில் சுற்றப்பட்டு வெள்ளிப் பேழையில் வைக்கப் பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 14 அடி நீளமும் 3.5 அடி அகலமும் கொண்ட அந்தத் துணியில் அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா? அதில் ஒரு மனிதனின் முன்பக்க, பின்பக்க உருவம் பதிந்திருக்கிறது.

நீளமான ஒரு துணியில், ஒரு உடலை நீட்டுவாக்கில் படுக்க வைத்து அதே துணியின் மீதப் பகுதியால் அந்த உடம்பைத் தலையிலிருந்து போர்த்தினால் அந்த உருவத்தின் பதிவு அந்தத் துணியில் ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அது மாதிரியான தோற்றம் பதிந்திருக்கிறது.

இதை வெறும் கண்களால் பார்க்கும் போது ஃபோட்டோ நெகடிவ் பிரதியில் எப்படித் தெரியுமோ அப்படி தெரிகிறது. ஃபோட்டோ எடுத்து அதன் நெகடிவில் பார்த்தால் நிழல் போல உருவம் துல்லியமாகத் தெரிகிறது.

இந்தத் துணிக்கும் அதில் பதிந்திருக்கும் உருவத்துக்கும் மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று இந்நேரம் ஊகித்திருப்பீர்களே!!! ஆம்.. ஏசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட பிறகு அவரது உடலை மூடப் பயன்பட்ட துணி என்றும் அதில் பதிந்துள்ள உருவம் சாட்சாத் ஏசுவினுடையதுதான் எனவும் நம்பப்படுவதால் தான் அதற்கு இத்தனை மவுசும் அது உண்மையா இல்லையா என்று தொடரும் மர்மமும்.

சரி..அது எப்படி அந்த உருவம் ஏசுவினுடையதுதான் என நம்ப என்ன ஆதாரம்? அந்த உடல் அந்தத் துணியில் சுற்றப்படுவதற்கு முன் மிகவும் சித்திரவதைக்குள்ளான அடையாளங்களும், ரத்த தடயங்களும் அதில் பதிந்துள்ள மாதிரி காட்சியளிக்கிறது. ஏசுவை யூதர்கள் சிலுவையில் அறைந்த போது என்னென்ன கொடுமைகள் செய்தார்களென்று படித்த அல்லது சினிமாவில் பார்த்த காட்சியை நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள். அவருடைய தலையில் முள் கிரீடம் வைத்தால் எப்படித் தலையில் காயம் உண்டாகுமோ அப்படிப்பட்ட காயத்தினால் ஆனது போல ரத்த அடையாளங்கள் அந்தத் துணியில் பதிந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் ஏசுவை சிலுவையில் அறைந்த போது ஆணியால் உண்டான ஓட்டைகள் காலிலும், இரண்டு கை மணிக்கட்டுக்களிலும் (பொதுவாக நம்பப்படுவது போல் சிலுவையில் அறையப்படும் போது உள்ளங்கையில் ஆணிகள் அடிக்கப்படுவதில்லையாம், ஏனென்றால் சிலுவையைத் தூக்கி நிறுத்தும் போது உடலின் பாரம் தாங்காமல் உள்ளங்கை சதையை பிய்த்துக் கொண்டு உருவம் கீழே விழுந்து விடுமாம்.அதனால் ரோமானிய காலத்தில் மணிக்கட்டில்தான் ஆணி அடிப்பார்களாம் ) இருந்ததும் அதிலிருந்து வெளிவந்த ரத்தச் சாயலும் கூட இந்தத் துணி உருவத்தில் பதிந்துள்ளதாம். இதையெல்லாம் வைத்து மத நம்பிக்கையாளர்கள் இது ஏசு நாதர் உடலை மூட பயன்பட்ட சவத்துணி என்றும் அதில் பதிந்துள்ள உருவம் அவருடையதுதான் என திடமாக நம்புகிறார்கள்.

மறுதரப்போ இது மத நம்பிக்கையைத் தூண்ட ஏற்படுத்தப்பட்ட ஒரு நாடகம் என்று ஆணித்தரமாக வாதிடுகிறார்கள்.இதற்கு இவர்கள் தரப்பில் எடுத்துக் காட்டப்படும் ஆதாரங்களையும் அதற்கு நம்பிக்கையாளர்கள் தரப்பில் சொல்லும் விளக்கங்களையும் (அடைப்புக் குறிக்குள்) பார்க்கலாம்.

1) இது ஏசுவினுடையதுதான் என்றால் அவர் இறந்த 1500 ஆண்டுகளாக எங்கிருந்தது? இது பற்றி ஏன் பைபிளிலோ வேறெதிலுமோ எந்தக் குறிப்பும் இல்லை.

( 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளில் பைசாந்தைன், கான்ஸ்டான்டிநோபில் போன்ற இடங்களில் சில குறிப்புகள் உள்ளன. மேலும் கடவுளரின் பொருட்கள் அனைத்தும் எல்லா புராணங்களிலும் மனித ரூபங்களாக சித்தரிக்கப் படுவது போல் (புரிதலுக்காக என்னுடைய லோக்கல் உதாரணம்- விஷ்ணு பகவான் கையிலுள்ள சக்கராயுதம் சக்கரத்தாழ்வார் எனும் ரூபமாக வழிபடப்படுவது போல்) இந்தத் துணியும் வெள்ளை ஏஞ்சல் என குறிக்கப்பட்டுள்ளது என்றும் மேரி மக்டலீன் ஏசு உயிர்தெழுந்த அன்று பார்த்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளை ஏஞ்சல், அவர் இந்தத் துணியை/அதில் ஏசு உருவத்தை பார்த்ததைக் குறிப்பதே என்கிறார்கள்)

2) 1998 ஆம் வருடம் உலகின் 3 வெவ்வேறு விஞ்ஞானக் கூடங்களால் கார்பன் டேட்டிங் முறைப்படி இந்தத் துணியின் காலம் ஆராயப்பட, அந்த மூன்று முடிவுகளுமே இந்தத் துணி 1350 ஆம் வருடத்துக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறியிருக்கின்றன

(பரிசோதனைக்கு எடுக்கப் பட்ட சாம்பிளே தப்பு. பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் இந்தத் துணி வைக்கப் பட்டிருந்த தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தத் துணியின் சில பகுதிகள் எரிந்து ஓட்டையாகி விட்டன .இந்த சேதமடைந்த பகுதிகளை அங்கிருந்த கன்னிமார் ஒருவர் ஊசி நூல் கொண்டு தைத்திருக்கிறார் (இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. 19-ஆம் நூற்றாண்டில் அப்படித் தைக்கப்பட்ட பகுதியிலிருந்து நூல் அப்புறப்படுத்தப்பட்டு துணி அதன் பழைய நிலையிலேயே தீ பட்ட ஓட்டைகளுடன் ரெஸ்டோர் செய்யப்பட்டுள்ளது- இந்த ஓட்டைகளைப் படத்தில் காணலாம்).கார்பன் டேட்டிங்கிற்கு எடுக்கப் பட்ட மாதிரி நூல் பிற்காலத்தில் துணியைத் தைக்கப பயன்பட்ட நூலின் பகுதி, அதனால்தான் பிற்காலத்தையது போல் முடிவுகள் கிடைத்துள்ளன)

3) எந்த ஒரு உடலையும் துணியில் சுற்றினாலும் அந்தத் துணியில் அந்த உருவம் பதியாது. அதுவும் உதடு கண்கள் போன்ற உள்ளடங்கிய பகுதிகள் கூட துல்லியமாகப் பதிய வாய்ப்பே இல்லை.அப்படியானால் அந்தக் காலத்தில் எத்தனையோ உடல்கள் மீது போர்த்தப் பட்ட சவப்போர்வைகள் உள்ளன அதிலெல்லாம் எந்த உருவமும் பதியவில்லை. இது வேண்டுமென்றே ஸ்டார்ச், கெமிகல் போன்றவற்றைக் கொண்டு ஒரு உருவத்தைப் பதிய வைத்து அது ஏசுநாதர்தான் என்று நம்ப வைத்து மதத்தைப் பரப்பும் பம்மாத்து வேலை.

(செயற்கையான முறையில் செய்விக்கப்பட்டதென்றால் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இன்றைய காலகட்டத்தில் கூட அது போன்று ஒரு உருவத்தைத் துணியில் பதிப்பித்துக் காட்ட முடியவில்லையே. மேலும் மூன்றாம் நாள் ஏசு உயிர்த்தெழுந்தபோது ஏற்பட்ட பிரகாசத்தின் காரணமாக உடல் பாகங்களின் மிக நுணுக்கமான பதிவுகள் துணியில் ஏற்பட்டுள்ளன- photo flash&energy theory)

4) இந்தத் துணியில் உள்ள கறைகள் மனித ரத்தம் இல்லை கெமிகல் சமாச்சாரம். (ரத்தம் தான்..ஆய்வில் ஹிமோக்ளோபின் உறுதி செய்யப்பட்டுள்ளது )

இப்படியாக முடிவில்லாத் தொடர்கதையாகப் போகிறது இந்த வாதங்கள். இதில் எந்தத் தரப்பு வாதத்தையும் புறந்தள்ளி விட முடியாதபடிக்கு இரண்டு பக்கமுமே படித்தவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளதால் இன்னும் மெய்யா பொய்யா என்று நிரூபணமாகாமலேயே அவிழாத மர்ம முடிச்சாகவே தொடர்கிறது டூரின் சவப்போர்வை.

எது எப்படியோ 2010-ஆம் ஆண்டு பொது மக்கள் பார்வையிட 45 நாட்கள் அனுமதிக்கப் பட்ட போது, அந்த 45 நாட்களில் உலகமெங்கிலும் இருந்து வந்து இந்த டூரின் சவப்போர்வையைப் பார்த்துச் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 20 லட்சம் பேர்.