நரகம் எண்பிக்கும் உன்னத தேவ நீதி!

இவ்வளவு நல்லவரும், அளவுகடந்த விதமாய் மனுக்குலத்தை நேசிப்பவரும், கருணையே உருவானவருமாகிய சர்வேசுரன், இவ்வளவு பயங்கரமுள்ள நரகத்தைக் கொண்டு ஆன்மாக்களைத் தண்டிப்பாரா? இதெல்லாம் கட்டுக்கதை என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், இந்த நரகத்திலிருந்து ஆத்துமங்களைக் காப்பாற்ற சர்வ வல்லபரான சர்வேசுரன் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப் பட்டிருக் கிறார்கள்.

சர்வேசுரன் யார்? சகலத்தையும் படைத்தவர்; சகலத்தையும் காண்கிறவர்; சகலத்தையும் அறிகிறவர்; சர்வ நன்மைச் சுரூபியானவர்; ஆதியும் அந்தமுமானவர்; ஆதியும் அந்தமும் இல்லாதவர்; சர்வ வல்லவர்; மகா பரிசுத்த அரூபியானவர்; எங்கும் வியாபித்திருக்கிறவர்.

கடவுள் அனைத்திலும் சம்பூரணமானவர். சகலத்திலும் உத்தமமானவர்; அவரில் குறைவின் நிழல் முதலாய் இல்லை. மாறாதவர், ஏனெனில் மாற்றம் என்பது வளர்ச்சி யடைதல், அல்லது தேய்வடைதல் ஆகும். சர்வேசுரனோ, இனி எதிலும் அதிகரிக்க முடியாத அளவுக்கு சகலத்திலும் சம்பூரணத் தன்மையுள்ளவர், எதுவும் தம்மில் குறைவுபடாத அளவுக்கு, சகல நன்மைகளும் சம்பூரணமாய் நிறைந்திருக் கிறவர் அவர். மாறக்கூடியவராக இருந்தால், அவர் சர்வேசுரனாக இருக்க முடியாது.

தமது அகவெளிப்பாட்டில் பரிபூரணப் பேரின்பத்தால் நிறைந்திருப்பவர் சர்வேசுரன். அவர் மகிழ்ச்சியாயிருப்பதற்கு படைப்புகள் அவருக்குத் தேவையில்லை. எந்தத் துணையும், தேவையுமின்றி, அவர் தம்மில்தாமே பூரண மகிழ்ச்சியாயிருக்கிறார்.

அப்படிப்பட்டவர் தமது புறவெளிப்பாட்டில், தாம் கொண்ட அளவற்ற சிநேகத்தினால் மனிதர்களைப் படைக் கிறார். மனிதன் பாவத்தைச் செய்து, கடவுளை விட்டுப் பிரிந்து போன போது, அவர் அவனைக் கைவிட்டிருந்தார் என்றால், அதனால் அவருக்கு வந்திருக்கக் கூடிய பாதிப்பு ஏதுமில்லை. பாவம் கட்டிக்கொண்ட கணமே சம்மனசுக்களில் மூன்றில் ஒரு பகுதியினரை அவர் தண்டித்து, நரகத்தில் தள்ளினார். இதனால் அவரது பேரின்பப் பெருங் கடலில் ஒரு துளி முதலாய்க் குறையவில்லை. மனிதனை அவனது பாவத்திலிருந்து மீட்டு இரட்சிப்பது அவர் பூரண மகிழ்ச்சியாயிருப்பதற்கு எந்த விதத்திலும் அவசியமே யில்லை .

ஆனால் தமது அளவற்ற நேசத்தினால் மனிதனைப் படைத்த சர்வேசுரன், அதே நேசத்தின் தூண்டுதலால் அவனை இரட்சிக்கவும் திருவுளம் கொண்டார். பாவத்தினால் தமக்கு எதிராகத் தனது கலகத்தை உலகில் தொடங்கி விட்ட மனிதனை இரட்சிக்க, தம் ஏகபேறான திருச்சுதனையே உலகிற்கு அனுப்பும் அளவுக்கு சர்வேசுரன் உலகத்தை நேசித்தார் என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார்.

இப்படி பாவத்திலிருந்து மனுக்குலத்தை மீட்கும்படி மனிதனாக வரவிருந்த தேவன் ஓர் அரச குடும்பத்தில் வந்து பிறப்பார், அரச பரிவாரங்களும், படைகளும் சூழ அவர் உலக முழுவதையும் ஆட்சி செய்வார் என்று யூதர்கள் நம்பியிருக்க, அவரோ சகலராலும் கைவிடப்பட்டவராக, உலகின் கண்களுக்கு ஓர் ஏழைச் சிறுமியாகத் தோன்றிய அமல உற்பவப் பரிசுத்ததனத்தின் திருவுதரத்தில் கர்ப்பமாய் உற்பவித்து, மாட்டுத் தொழுவத்தில் வந்து பிறந்தார்.

அந்தத் தீவனத் தொட்டியின் மேலே வைக்கோலின் மீது படுத்திருக்கும் குழந்தையைப் பார்! இன்னும் கண்களைத் திறக்க முடியாதிருக்கிறார்! குளிரில் வருந்தி அழுகிறார்! அவருடைய தாயின் திரு அமுதிலும் அரவணைப்பிலும் அமைதி கொள்கிறார்; ஓர் அரசனின் கோபத்திற்குத் தப்பி அந்நிய தேசத்திற்கு ஓடிப் போகிறார்! அங்கே அகதியாகக் காலம் கழிக்கிறார். பசியும் பட்டினியுமாகத் தம் நாட்களைக் கழிக்கிறார்! ஆயினும் அவர் சர்வேசுரன்! உலகமெல்லாம் அவருடையது! காண்பவையும், காணாதவையுமான ஒவ்வொன்றும் அவருடையது!

"உன் 33-ஆம் வயதில் நீ ஒரு சாலை விபத்தில் இறந்து போவாய்” என்று கடவுள் ஒரு மனிதனுக்குத் தீர்க்கதரிசனமாக அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள். இனி அவன் ஒரு வினாடியாவது அமைதியாய் இருக்க முடியும் என்று நினைக்கிறாயா? அவன் பெரிய கோடீஸ்வரனாக இருக்கலாம். உலகமே அவனைச் சுற்றி நின்று துதி பாடலாம். உலகில் அவன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைக்கலாம். பட்டும், பொன்னும், வைர வைடூரியமும் அணிந்து நாள்தோறும் விருந்தாடலாம். ஆனால் அவன் மகிழ்ச்சியாயிருப்பானா? ஒவ்வொரு கணமும் தனது அவல மரணத்தைப் பற்றிய நினைவு அவனை அரித்துத் தின்று கொண்டே யிருக்காதா?

ஆ, நமக்காக மனிதனாய் வந்து பிறந்த சர்வேசுரன் இதே நிலையில்தானே இருந்தார்! எதிர்காலத்தையும், அது நமக்கென வைத்திருக்கும் துன்பங்களையும் அறியாதிருக்க நமக்கெல்லாம் இருக்கிற பாக்கியம் முதலாய் நம் சேசுவுக்கு இல்லையே! சர்வேசுரனாய் இருந்ததால், தம் கொடிய மரணத்தின் ஒவ்வொரு வேதனையையும், துன்பத்தையும் என் ஆண்டவர் துல்லியமாக உணர்ந்திருந்தாரே! அவர் வளர வளர, இந்தக் கொடிய துன்பமும் அவரோடு சேர்ந்து வளர்ந்து கொண்டே வந்ததே!

சுவிசேஷகரான அர்ச். லூக்காஸ் வரைந்த பரிசுத்த இடைவிடா சகாயமாதாவின் திருச்சித்திரம் மேற்கூறிய காரியத்தைத் துல்லியமாக விவரிக்கிறது. அதில் தமது திவ்ய அன்னையின் திருக்கரத்தில் இருக்கும் சேசு பாலனிடம் அர்ச். மிக்கேல் அதிதூதரும், அர்ச். கபிரியேல் தூதரும் தோன்றி, அவருடைய சிலுவைப்பாடுகளின் கருவிகளைக் காண்பிக்கிறார்கள். ஆண்டவர் அவற்றைக் கண்டு மிரண்டு தம் தாயை அச்சத்தோடு ஒண்டிவர, மாதா வேதனையோடு அவரை ஆதரவாக அணைத்துக் கொள்ளும் அதே வேளையில், அந்தப் பரபரப்பினால் சேசு பாலனின் ஒரு காலணி கழன்று கீழே விழுகிறது!

ஆம், தம் பிறப்பு முதலே தம் திருப்பாடுகளை எந்நேரமும் தம் கண்முன்பாகக் கொண்டு வாழ்ந்தார் நம் ஆண்டவர். உண்மையில் இதை விடக் கொடூரமானதும், பரிதாபமானதுமான வாழ்வு இருக்கவே முடியாது.

முப்பது வயது வரை, தம் தாய் தந்தையருக்குக் கீழ்ப் படிந்து, தச்சனின் மகனாக, தாமே ஒரு தச்சனாகக் கூலி வேலை செய்து வாழ்வு நடத்திய தேவ சுதன், காலம் நிறைவுற்ற போது, தமது பொது வாழ்வைத் தொடங்கி, பாலஸ்தீனமெங்கும் கால்நடையாகவே சுற்றித் திரிந்து, பரலோக இராச்சியம் நெருங்கி விட்டது என்னும் நற்செய்தியை எங்கும் போதித்து, தமது புதுமைகளால் தமது தெய்வீகத்தை எண்பித்து வந்தார். கிடைத்ததை உண்டார், வெயிலிலும், மழையிலும், குளிரிலும் நடந்து சோர்ந்தார், வானத்தையே கூரையாகக் கொண்டு படுத்துறங்கினார், பகலெல்லாம் நற்செய்தி அறிவித்தபின் இரவு முழுவதும் விழித்திருந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார்.

குறித்த காலம் வந்தபோது, தமது கொடிய மரணத்திற்குத் தம்மைக் கையளித்தார். ஒலிவத் தோப்பில், தமது திருப்பாடுகளை இன்னும் தீர்க்கமாகக் கண்டு துடித்தார். இவ்வளவு பாடுகளுக்குப் பின்னும், மனந்திரும்பாமல் நரகத்தில் விழும் கோடிக்கணக்கான ஆன்மாக்களுக்குத் தம் திரு இரத்தம் பயனற்றுப் போவதைக் கண்டு, கூடுமானால் இந்தப் பாத்திரம் தம்மை விட்டு விலகும் படியாக ஜெபிக்கும் அளவுக்கு கொடூர வேதனைக்குள்ளாகி, இரத்தத்தை வியர்வையாக சிந்தினார். மனிதர் அனைவருடையவும் சகல பாவங்களும் அவர்மீது சுமத்தப்பட, தமது பிதாவின் கடுஞ் சினத்திற்கு உள்ளாகி, தமது நித்திய வாழ்வில் முதல் முறையாக, அவரைப் பிரிந்து “நரக வேதனையை” அனுபவித்தார்!

இறுதியாக நண்பனாயிருந்த ஒரு துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்டு, மரணத் தீர்வை பெற்று, கற்றூணில் கட்டுண்டு, உள்ளுறுப்புகளும் கன்றிப்போகும் அளவுக்கு ஐயாயிரத்துக்கும் அதிகம் அடிபட்டு, முள்முடி சூட்டப்பட்டு, இசையாஸ் தீர்க்கதரிசி கூறுவது போல, மனித சாயலையே இழந்து, திருச்சிலுவைப் பாதையில், பதினைந்தடி நீள சிலுவையைச் சுமந்து தொய்வோடு நடந்து, மழுங்கிய ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டு, ஏறக்குறைய நிர்வாணியாக இரு கள்வர்களுக்கிடையே மூன்று மணி நேரம் தொங்கி, மகா கொடிய வாதைகளை அனுபவித்து, தமது இறுதித் துளி இரத்தத்தையும் முதலாய் சிந்தி, மரித்தார். தமக்குச் சொந்தமில்லாத ஒரு புதுக்கல்லறையில் அடக்கம் செய்யப்படும் அளவுக்கு பூரண ஏழையாகதம் வாழ்வை முடித்தார்.

ஆயினும் தாம் முன்னறிவித்தது போலவே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, தம் அப்போஸ்தலர்கள் வழியாய்த் திருச்சபையை ஏற்படுத்தினார். தாமே ஏற்படுத்திய தேவத்திரவிய அநுமானங்களை அத்திருச்சபையிடம் ஒப்படைத்து, அவற்றின் வழியாகவும், இன்னும் வேறு வரப்பிரசாத வாய்க்கால்களின் வழியாகவும் நமக்குத் தமது வரப்பிரசாதங்களையும், பேறுபலன்களையும் வழங்கி வருகிறார். 

நம் கரத்தைப் பிடித்து, நம்மைப் பாதுகாப்பாக மோட்சத்திற்கு அழைத்து வருவதற்காகவும், மோட்சம் செல்ல நமக்குத் தேவை யான சகல வரப்பிரசாதங்களையும் நமக்குக் பகிர்ந்தளிப்பதற் காகவும் தம்முடைய திருமாதாவையே நமக்கும் தாயாகத் தந்தார். நமக்கு வரும் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க ஒரு காவல் சம்மனசானவரை நமக்குத் தந்திருக்கிறார். 

ஏழு முறை எழுபது முறை பாவம் செய்தாலும், மனஸ்தாபத்தோடு அவரை நெருங்கிப் போகும் போதெல்லாம், பாவசங்கீர்த்தனத்தின் வழியாக நம்மை மன்னித்து, இந்தக் கண்ணீர்க் கணவாயாகிய பரதேச வாழ்வில் நமக்குத் திடனாகவும், போஜனமாகவும் தம்மையே நமக்குத் திவ்விய நற்கருணை மூலமாகத் தந்து வருகிறார்.

பரலோக, பூலோக, பாதாள லோகமென்னும் மூன்று லோகங்களிலும் அடங்காத தேவாதி தேவன் நமக்காக மனிதனாகி, நம் இரட்சணியத்திற்காக இவ்வளவையும் செய்து முடித்த பின்னரும், “எனக்கு நீர் தேவையில்லை! நீர் எனக்கு வாக்களிக்கிற அந்த எதிர்கால நித்திய வாழ்வில் எனக்கு நம்பிக்கையில்லை. அது எனக்குத் தேவையு மில்லை! நரகத்தைப் பற்றி எனக்கு பயமும் இல்லை.

நான் நேசிக்கிற இந்த உலக இன்பங்களையும், அந்தப் பெண்ணையும், இந்த செல்வங்களையும் விட நீர் அதிக அழகுள்ளவராய்த் தோன்றவில்லை” என்று சொல்லி, அவருடைய அளவில்லாத நேசத்தை நிந்தித்துப் பரிகாசம் செய்கிற ஒருவனுக்கு நரகம் கூட குறைவான தண்டனை தான் அல்லவா?

பாவம் அளவற்றவராகிய சர்வேசுரனுக்கு எதிராக மனிதரால் கட்டிக்கொள்ளப்படுகிறது என்பதாலேயே அது அளவற்ற கொடிய தன்மையுள்ளதாக இருக்கிறது. ஆகவே அளவற்றதாயிருக்கிற ஒரு தண்டனையான நரகத்தைக் கொண்டு அது தண்டிக்கப்படுவது முற்றிலும் அறிவுக்கு உகந்ததாகவே இருக்கிறது.

“சர்வேசுரன் அன்பும், இரக்கமுமே உருவானவர். தாமே படைத்த ஆன்மாக்களைத் தண்டிப்பதற்காக இவ்வளவு பயங்கரமான நரகத்தை நல்ல சர்வேசுரன் ஏற்படுத்தியிருக்க வாய்ப்பேயில்லை” என்று சிலர் கூறுகிறார்கள்.

அவர் அன்பும் இரக்கமும் உருவானவர், மனிதன் மீது கொண்ட நேசத்திற்காக தம் உயிரையும் கையளித்தவர், இவ்வாறு தம் உயிரை விட அதிகமாக ஆத்தும இரட்சணி யத்தை மதிக்கிறவர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இவர்கள் ஒரு முக்கியமான சத்தியத்தை மறந்து போகி றார்கள். “அவர் எந்த அளவுக்கு இரக்கமுள்ளவராக இருக் கிறாரோ, அதே அளவுக்கு நீதியுள்ளவராகவும் இருக்கிறார்' என்பதுதான் அது!

தன் நாட்டில் கொலை, கொள்ளை, வன்முறைகள், பயங்கரவாதத்தில் ஈடுபடும் கொடியவர்களை ஓர் அரசன் இரக்கம் என்ற பெயரில் எந்த விதத்திலும் தண்டிக்காமல் தன் நாட்டில் சுதந்திரமாகத் திரிய அனுமதிப்பான் என்றால், அவன்தான் நல்ல அரசன் என்று இவர்கள் கூறுவார்களா? 

தீயவர்களை அடக்கி ஒடுக்கி, அவர்களைத் தண்டித்துக் கீழ்ப்படுத்தி, அதன் மூலம் நல்லவர்களைக் காப்பவன்தானே நல்ல அரசனாக இருக்க முடியும்? 

சர்வேசுரன் பூலோக அரசர்களுக்கெல்லாம் அரசர்! நல்லவர்களுக்கு இரக்கம் காட்டுவதும், தீயவர்களைத் தண்டிப்பதும் அவருடைய சுபாவ இலட்சணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆகவே, தீயவர்களைத் தண்டிக்க நரகத்தை அவர் உண்டாக்கியிருப் பதில் இவர்கள் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை .

ஒருநாள் பரிசுத்தவதியான ஒரு பெண் நரகத்தைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்தாள். நரக வேதனையின் நித்தியத்தைப் பற்றியும், அந்த பயங்கரமான 'எப்போதும்... ஒருபோதுமில்லை' என்ற வார்த்தைகளைப் பற்றியும் அவள் தியானித்துக் கொண்டிருந்தபோது, ஒரு முழுக் குழப்ப நிலைக்குள் அவள் தள்ளப்பட்டாள். 

ஏனெனில் இவ்வளவு உத்தமமான நன்மைத்தனமும், சகல தெய்வீக இலட்சணங் களும் உடையவரான சர்வேசுரனால் இந்த அளவிட முடியாத பயங்கரமுள்ள நரகம் படைக்கப்பட்டது என்ற சத்தியத்தை ஜீரணிக்க அவளால் முடியவில்லை. இந்த அளவுக்கு சகல நன்மைச் சுரூபியாயிருக்கிற கடவுளிட மிருந்து இவ்வளவு பயங்கரமான தண்டனை எப்படி வர முடியும்?

ஆகவே அவள் ஆண்டவரிடம்: “சேசுவே, உமது தீர்ப்புக்கு என்னை நான் கையளிக்கிறேன். ஆயினும் உம் நீதியை இவ்வளவு அகோரமானதாக ஆக்காதிரும்” என்று மன்றாடினாள். கடவுள் அவளுக்கு இப்படிப் பதில் கூறினார்:

“பாவம் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? பாவம் செய்வது என்பது, கடவுளிடம், “உமக்கு நான் ஊழியம் செய்ய மாட்டேன்; உமது கட்டளைகளை நான் வெறுக்கிறேன்; உம் அச்சுறுத்தல்கள் எனக்கு வேடிக்கை யாக இருக்கின்றன, அவற்றை நான் பரிகசித்து நகைக் கிறேன்!” என்று சொல்வதற்கு ஒப்பானது.”

“பாவம் செய்வது உமது மகத்துவத்தை நிந்திப்பதாகும் என்பது எனக்குப் புரிகிறது, ஆண்டவரே."

“நல்லது, உன்னால் முடிந்தால், இந்தத் தேவ நிந்தை யின் பிரமாண்டத்தை அளந்து பார்!”

“ஆண்டவரே, இந்த தேவநிந்தை, உமது அளவற்ற தேவ மகத்துவத்தையே தாக்குவதால், அதுவும் அளவற்றதாகவே இருக்கிறது.”

“அப்படியானால் ஓர் அளவற்ற தண்டனையைக் கொண்டு அதைத் தண்டிப்பது அவசியம் அல்லவா? அந்தத் தண்டனை தனது கடுமையில் அளவற்றதாக இருக்க முடியாது என்பதால், குறைந்த பட்சம் அதன் கால அளவி லாவது அளவற்றதாக இருக்க வேண்டுமென்று தேவநீதி வற்புறுத்துகிறது. 

இதன் விளைவாகவே, வேதனைகளின் நித்தியத்தை, பயங்கரமான ‘எப்போதும்' என்ற நிலையை, விரும்புவது தேவ நீதிதான். சபிக்கப்பட்டவர்களும் கூட இந்த நீதிக்கு மரியாதை செலுத்தக் கடமைப் பட்டிருக் கிறார்கள். தங்கள் வாதைகளின் மத்தியில் இருந்து அவர்கள், “ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர், உமது தீர்ப்புகள் நேர்மை யானவை” என்று கூக்குரலிடுகிறார்கள் (சங். 118:137)” என்கிறார் சங்கீத ஆசிரியரான தாவீதரசர்."

பரிகசிக்கப்படக் கூடாதவரான சர்வேசுரனைப் பரிகசித்து நிந்திக்கும் பாவங்களுக்கு நரகம் ஒரு குறைவான தண்டனையே! தாங்கள் இரட்சிக்கப்படுவதை விரும்பாத பாவிகளுக்கு நரகம் உண்மையில் மிகக் குறைவான தண்டனையே! சில உலக இன்பங்களின் நிமித்தம் சர்வேசுர னுடைய அளவற்ற அன்பையும் இரக்கத்தையும் மதித்துப் போற்றத் தவறியவர்களுக்கு நரகம் மிகக் குறைவான தண்டனையே!