கையில் நன்மை வழங்கக் கூடாது என்பதற்கான காரணங்கள்

1. திவ்ய அப்பத் துகள்கள் தவறி விழுதல், திவ்ய நன்மையின் மீதான ஆராதனை வணக்கக் குறைவு, நமதாண்டவருக்கு அவசங்கை போன்ற பெரும் ஆபத்துக்களுக்கு வழிவகுக்கும் முறையில் கையில் கிறீஸ்து நாதரின் திருச்சரீரத்தைப் பெறும்படி யாரும் நம்மை வற்புறுத்த முடியாது. இந்தக் காரணத்திற்காகவே நன்மை வழங்கப்படும்போது, அதைப் பெறுபவரின் முகவாய்க்குக் கீழே அப்பத் தட்டைப் பீடப் பரிசாரகன் பிடிக்கும் வழக்கம் ஏற்பட்டது. 

பூசையில் நன்மை வழங்கிய பின், இந்தத் தட்டில் விழுந்திருக்கும் திரு அப்பத் துகள்களைக் காண்பது ஒன்றே கையில் நன்மை வழங்கக் கூடாது என்பதை உறுதியாக நம்பி ஏற்றுக் கொள்ளச் செய்யப் போதுமான காரணமாக இருக்கும். கையில் நன்மை வாங்கி உட்கொண்ட பின், விசுவாசிகளின் கரங்களிலிருந்து தரையில் விழும் நற்கருணைத் துணுக்குகள் ஒவ்வொன்றிலும் தமது திருச்சரீரத் தோடும், இரத்தத்தோடும், ஆத்துமத்தோடும், தெய்வீகத்தோடும் முழுமையாக இருக்கிற நமதாண்டவர் மனிதரின் பாதங்களில் மிதிபடுவது அவருக்கு எப்பேர்ப்பட்ட அவசங்கையாக இருக்கிறது!

குறிப்பாக மேலை நாடுகளில், சலவைக்குப் போடப்பட்ட கோட் பைகளில் திவ்ய அப்பங்கள் இருப்பது, திவ்ய அப்பம் விசுவாசிகளால் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவை மறதியாக எங்காவது வைக்கப்பட்டுத் தொலைந்து போவது' போன்ற மிக மோசமான தேவத் துரோக நிகழ்வுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிகழ்ந்து வருகின்றன. ஆனால் நாவில் திவ்ய நன்மை வாங்கும் வழக்கத்தில் இதுபோன்ற அவல நிகழ்வுகளுக்கு வாய்ப்பேயில்லை.

எல்லாவற்றையும் விட மோசமாக, தேவத் துரோகமான பேய் வழிபாடுகளில் நற்கருணை நாதரை இழிவுபடுத்துவதற்காகவே அவரைத் திருடிச் செல்லும் வாய்ப்புகள் கையில் நன்மை வாங்கும் வழக்கத்தால் வெகுவாக அதிகரித்துள்ளன. கரும்பூசை போன்ற அருவருப்புகளில் நம் அன்புக்குரிய ஆண்டவர் கற்பனைக்கெட்டாத அளவுக்கு, சாத்தானை வழிபடுபவர்களால் மிகவும் அருவருப்பான முறையில் கையாளப்படுகிறார். இது எப்பாடுபட்டாவது தடுப்பது ஒவ்வொரு கத்தோலிக் கனுடையவும் மாபெரும் கடமையாக இருக்கிறது

2. கையில் நன்மை கொடுப்பதில் தான் அதிகமான சுகாதாரக் கேடுகள் இருக்கின்றன. இந்தக் கொரோனா காலத்தில் கைகளை அடிக்கடி கிருமி நாசினிகளைக் கொண்டு கழுவும்படி அரசாங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வருவது இதற்கு மிக நல்ல சான்று. ஏனெனில் கையில் தான் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் மிகப் பெரும் அளவில் இருக்கின்றன. பல மோசமான நோய்கள் கைகளின் வழியாகவே மனித உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. கை குலுக்குவது, நோய் பாதிப்புள்ள பொருட்களைத் தொடுவது, பொது இடங்களிலுள்ள கதவுகளின் கைப்பிடிகள், படிக்கட்டுகளின் கைப்பிடிகள் போன்றவற்றைத் தொடுதல் ஆகியவற்றில் கைகள் தான் நேரடியாகத் தொடர்பு கொண்டு நோயை வரவேற்கின்றன. 

இவ்வாறு கைகளில் தொற்றிக்கொள்ளும் நோய்க் கிருமிகள் சில நாட்கள் கூட தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது என்று 'BMC Infectious Diseases" என்னும் பத்திரிகை, 2006-ல் தான் நிகழ்த்திய ஆய்வின் அடிப்படையில் செய்தி வெளியிட்டது. பலர் நோய்த் தொற்றுள்ள இத்தகைய பொருட்களைத் தொட்ட பிறகுதான் ஆலயத்திற்கு, பூசைக்கு வருகிறார்கள். எனவே கையில் நன்மை வாங்குவதன் மூலம் இவர்கள் நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக, கொள்ளை நோய்கள் பரவும் காலத்தில் இந்த அபாயத்தை நாவில் திவ்ய நன்மை வாங்கும் வழக்கம் வெகுவாகக் குறைக்கிறது என்பதை நாம் மறந்து விடலாகாது.

''சில திருச்சபை அதிகாரிகள், கொரோனா போன்ற கொள்ளை நோயை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்துவதாகக் கூட நமக்குத் தோன்றுகிறது. திவ்ய நற்கருணையாகிய தேவத் திரவிய அனுமானத்தில் மேற்கூறிய கொடிய தேவத்துரோக ஆபத்துக்களுக்கு நம் ஆண்டவரின் திருச் சரீரத்தை உட்படுத்தி, அதை அவசங்கைப்படுத்துவதில் பேய்த் தனமுள்ள இன்பம் காண்கிறார்கள் என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது'' என்று அஸ்தானாவிலுள்ள செயிண்ட் மேரி மாநகர அதிமேற்றிராசனத்தின் துணை ஆயரான மிக வந். அத்தனாசியுஸ் ஷ்னீடர் என்பவர் குற்றஞ்சாட்டுகிறார்.

2000 ஆண்டு கால திருச்சபையின் வரலாற்றில் நாவில் திவ்ய நன்மை வாங்குவதால் தொற்றுநோய்கள் பரவியதாக ஒருபோதும் எண்பிக்கப் படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பைசாந்தீன் சபையில் குரு சிறு கரண்டியைக் கொண்டும் கூட விசுவாசிகளுக்குத் திவ்ய நன்மை வழங்கும் வழக்கம் இருக்கிறது! எல்லா விசுவாசிகளுக்கும் ஒரே கரண்டி பயன்படுத்தப்படுகிறது. அதன்பின் அந்தக் கரண்டியைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் இரசமும் தண்ணீரும் அந்தக் குருவானவரால் பருகப்படுகிறது. எத்தனை நாவுகளை அந்தக் கரண்டி தொட்டிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நாவில் திவ்ய நன்மை வழங்குவதைத் தடை செய்வதில், நம்முடைய இலத்தீன் ரீதி ஆயர்கள் மற்றும் குருக் களிடம் விசுவாசமில்லாததைக் கண்டு கீழைச் சபைகளைச் சேர்ந்த அநேக விசுவாசிகள் இடறல் படுகிறார்கள். 

திவ்ய நன்மையில் உட்கொள்ளப் படுபவர், நன்மை செய்தபடி எங்கும் சுற்றித் திரிந்தவரும், ஏராளமான நோயாளிகளைக் குணமாக்கியவரும், இன்றும் அன்போடும் நம்பிக்கை யோடும், தாழ்ச்சியோடும் தம்மைப் பெற்றுக்கொள்ள வரும் விசுவாசி களைக் கொரோனா நோயினின்று குணப்படுத்த வல்லவருமாயிருக்கிறார் என்பதை இந்த ஆயர்களும் குருக்களும் விசுவசிப்பதில்லை. திவ்ய நற்கருணை ஆண்டவரின் வழியாக நோய்க் கிருமிகள் பரவும் என்று சொல்வது சர்வ வல்லபரான ஆண்டவருக்கு எப்பேர்ப்பட்ட தேவநிந்தையாக இருக்கிறது!

அப்படியானால் கையில் நன்மையைப் பெற்று உட்கொள்வதாலும் கூட நோய் பரவ வாய்ப்பில்லையே என்று இவர்கள் வாதிடலாம். ஆனால் நிந்தையான இந்த வழக்கத்தால் தமக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியம் ஆகியவற்றின் காரணமாக, நன்மை வழங்கும் குருக் களிடமும், அதை வாங்கும் விசுவாசிகளிடமும், "விசுவாசமில்லாததைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அங்கே வேறே யாதொரு புதுமையும் செய்யக் கூடாதவராக'' (மாற்கு. 6:5,6), அதாவது, அவர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்க விருப்பமில்லாமல் இருக்கிற, ஆண்டவரைத்தான் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

திவ்ய நன்மையில் நம் ஆன்மாக்களில் வந்து உறைபவர் சர்வேசுரன் அல்லவா? அவர் நம்முடைய எல்லா ஆராதனைக்கும் மகிமைக்கும், துதி புகழ்ச்சிக்கும் தகுதியானவர் அல்லவா? இவரைக் குறித்துத்தானே அர்ச். சின்னப்பர், "சர்வேசுரன் அவரை உயர்த்தி, எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்கு அளித்து, சேசுவின் நாமத்திற்குப் பரமண்டலத் தாரும், பூமண்டலத்தாரும், பாதாளத்தாருமாகிய சகலரும் முழந்தாட் படியிடவும் (இசை. 45:24; உரோ . 14:11), ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்து நாதர் பிதாவாகிய சர்வேசுரனுடைய மகிமையில் வீற்றிருக்கிறாரென்று எல்லா நாவும் அறிக்கையிடவும் பண்ணினார்" (பிலிப். 2:9-11) என்று அறிக்கையிட்டார்! சேசுநாதரின் திருப் பெயருக்கே மூன்று உலகத்தாரும் முழந்தாட்படியிடும்படி பரிசுத்த வேதாகமம் கட்டளை பிறப்பித்திருக்க, அவரே திவ்விய அப்ப வடிவ மாக நேரில் தோன்றும் போதும்கூட, "வணங்காக் கழுத்துள்ளவர் களைப்" போல, அவருக்கு எந்த மரியாதையும் இன்றி நின்று கொண்டு, பிடிவாதமாகக் கையில் நன்மை வாங்குபவர்கள் இந்தக் கட்டளைக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியத் தவறுகிறார்கள் அல்லவா?

நாம் செய்ய வேண்டியது

எனவே, அன்புச் சகோதரரே, நாம் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. முதலாவதாக, எந்தக் காரணத்தைக் கொண்டும் நின்று கொண்டோ, கையிலோ நன்மை வாங்குவதைத் தவிர்த்து விடுவோம். அதை விட, ஆசை நன்மை உட்கொள்வது எவ்வளவோ அதிக வரப்பிரசாதத்தையும், பலனையும் நமக்குப் பெற்றுத் தரும். இரண்டாவதாக, நம் ஜெபங்களையும், தவ முயற்சிகளையும், குறிப்பாக, மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தியாகிய முதல் சனி பக்தியையும் கடைப்பிடிப்பதையும் கொண்டு இந்தத் தீமையை எதிர்த்துப் போராடுவோம். வெறும் வார்த்தைப் போர்களால் பெரிய அளவில் பலன் விளையப் போவதில்லை. அன்று உயிர் பயத்தோடும், பதட்டத்தோடும் ஆண்டவரை எழுப்பி, அவரால் கடிந்துகொள்ளப் பட்ட அப்போஸ்தலர்களைப் போலன்றி, விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் நம் ஜெபங்களையும், பரிகாரச் செயல்களையும் கொண்டு அவரை எழுப்ப முயலுவோம். சாத்தியத் திருச்சபையாகிய இராயப்பரின் படகின் பின்னணியத்தில் படுத்து உறங்குபவராகத் தோன்றுகிற நம் ஆண்டவர் எழுந்து, "அமைதியாயிரு , இரையாதே!" என்று ஒரு வார்த்தை சொல்ல, தீமையின் இந்தக் கொந்தளிப்புகள் எல்லாம் ஒரே கணத்தில் அடங்கிப் போகும் (மத். 8:24-26; மாற். 4:38,39; லூக். 8:23, 24).