உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனை ஏன் கடுமையாக உள்ளது?

1. பூவுலகில் காணப்படுகிற நெருப்பானது, நமது நன்மைக்காகவும், வசதிக்காகவும் கடவுளின் கிருபையால் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்த நெருப்பே துன்புறுத்த உபயோகப்படுத்தும்போது கொடிய வேதனை அளிப்பதாக இருக்கும் என்பதை அறிவோம்.

மாறாக கடவுளின் நீதியின் பொருட்டு நம்மை சுத்திகரிக்கவும், தண்டிக்கவுமே உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பானது ஏற்படுத்தப்பட்டது. எனவேதான் சிந்தனைக்கு எட்டாத அளவு வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது.

2. பூவுலக நெருப்பானது அதிகபட்சமாக மண்ணாலான நமது உடம்பை மட்டும் சுட்டெரிக்கும். ஆனால் உத்தரிக்கிற ஸ்தலத்து அக்கினி தாங்க முடியாத மென்மையான நமது ஆன்மாவை துன்புறுத்தும்.

3. பூவுலக நெருப்பின் தாக்கம் எந்த அளவிற்கு வீரியமாக உள்ளதோ அந்த அளவிற்கு வேகமாக அது தன் எதிராளியை அழித்து விடுவதால், வேதனை விரைவில் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் உத்தரிக்கிற ஸ்தலத்து அணையா நெருப்பானது எந்த அளவிற்கு வீரியமாக உள்ளதோ அந்த அளவிற்கு வேதனை ஏற்படுத்துவதுடன், தன்னுடைய அகோரத்தைக் குறைப்பதுமில்லை, ஆன்மாவை அழிப்பதுமில்லை, ஆன்மாவின் உணர்வுகளை குறைப்பதுமில்லை.

உத்தரிக்கும் ஆன்மா, கடவுளை இழந்த அல்லது பிரிந்து இருக்கிற நிலையில் அனுபவிக்கும் வேதனையானது அணையா நெருப்பில் படும் வேதனையை விட மிக மிக அதிகமாக இருக்கும் என்பது மிகையின்றி கூறப்படும் உண்மை . உடம்பை விட்டுப் பிரிந்தவுடன், ஆன்மாவானது, கடவுளின் தெய்வீகத் தன்மையில் ஒன்றிக்கவே பெரும் ஏக்கத்துடன் இருக்கும். கடவுளிடம் பறந்து சென்றுவிட மட்டற்ற வாஞ்சையுடன் இருக்கும். ஆனால், செயல்படுத்த முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். இந்த நிறைவேறாத ஆசையினால் ஆன்மாபடும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

இத்தகைய அகோர முடிவிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுள்ள நாம் எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது எத்தகைய அறிவீனம்!

'இப்படியெல்லாம் இருக்காது, இது எங்களுக்குப் புரியவில்லை, இதைப்பற்றி பேச, ஏன் நினைக்காமல் இருப்பதே நல்லது என்று சொல்வது அறிவற்ற குழந்தைத்தனம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், உத்தரிக்கிற ஸ்தல வேதனையானது நாம் கேள்விப்பட்ட மற்றும் நினைத்த அனைத்தையும் விட மிக மிக அதிகமாக இருக்கும் என்பதே உண்மை. இது புனித அகுஸ்தினாரின் கூற்று.