ஒப்புரவு அருட்சாதனம்!

திவ்ய நற்கருணை நாதரை பரிசுத்த நிலையில் இருந்து உண்பதற்கு நம்மை சுத்திகரிக்கும் ஒப்புரவு திருவருட்சாதனம் (பாவசங்கீதனம்) கத்தோலிக்க திருச்சபையில் மட்டுமே உண்டு. இது மிகவும் பயனுள்ள அருட்சாதனம்.

யோவான் 20:23  ல் இயேசு தம் சீடரை பார்த்து  "எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்

பாவங்களை மன்னிக்க இயேசுவின் சீடர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகபெரும் அதிகாரத்தை நாம் இங்கு காண்கிறோம் , மத்தேயு 23:2 ல் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் மோசேயின் வழியில் வந்து அவரது அதிகாரத்தை கொண்டிருப்பது போல, இன்று காத்தோலிக்க குருக்கள் இயேசுவின் சீடர்களின் வழிவந்து அவர்களது அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே அருளப்பர் 20:23 ல் இயேசுவின் சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிக பெரும் அதிகாரத்தில் நின்று இன்றைய கத்தோலிக்க குருக்கள் ஒப்புரவு அருட்சாதனம் வழியாக, நாம் அவர்களிடம் சென்று நம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கோரும்போது அவர்கள் நம்மை இயேசுவின் பெயராலே மன்னிக்கிறார்கள்.

நாமும் தூய்மையாக்கப்பட்டு நம் பாவத்திலிருந்து மன்னிப்பை பெற்றுக் கொள்கிறோம் . அது வழியாக பரிசுத்த திவ்ய நற்கருணையை நாம் உட்கொள்ள தகுதியும் பெற்று கொள்கிறோம். ஆனால் ஒன்றை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது, அவர்கள் எவருடைய பாவங்களை மன்னியாது இருப்பார்களோ அவை மன்னிக்கப்படா!

இந்த ஒப்புரவு அருட்சாதனத்தில், மனம் வருந்தி திருந்துதல் என்பது மிக முக்கியமான காரியம். மனம் வருந்தி திருந்துதலும் மன்னிப்பும் என்றுமே ஒன்றாய் இனைந்து நிற்கிறது. எனவே எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது என்று இயேசு சொல்கிறார்.

உண்மையாகவே நாம் நம் பாவங்களுக்காக மனம் வருந்தி, திருந்தி, இனி இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்ற உறுதியான தீர்மானம் எடுத்துக்கொண்டு கத்தோலிக்க குருக்களிடம் சென்று நம் பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவு அருட்சாதனம் வழியாக மன்னிப்பு கோரினால் அவர் இயேசுவின் நாமத்தில் நமக்கு மன்னிப்பு தருகிறார்.

இயேசு நமக்காக ஏற்பாடு செய்து தந்த அவரது இரக்கத்தின் கொடைதான் ஒப்புரவு அருட்சாதனம்.

எனவே அனைவருமே இறைமகன் நமக்கருளிய இந்த மாபெரும் கொடையைப் பயன்படுத்தி, பாவ வாழ்விலிருந்து விடுபட்டு, மீட்புப் பாதையில் பயணித்து விண்ணக வாழ்வை சொந்தமாக்கிக்கொள்வோம்.