மே 17

அர்ச். பாஸ்கல் பாய்லோன். துதியர் (கி.பி. 1592) 

ஏழைகளான இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து ஜீவனம் செய்த போதிலும் மகா புண்ணியவாளர்களாய் வாழ்ந்தனர். கஷ்டத்தினிமித்தம் பாஸ்கல் எழுதப் படிக்க கற்றுக்கொள்ளவில்லை.

இவர் ஆடுமாடுகளை மேய்க்கும்போது உயிரெழுத்து மெய்யெழுத்துக்களைக் கற்றுக்கொண்டு சிறிது நாட்களில் வாசிக்கத் திறமைப்பெற்று கால்நடைகளை மேய்த்துக்கொண்டே ஞானப் புத்தகங்களை வாசிப்பார்.

வாசித்ததை மற்ற இடையர் பிள்ளைகளுக்கு எடுத்துரைப்பார். தேவையானப் புத்திமதிகளை அவர்களுக்கு கூறுவார். தேவ நற்கருணையை அடிக்கடி சந்திப்பார்.

24-ம் வயதில் பிரான்சீஸ்கு சபையாரின் மடத்தில் சேர்ந்து தவச் சந்நியாசியாகி மடத்தின் ஒழுங்குகளை உத்தமமாய் அநுசரித்து சகலருக்கும் நல்ல மாதிரிகையாய் இருந்தார்.

கடினமும் நீசமுமான வேலைகளைத் தேடிச் செய்வார். தேவநற்கருணை மட்டில் இவர் அதிசயமான பக்தி வைத்து அநேக மணி நேரம் சலிக்காமல் அதற்கு முன்பாக இருந்து வேண்டிக்கொள்வார்.

பலமுறை இவர் பரவசங்கொண்டு மேலே உயர்த்தப்பட்ட விதமாய்க் காணப்படுவார். பாஸ்கல் தமது மடத்தின் வேலையினிமித்தம் பிரயாணஞ் செய்கையில் இவரைக் கொல்லும்படி பதுங்கியிருந்த பதிதர் கையினின்று பலமுறைப் புதுமையாகத் தப்பித்துக்கொண்டார்.

இவர் தேவ ஊழியத்தில் உத்தமமாய் வாழ்ந்து நித்திய சம்பாவனைக்கு அழைக்கப்பட்டார். இவர் இறந்தபின் இவருடைய பிரேதம் கோவிலில் வைக்கப்பட்டு, இவருடைய ஆத்துமத்திற்காகப் பூசை செய்கையில், தேவநற்கருணை எழுந்தேற்றமான போது, இவர் தமது கண்களைத் திறந்து தேவநற்கருணையை ஆராதிப்பதாகக் காணப்பட்டார்.

யோசனை

நாமும் தேவநற்கருணை மட்டில் விசேஷ பக்தி வைத்து நற்கருணை நாதரை நாள்தோறும் சந்திப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பொசிதியுஸ், மே.
அர்ச். மாதென், து.
அர்ச். மா, து. St.
அர்ச். கத்தான், மே.
அர்ச். சிலான், மே.