திருவிவிலியத்தில் மாதா-4 : தொடர்ச்சி மீண்டும் சீராக்கின் ஞானத்தில் மாதா… ***

" ஞானம் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும்; கடவுளிடத்தில் மகிமைப்படுத்தப்படும்; மனிதர்கள் நடுவில் மேன்மைப்படுத்தப்படும்.

உன்னத ஆண்டவரை வாழ்த்தும் சபைகளில் தன் வாய் திறக்கும்; அவருடைய வல்லமையின் முன்பாக மேன்மைப்படுத்தப்படும்.

மக்கள் நடுவில் மகிமைப்படுத்தப்படும்; அதன் புனித மேன்மையைக் கண்டுபிடிக்கிறவர்கள் வியப்படைவார்கள்.

தேர்ந்து கொள்ளப்பட்டவர்களுடைய கூட்டத்தில் அது புகழ்ச்சிபெறும். பேறு பெற்றவர் நடுவில் ஆசி பெற்று அதுவே சொல்வதாவது:

"உன்னத கடவுள் வாயினின்று நான் புறப்பட்டேன். நானே படைப்புகளுக்கெல்லாம் முன்பே படைக்கப்பட்டேன்.

வானங்களில் மங்காத ஒளி உதிக்கும்படி செய்தது நானே. மண்ணுலகம் முழுவதையும் மேகத்தைப் போல மூடினதும் நானே.

சீராக்கின் ஞானம் : 24 : 1-6

ஏற்கனவே இருக்கும் ஞானம் உன்னத கடவுள்… சிருஷ்ட்டிக்கப்பட்ட ஞானம் நம் மகா பரிசுத்த தேவ மாதா..

ஞானம் எப்போது தன்னைப் புகழ்ந்து கொள்ளும்..

அப்போது மரியாள் உரைத்ததாவது: "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது.

என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது.

ஏனெனில், தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார். இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே.

ஏனெனில், வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் பல புரிந்தார். அவர்தம் பெயர் புனிதமாமே…...

அவர்தம் இரக்கம் அவரை அஞ்சுவோர்க்குத் தலைமுறை தலைமுறையாய் உள்ளதாமே.

அவர் தமது கைவன்மையைக் காட்டினார், நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடித்தார்.

வலியோரை அரியணையினின்று அகற்றினார், தாழ்ந்தோரை உயர்த்தினார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பினார், செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார்.

நம் முன்னோருக்கு அவர் சொன்னது போலவே ஆபிரகாமுக்கும் அவர்தம் வழிவந்தோர்க்கும் என்றென்றும் இரக்கம்காட்ட நினைவுகூர்ந்து

தம் அடியானாகிய இஸ்ராயேலை ஆதரித்தார்."

லூக்காஸ் (லூக்கா 1:46-55)

மாதாவை யார் புகழ்கிறார்கள்… ? கத்தோலிக்கர்கள் மட்டுமே... ஆனால் தலைமுறையினர் இருப்பது யாருக்கு..? மனிதர்களுக்கு மட்டுமே… மனிதராக நாம் இருக்கிறோம் என்றால் மாதாவைப் புகழ்ந்துதான் ஆக வேண்டும்.

மாதாவைப் புகழ்வது என்றால் எப்படி…?

கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் மாதாவை எப்படிப் புகழ்கிறோம்..

“ அருள் நிறைந்த மரியே வாழ்க ! “ என்ற மங்கள வார்த்தை ஜெபத்தின் மூலமாகத்தான் நாம் மாதாவை புகழ்கிறோம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்கும் குடும்ப ஜெபமாலையின் மூலமாக நாம் மாதாவைப் புகழ்கிறோம்..

இதையே ஒரு போப் ஆண்டவர் இப்படிச் சொல்லி மகிழ்கிறார்..

“ மாதாவின் பிள்ளைகள் ஜெபமாலையின் மூலமாக மாதாவிடம் பேசுகின்றனர்…உரையாடுகின்றனர் “ என்கிறார்..

மாதாவை இதைவிட நாம் என்ன அடைமொழிகள் சொல்லிப் புகழ்ந்தாலும் மாதாவுக்கு  மகிழ்ச்சி தருவது ஜெபமாலையே…

வார்த்தையான சர்வேசுவரன் மனித அவதாரமெடுக்க… அதுவும் மாதாவுக்குள் மனித அவதாரம் எடுக்க பயன்படுத்தப்பட்ட மங்கள மொழியே… பிதாவாகிய சர்வேசுரனின் வாழ்த்தே மாதாவை மகிழ்விக்கின்றது. எண்ணற்ற பேறு பலன்களை பெற்றுத்தருகின்றது… உண்மையில் அது மாதாவை மட்டும் மகிழ்ச்சிப்படுத்தவில்லை… மூவொரு சர்வேசுவரனையே மகிழ்ச்சிப்படுத்துகின்றது. அதனால் மாதாவும் மகிழ்ச்சியடைகிறார்கள்..

ஆகையால் ஜெபமாலை என்பது திரும்ப திரும்ப சொல்லும் ஜெபம் அல்ல. திரும்ப திரும்ப மூவொரு சர்வேசுவரனை மாட்சிப்படுத்தவும், கடவுளின் தாயை மகிமைப்படுத்தவும் பயன்படுத்தும் ஜெபம். அது மட்டுல்ல நமக்கு ஆன்ம சரீர நன்மைகளை, நம் தேவைகளைப் பெற்றுத்தருகின்றது. தீமைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.. எண்ணற்ற அளப்பரிய நன்மைகளைப் பெற்றுத் தருகிறது.

ஜெபமாலை என்பது ஒரு மிகப்பெரிய பயனுள்ள ஆயுதம்..

ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை….  ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !