103 புனித அந்திரேயாஆலயம், உவரி


புனித அந்திரேயா ஆலயம்

இடம் : உவரி

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : சாத்தான்குளம்

நிலை : பங்குதளம்
பங்கின் ஆலயங்கள் : 4
1. புனித அந்திரேயா பங்கு ஆலயம்
2. புனித அந்தோனியார் திருத்தலம்
3.செல்வமாதா கப்பல் ஆலயம்
4.வேளாங்கண்ணி மாதா ஆலயம்

கிளைப் பங்குகள் : 2
1. கரைச்சுத்து புதூர் – லூர்து மாதா ஆலயம்
2. ரோச் மாநகர் – புனித சூசையப்பர் ஆலயம்.

குடும்பங்கள் : சுமார் 2500
அன்பிய மண்டலம் : 5
அன்பியங்கள் : 47

பங்குத்தந்தை : அருட்பணி தோம்னிக் அருள் வளன்
இணை பங்குத்தந்தை : அருட்பணி ஹிபாகர்

திருவிழா:
கொடியேற்றம் நவம்பர் 21 ம் தேதி
மாலை ஆராதனை -
நவம்பர் 29 ம் தேதி
திருவிழா கூட்டுத் திருப்பலி-
நவம்பர் 30 ம் தேதி.

பங்கின் திருப்பலிகள் :

ஞாயிறு

காலை 05:00 மணி (பங்கு ஆலயம்)
காலை 06:30 மணி (பங்கு ஆலயம்)
நண்பகல் 11:30 மணி (திருத்தலம்)
மாலை 05:30 மணி (திருத்தலம்)

திங்கள்

காலை 06:00 மணி (பங்கு ஆலயம்)
மாலை 05:30 மணி (திருத்தலம்)

செவ்வாய்

காலை 06:00 மணி (பங்கு ஆலயம்)
காலை 09:00 மணி (திருத்தலம்)
நண்பகல் 11:30 மணி - புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி (திருத்தலம்)
மாலை 05:30 மணி - புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி (திருத்தலம்)

புதன்

காலை 05:00 மணி (திருத்தலம்)
காலை 06:00 மணி (பங்கு ஆலயம்)

வியாழன்

காலை 06:00 மணி (பங்கு ஆலயம்)
மாலை 05:30 மணி (திருத்தலம்)

வெள்ளி

காலை 06:00 மணி (பங்கு ஆலயம்)
மாலை 05:30 மணி (திருத்தலம்)

சனி

முதல் சனி
காலை 06.00 மணி (லூர்து அன்னை கெபி)
மாலை 05:30 மணி (திருத்தலம்)

இரண்டாம் சனி
காலை 06.00 மணி (செல்வமாதா ஆலயம்)
மாலை 05:30 மணி (திருத்தலம்)

மூன்றாம் சனி
காலை 06.00 மணி (பங்கு ஆலயம்)
மாலை 6.00 மணி (வேளாங்கண்ணி மாதா ஆலயம்

நான்காம் மற்றும் ஐந்தாம் சனி :
காலை 06.00 மணி (பங்கு ஆலயம்)
மாலை 05:30 மணி (திருத்தலம்)

பங்கின் நற்கருணை ஆசீர் :

ஞாயிறு - மாலை 04.00 மணி (பங்கு ஆலயம்)
மாதத்தின் முதல் சனி மாலை 06.30 மணி - மாதா திருஉருவ பவணி + நற்கருணை ஆசீர் (பங்கு ஆலயம்)

மாதத்தின் இரண்டாம் சனி மாலை 06.30 - மாதா திருஉருவ பவணி + நற்கருணை ஆசீர் (செல்வமாதா ஆலயம்)

பங்கின் ஜெபமாலை :

காலை 10:15 மணி ( திருத்தலம் )
மதியம் 03:15 மணி ( திருத்தலம் )
மாலை 06:30 மணி ( பங்கு ஆலயம் )
மாலை 06:00 மணி ( செல்வமாதா ஆலயம் )
மாலை 07:00 மணி ( வேளாங்கண்ணி மாதா ஆலயம் )
மாலை 07:30 மணி ( திருத்தல தெற்கு மண்டபம் ) (திருத்தலம்)
மாலை 05:30 மணி (திருத்தலம்)

அருகிலுள்ள நகரங்கள்:

திசையன்விளை - 6 கி.மீ,
திருச்செந்தூர் - 40 கி.மீ,
நாகர்கோவில் - 62 கி.மீ,
திருநெல்வேலி - 71 கி.மீ,
தூத்துக்குடி - 80 கி.மீ

அருகிலுள்ள ரயில் நிலையம்:

நாங்குனேரி (39 கி.மீ)
வள்ளியூர் (46 கி.மீ)

அருகிலுள்ள விமான நிலையம்:

திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம் (149 கி.மீ),
தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் (80 கி.மீ), மற்றும்
மதுரை பன்னாட்டு விமான நிலையம் (230 கி.மீ)

தமிழ்நாட்டிலுள்ள தென்பாண்டி சீமையாம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய கடற்கரை கிராமம் உவரி. இங்கு நான்கு ஆலயங்கள் அமைந்திருக்கிறது. இந்த நான்கு ஆலயங்களில், பங்கின் மிக முக்கியமான ஆலயம் புனித அந்திரேயா ஆலயமாகும். காரணம் பங்கில் நடைபெறும் அனைத்து முக்கியமான வழிபாடுகளும் (கிறிஸ்துமஸ், புத்தாண்டு, புனித வெள்ளி, உயிர்ப்பு பெருநாள் வழிபாடுகள்) பங்கு ஆலயத்தில் வைத்து தான் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் ஞானஸ்நானம், முதல் திருவிருந்து, உறுதிப்பூசுதல், திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு என அனைத்தும் இந்த ஆலயத்தில் வைத்து தான் நடைபெறுகிறது.

வரலாறு :
***********
கடவுளின் தனிப்பெரும் கருணையால் கடற்கரை வாழ் மக்கள் அனைவரும் கிபி 1537 ஆம் ஆண்டு திருமறை சேரும் பேறு பெற்றனர். திருமறை தழுவிய பரதவர்கள் அனைவரும் 30 ஊர்களில் வாழ்ந்து வந்தனர். புனித சவேரியார் வருகைக்கு முன் அந்த மக்களின் ஆன்மீக நலன் பேண எந்த குருவும் நிலையாக தங்கவில்லை. வழிபாடுகள் எதுவும் நடத்தப்படவில்லை அதோடு பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்களாக வாழ்ந்த இந்த மக்கள் ஒன்றுகூடி இறைவனைப் போற்ற ஆலயங்கள் எதுவும் இருக்கவில்லை.

பரதவர்களின் ஆன்ம நலன் பேண முத்துக்குளித்துறை வந்த புனித சவேரியார் முதன் முதலில் மக்கள் ஒன்று கூடி வழிபாடு நடத்த மற்றும் ஜெபங்கள் செய்ய ஆலயங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னைய நாளில் தனது குருக்களுக்கு எழுதிய கடிதங்களில் ஊரின் நடுநாயகமாக ஆலயம் அமைய வேண்டும் அங்கு சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஞான உபதேசம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஊர்கள் தோறும் ஆலயம் அமைக்கும் பணியில் ஆர்வத்தால் 1544 ஆம் ஆண்டிற்குப் பின் கடற்கரையை அடுத்த ஊர்களில் ஆலயங்கள் தோன்றின. உவரியில் முதல் ஆலயம் 1543 இல் இருந்து 1545 ஆம் ஆண்டிற்குள் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். 1558 இல் ஒரு ஆலயம் இருந்தது என்றும் அது புனித அந்திரேயர் அப்போஸ்தலர் பாதுகாவலில் இருந்தது என்றும் 1601ஆம் ஆண்டு மடல் மூலம் அறிய வருகிறோம். 1644 ஆம் ஆண்டு மடலில் இவ்வுண்மை உறுதிப்படுத்தப்படுகிறது.

1558 ஆம் ஆண்டு புனித அந்திரேயா அப்போஸ்தலர் பாதுகாப்பில் இருந்த ஆலயம் கீச்சுக் கொட்டகையாக இருந்தது. பின்னர் அது கற்கட்டிடமாக மாறியது. ஆனால் அளவில் மிக சிறியதாக இருந்தது. காரணம் அந்த நாட்களில் எண்ணிக்கையில் மிகக்குறைந்தவர்களே உவரியில் இருந்தனர். 1644 ஆம் ஆண்டு உரோமைக்கு அனுப்பப்பட்ட மடலில் மொத்தம் 400 கிறிஸ்தவர்கள் இருந்தனர் என குறிப்பு காணப்படுகிறது. எனவே கிபி 1600 க்கு முன்பு மிகக் குறைந்தவர்களே இருந்திருப்பார் என எண்ண இடமுண்டு.

1602 -ம் ஆண்டு உவரி ஊரைச் சேர்ந்த சில பெண்களை விஜயாபதி மன்னன் பிணைக் கைதியாக அடைத்து வைத்திருந்தான். உவரியில் இருந்து 6 படகுகளில் 30 இளைஞர்கள் விஜயாபதி கடற்கரைக்கு சென்று விஜயாபதி மன்னனையும் முக்கிய தளபதிகளையும் வெட்டிக் கொன்றார்கள் ஏனெனில் உவரியில் பக்கத்து கிராமங்களில் விஜயாபதி அரசரும் படைத்தளபதிகளும் கொள்ளை அடித்தது அல்லாமல் மீனவர்களை துன்புறுத்தியதால் நடந்த நிகழ்வு ( அவர்களோடு வெள்ளைக்காரர் ஒருவர் சேர்ந்து அவருடைய வாளால் வெட்டியதாகவும், அவர் உவரியின் பாதுகாவலர் புனித அந்திரேயா தான் என்பது மரபு வழிச் செய்தி, அவரை பார்த்தவர்களே அதற்கு சாட்சி)

1907 -ம் ஆண்டு உவரி தனிப்பங்காக பிரகடனப்படுத்தப்பட்டது, முதல் பங்கு குருவாக மறைதிரு மச்சப்பர்ட் அடிகளார் பதவியேற்றார் இவர் வெளிநாட்டில் இருந்து வந்து உவரியில் பங்கு குருவாகவும் ஆன்மீக குருவாகவும் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர்.

1910 -ம் ஆண்டு தற்பொழுது இருக்கும் பெரிய ஆலயமானது அடிக்கல் நாட்டப்பட்டது.

15-09-1921 -ம் ஆண்டு மூன்றாவது பங்குக் குருவாக மறைதிரு அந்தோனி சூசை நாதர் சுவாமி அடிகளார் பதவியேற்றார், இவர்தான் உவரியில் தற்போது இருக்கும் பங்கு ஆலயத்தை கட்டி முடித்தவர் குறிப்பாக உவரியின் மூன்றாவது பங்குக் குருவாக இருந்து அந்தோணி சூசை நாதர் சுவாமிகள் 15-09-1921 முதல் 14-05-1930 வரை ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். தற்பொழுது இவருக்கு அருளாளர் பட்டம் கொடுத்து புனிதர் பட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது, புனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட பிறகு புனிதரால் கட்டப்பட்ட ஆலயம் என்ற பெருமை இந்த ஆலயத்தை சேரும்.

27-01-1929 -ம் ஆண்டு உவரி பங்கு ஆலயம் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போதைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ரோச்ஆண்டகை புதிய ஆலயத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தினார். ஆலயமானது 150 அடிகள் நீளம், 50 அடிகள் அகலமும் பீடப்பகுதி 85 அடிகள் அகலமும் கோபுரம் 90அடிகள் உயரமும் கொண்டது.

15-02-1930 -ம் ஆண்டு அந்திரேயா ஆலய மணிக்கு திருமுழுக்கு அளிக்கப்பட்டது (மணியின் எடை - 2500கிலோ) மேதகு ஆயர் ரோச் ஆண்டகை தலைமையில் 16 அருட்தந்தையர்கள் பங்கேற்று திருமுழுக்குச் சடங்கை விமரிசையாக நிறைவேற்றினார்கள். ஆண்டகையின் தாய் தந்தையர்கள் ஆலய மணிக்கு ஞானத்தாய் ஞான தந்தையர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

27-03-1931-ம் ஆண்டு ஆலயத்திற்கு சிமெண்ட் தளம் போடப்பட்டது. அதற்கு முன் மக்கள் அமர்வதற்காக குருத்து மணலால் தளம் அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.

04-10-1943 -ம் ஆண்டு புனித சவேரியாருக்கு என்று பங்கு ஆலயத்தின் அருகில் ஒரு சிறிய கெபி ஆனது கட்டப்பட்டது. மேதகு ஆயர் ரோச் ஆண்டகை கெபியை அபிஷேகம் செய்து அர்ச்சித்து புனிதப்படுத்தினார். (சுமார் 1999 -ம் ஆண்டு சவேரியார் கெபி முழுவதும் பழுதடைந்த காரணத்தால் அகற்றப்பட்டது. அந்த இடத்தில் தற்போது சமுதாயநலக்கூடம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது)

31-01-1947 - ம் ஆண்டு புதிய பங்கு தந்தையர் இல்லம் (Parayle Moniyal Hall) கட்டப்பட்டது.

18-11-1958 -ம் ஆண்டு பங்குத்தந்தையாக இருந்த மறைதிரு பூபால்ராயர் அடிகளார் அவர்கள் அமலஉற்பவ அன்னைக்கென்று பங்கு ஆலயத்தின் வளாகத்திற்குள் ஒரு பெரிய மலை கெபியை அமைத்தார். அந்தக் கெபியை அப்போதைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. (கெபி கட்ட முழு பொருளுதவி செய்தவர்கள் – அந்தோனி சிலுவை பர்னாந்து குடும்பத்தார்)

21-06-1959 -ம் ஆண்டு பங்கு ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிறும் இரு திருப்பலிகள் என்று ஆரம்பிக்கப்பட்டது.

07-03-1965 -ம் ஆண்டு தமிழில் முதன் முதலில் பங்கு ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. (இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் முடிவில் பிரகடனம் செய்யப்பட்டதாக பங்குத்தந்தை அறிவித்தார்).

1979 -ம் ஆண்டு பங்கு ஆலய பொன் விழா கொண்டாடப்பட்டது. அதுவரை ஆலயத்தின் நடுப்பீடத்தில் இருந்த மாதா சொரூபம் ஆலயத்தின் வலதுபுற பீடத்திற்கு மாற்றப்பட்டது. வலது பீடத்தில் இருந்த ஆலயத்தின் பாதுகாவலர் புனித அந்திரேயா சொரூபம் நடு பீடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

1999- ம் ஆண்டு பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை இருதயராஜ் அடிகளார் அவர்களால், பங்கு ஆலயத்திற்கு முதன் முதலாக வர்ணம் பூசப்பட்டது. அதற்கு முன்பு வரை சிமெண்ட் கலவையால் பூசப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது

2006-ம் ஆண்டு பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை பிராங்கிளின் அடிகளார் அவர்கள் ஆலயத்திற்கு என்று தனி சப்பரத்தை உருவாக்கினார். அதற்கு முன் வரை பங்கு ஆலய திருவிழா மற்றும் சின்ன அந்தோனியார் திருவிழாவிற்கென்று சிறிய சப்பரம் உபயோகப்படுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.

2008-ம் ஆண்டு பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை சுசிலன் அடிகளார் பங்குத்தந்தை இல்ல அருகில் இரு அறைகள், சமையல் அறை மற்றும் சாப்பாட்டு அறையுடன் கூடிய மற்றும் ஒரு பங்கு தந்தை இல்லத்தை (பதுவானா இல்லம்) உருவாக்கினார்.

2008- ம் ஆண்டு அன்னையின் பாதம் பதிந்த லூர்து மலையின் திருக்கல் கொண்டுவரப்பட்டு அருட்தந்தை லேனார்ட் அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது. (திருக்கல் கொண்டுவர துணை புரிந்தவர்கள் தூத்துக்குடி மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை லெரின் டி ரோஸ் மற்றும் அருட்தந்தை நிஷாந்த் அவர்கள்).

2010-ம் ஆண்டு பங்கு தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை பர்னபாஸ் அடிகளார் ஆலயத்தின் சிமெண்ட் தளத்தை மாற்றி அழகிய பழிங்கு கற்களால் தளம் அமைத்தது மட்டுமல்லாமல் ஆலய கூறையை(ஓடு) மாற்றி குளிரூட்டும் கூரை தாள்களை (cooling sheet) கொண்டு புதுப்பித்தார். புதுப்பிக்கப்பட்ட ஆலயம் மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் அவர்களால் 29-11-2010-ல் அர்ச்சிக்கப்பட்டது

15-08-2012 முன்னாள் பங்குத்தந்தையும் அருளாளருமான பேரருட்திரு அந்தோனி சூசைநாதர் சுவாமிக்கு பங்கு ஆலய வளாகத்திற்குள் சுருபம் அமைக்கப்பட்டுள்ளது.

(பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபையின் 100வது ஆண்டு நினைவாக )

2015-ம் ஆண்டு பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜோசப் அடிகளார் பங்கு தந்தை இல்ல அருகில் பொது உபயோகத்திற்கென்று ஒரு அரங்கத்தை அமைத்தார் (St.Andrews Multipurpose Hall).

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய உவரி புனித அந்திரேயா ஆலயம் நாள்தோறும் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பல திருப்பயணிகளும் வந்து இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்ற புகழ் மிக்க ஆலயமாக விளங்குகின்றது.