புனித சூசையப்பரின் மரணத்தால் மாமரி அடைந்த துயரத்தின் பொருள்!


கடவுளி-மனிதனின் காவியத்திலிருந்து..

சேசு கூறுகிறார்..

"வேதனையால் வாதிக்கப்படுகிற எல்லா மனைவிகளும் கைம்பெண் நிலையிலிருந்த மரியாயைக் கண்டுபாவிக்கும்படி புத்தி சொல்கிறேன்: சேசுவுடன் ஒன்றித்திருங்கள்.

மரியாயின் இருதயம் துன்பங்களை அனுபவிக்கவில்லை என்பது தவறு. என் தாய் வேதனைப்பட்டார்கள். அவர்கள் புனிதமான முறையில் வேதனைப்பட்டார்கள். ஆனால் அவர்கள் கடுமையாக வேதனைப்பட்டார்கள்.

அர்ச். சூசையப்பர் மரியாயின் சரீரத்திற்கில்லாமல் ஆத்தும மணாளனாக இருந்ததால் அவரை அவர்கள் நேசிக்கவில்லை என்று எண்ணுவதும் தவறு. மாதா அவரை ஆழ்ந்து நேசித்து முப்பது ஆண்டுகளை அவருக்காகப் பிரமாணிக்கத்துடன் செலவிட்டார்கள். அர்ச். சூசையப்பர் அவர்களின் தந்தையும், மணாளரும், சகோதரரும், பாதுகாப்பாளருமாக இருந்தார்.

தான் படர்ந்திருந்த மரம் வெட்டி வீழ்த்தப்பட்ட திராட்சைக் கொடிபோல் மாதா தனியாக இருப்பதாக உணர்ந்தார்கள். மின்னல், இடி அவர்களது வீட்டைத் தாக்கியதுபோல் அவர்களுக்கு இருந்தது. அது இரண்டாக வெடித்து நின்றது. முன்பு அது முழுமையாயிருந்தது. அதன் அங்கமாய் இருந்தவர்கள் ஒருவரையொருவர் தாங்கிக் கொண்டார்கள். இப்பொழுது முக்கியமான சுவர் போய்விட்டது. அதுவே அக்குடும்பத்திற்கு முதல் அடி. மாதாவின் அருமை சேசுவும் விரைவிலேயே அவர்களை விட்டு பிரிந்து செல்வார் என்பதன் அடையாளமாக அது இருந்தது.

மாதாவை மணவாளியாகவும், தாயாகவும் இருக்கும்படி கேட்ட தேவசித்தம் இப்பொழுது விதவை நிலையையும் தன் மகனிடமிருந்து பிரிதலையும் அவர்கள் மீது சுமத்துகிறது. மாமரி அழுதுகொண்டே தன் மிக உந்நதமான வார்த்தையை கூறுகிறார்கள் :

“ ஆகட்டும் ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது!”

அழுகிறவர்களே, மரிக்கிறவர்களே, மரிப்பதற்காக வாழுகிறவர்களே கற்றுக் கொள்ளுங்கள். நான் சூசையப்பருக்குச் சொன்ன வார்த்தைகளை உங்களுக்கும் சொல்ல தகுதிபெற முயலுங்கள். மரணப்போராட்டத்தில் அவை உங்களின் சமாதானமாக இருக்கும். மரிக்கிறவர்களே, சேசு உங்கள் அருகில் இருந்து உங்களைத் தேற்ற தகுதி பெற முயலுங்கள். நீங்கள் அதற்குத் தகுதி பெறாவிட்டாலும் துணிவோடு என்னைக் கூப்பிடுங்கள். நான் வருவேன். என் கரங்கள் நிறைய வரப்பிரசாதங்களுடனும், ஆறுதலுடனும், என் இருதயம் நிறைய மன்னிப்புடனும், சிநேகத்துடனும், என் உதடுகளில் மன்னிப்பதும், ஊக்கமளிப்பதுமான வார்த்தைகளுடனும் வருவேன்.

என் கரங்களுக்கிடையில் உங்கள் மரணம் ஏற்பட்டால், சாவு தன் கசப்பை இழந்துவிடும். என்னை நம்புங்கள்: மரணத்தை என்னால் ரத்து செய்ய இயலாது. ஆனால் என்னை நம்பிக்கொண்டு மரிக்கிறவர்களுக்கு அதை இனிமையாக்க என்னால் முடியும்.

நன்றி : மாதா பரிகார மலர். இதழ் கிடைக்க தொடர்புக்கு சகோ.பால்ராஜ் 9487609983, சகோ.கபிரியேல் 9487257479

"வான்லோக ராணி... 

வையக ராணி.. 

மண் மீதிலே புனித மாது நீ... "

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !