புனித வனத்து அந்தோணியார் வாழ்க்கை வரலாறு!

எகிப்து நாட்டிலுள்ள ”கோமா” என்னும் சிற்றூரில் மிக வசதி படைத்த செல்வம்மிக்க குடும்பத்தில் பிறந்தார் புனித வனத்து அந்தோனியார். பிறந்த ஆண்டு: கி.பி 251. தன் இருபதாவது வயதில் பெற்றோர்களை இழந்தார்.

மனமாற்றம்

தினம் தவறாது திருப்பலியில் பங்கெடுத்தார், ஒருநாள் திருப்பலியில் கேட்ட பின்வரும் விவிலிய வசனம் அவரை மாற்றியது "இன்னும் ஒன்று உனக்கு குறைவாக உள்ளது.உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடு வானகத்தில் உனக்கு செல்வம் கிடைக்கும்.பின்பு வந்து என்னைப் பின் செல்"(லூக் 18:22) ,பின் வீட்டிற்கு சென்று தன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, தன் தங்கையை காப்பகம் ஒன்றில் தங்கவைத்துவிட்டு இயேசுவைத் தேடி தனிமையில் கடுந்தவ வாழ்க்கை மேற்கொண்டார். கி.பி 272ல் இருந்து கி.பி 285 வரை புனிதரின் தவம் நீடித்தது.

அதே சமயம் வனத்து சின்னப்பர் பற்றி கேள்வியுற்று அவரைப்போல துறவு மேற்கொண்டார். புனிதரின் பக்தி முயற்சியை முறியடிக்க சாத்தான் பல வகைகளில் சோதித்தான் முடிவு தோல்வியே. கரடுமுரடான கட்டந்தரையில் படுத்து தூங்கி உப்பும், ரொட்டித்துண்டும் உண்டு உடலை ஒருத்து வாழ்ந்தார்.

சாத்தானின் சோதனைகள்

அந்தோனியார் பல மீயியற்கை சோதனைகளை எதிர்கொண்டதாகவும், பல முறை சாத்தான் அவரை சோதித்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். ஒரு முறை சாத்தான் பெண் வேடமிட்டு வந்து சோதிக்க சிலுவை அடையளத்தால் அவனை முறியடித்தார், மறுமுறை தங்க, வெள்ளிக்கட்டிகளை பாதையில் இட்டு பொருளாசையால் சோதிக்க அந்தோனியார் அதை ஒரு பொருட்டாய் மதிக்காமல் இயேசுவின் பெயரால் விரட்டியடித்தார். சிலுவை அடையாளத்தினாலும் இயேசுவின் பெயராலும் பேய்களை எல்லாம் சிதறடித்தார்.

இறுதிக்காலம்

வனத்து அந்தோனியார் அருகில் அமத்தாஸ், மகாரியுஸ்(Amathas,macrius)என்ற இரு துறவிகள் மட்டும் இருக்க கி.பி 356ல் இறந்தார். அவர் விருப்பப்படி அந்த இரு துறவிகளைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் அந்தோனியாரது கல்லறை இரகசியமாக்கப்பட்டது. கல்லறை வெளிப்படையாக இருந்திருந்தால் மக்கள் தம்கல்லறையையே பெரிதாக எண்ணி படைத்த இறைவனை மறந்துவிடுவார்கள் என்று அவர் கருதியதே இதற்கு காரணம்

போதனைகள்

தன் உடன் தவமிருந்த துறவிகளுக்கு இவர் ஆற்றிய போதனைகள் அனைத்தும் பாவத்திலிருந்து விலகுவதற்கு உதவுபவையாக உள்ளன. அவற்றுள் சில.

"தினமும் சாவை எண்ணி வாழ்ந்தால் நாம் பாவம் செய்ய மாட்டோம்",

"உடலைக் கட்டுப்படுத்திக் கடவுளை அன்பு செய்து"

பகைவரின் சூழ்ச்சிப்பொறிகளை மிதித்தொழிப்போம்,

”அலகையை ஓட்டுவதால் கர்வமும்,பிணியைக் குணமாக்குவதால் பெருமை அடைய வேண்டாம்"

பேயை ஓட்டும் சக்தி நமக்கில்லை,இறையாற்றலால் செய்யும் செயலுக்கு ஏன் வீணான மகிழ்வு.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !