முதல் சனி சிந்தனைகள்...

அதற்கு வானதூதர்,

“ பரிசுத்த ஆவி உன் மீது வருவார். உன்னதரின் வல்லமை உன் மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் இத்திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும் “ லூக்காஸ் 1 : 35

"மரியாளின் வார்த்தையைக் கேட்டவுடன் அவள் வயிற்றுனுள்ளே குழந்தை அக்களிப்பால் துள்ளியது. எலிசபெத் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று,

“ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே !. என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்பு பெற்றது எப்படி ?” லூக்காஸ் 1:41-42

இவர்கள் எல்லாரும் பெண்களொடும், இயேசுவின் தாய் மரியாளோடும், அவர் சகோதரரோடும் ஒரே மனதாய் ஜெபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

பெந்தகோஸ்தே என்னும் திருநாளின் போது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். அப்போது திடீரென் பெருங்காற்று வீசுவது போன்று இரைச்சல் வானத்தினின்று உண்டாகி அவர்கள் இருந்த வீடு முழுவதும் நிரப்பிற்று. நெருப்புப் போன்ற நாவுகள் அவர்களுக்குத் தோன்றி பிளவுண்டு, ஒவ்வொருவர் மேலும் தங்கின. எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, ஆவியானவர் அருளியபடி அயல்மொழிகளில் பேசினர். அப்போஸ்தலர் பணி 1:14, 2:1-4

மாதா இல்லாத இடத்தில் பரிசுத்த ஆவியானவர் இல்லை… இன்றைக்கு மாதாவுக்கு ஏற்படும் நிந்தை அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.. அவதூறுகள் அதிகம்… அவைகள் யாருக்கு ஏற்பட்டுள்ளன ? கடவுளின் தாய்க்கு.. யாரால் ஏற்படுகின்றன? அவர் பெற்றெடுத்த பிள்ளைகளில் அவரை தாயாக ஏற்றுக் கொள்ளாத ஆனால் கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு வாழ்போர்களால் ஏற்படுகின்றன… அவர்களும் கிறிஸ்தவர்களாம்…. ஆனால் அவர்கள் வழிபடும் இயேசு சுவாமியின் தாயாரை நிந்திப்பார்களாம்… ஆனால் அவர்கள் மத்தியில் மூன்றாம் ஆளான சர்வேசுவரன் பரிசுத்த ஆவியானவர் செயல்படுவாராம்… என்ன விந்தை ?

கடவுள் மனதில் நினைத்த அவரின் திட்டத்தை செயல்வடிவமாக்கி அதாவது கடவுளின் மீட்புத் திட்டத்தை செயல்வடிவமாக்கி, உடனிருந்து அதை நிறைவேற்றித் தந்தவருக்கு இடமில்லையாம்…

ஏவாளின் கீழ்ப்படியாமை மற்றும் பிரமானிக்கமின்மை போன்ற கறைகளைத் துடைத்து புதிய பெண்ணாக, புதிய ஏவாளாக பரினமித்த பரிசுத்த ஆவியின் ஆலயத்திற்கு அங்கு இடமில்லையாம்…

ஆனால் அங்கு பரிசுத்த ஆவி வருவாராம்…என்ன விந்தை…

வார்த்தையான கடவுளை பூமிக்கு கொண்டு வந்த இராக்கினி இவரே !

“ தூரத்திலிருந்து அப்பத்தை கொண்டு வருகிற கப்பல் போலானாள் “ பழமொழி ( நீதிமொழிகள்) 31:14

“ நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு “ அருளப்பர் 6 : 41

ஆக புதிய மண்ணாவான திவ்ய நற்கருணையை தொலை தூரத்திலிருந்து கொண்டுவந்தவரான மாதாவுக்கு அங்கு இடமில்லை ஆனால் பரிசுத்த ஆவியானவர் அங்கு வருவார்… என்னே வினோதம்…

“ இதோ உலகமுடிவு வரை என்னாளும் உங்களோடு இருக்கிறேன் “ மத்தேயு 28:20

அந்த திவ்ய நற்கருணை நாதருக்கு தன் சதையையும், இரத்தத்தையும் கொடுத்த தெய்வத் திருத்தாய்க்கு அங்கு இடமில்லையாம்… ஆனால் மூன்றாவது ஆளான சர்வேசுவரன் அங்கு வருவாராம்… அற்புதம் செய்வாராம்.. “ இது எப்படி சாத்தியம் “

“ அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும் பொருட்டு அவள் பின்னால் பறவை நாகம் தன் வாயினின்று ஆறுபோல் தண்ணீர்ப் பாய செய்தது “ திருவெளிப்பாடு 12 : 15

இதுதான் அந்த அவதூறுகள்; தேவ தூஷனங்கள்; பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான பாவங்கள். இத்தனையையும் செய்துவிட்டு ஆண்டவர் இயேசுதான் எங்கள் கடவுள்; பரிசுத்த ஆவியானவர் எங்களிடம் வருவார்; என்றால் அது எத்தனை மடமை…

மாதாவுக்கு எதிரான நிந்தைகளுக்கும், அவதூறுகளுக்கும் பரிகாரம் செய்யும் நாள்தான் முதல் சனி..எண்ணற்ற பாவங்களால் வேதனை அடைந்துள்ள மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு ஆறுதல் அளிக்கும் நாள்தான் முதல் சனி…

ஆக பரிசுத்த ஆவியின் உறைவிடமாக, இருப்பிடமாக இருக்கும் பரிசுத்த கன்னி மரியாயிக்கு இடமில்லாத எந்த இடத்திலும் தூய ஆவியானவர் இல்லை என்பது 100 சதவீதம் உண்மை… மாதாவிடமிருந்து உதிரத்தையும், உடலையும் எடுத்து மனுவுருவாகி நமக்காக பாடுபட்டு உதிரம் சிந்தி மரித்து உயிர்த்து அதே மாதா கொடுத்த உடலோடு திவ்ய நற்கருணையில் வாசம் செய்து உலகம் முடிவுவரை நம்மோடு வாழும் நற்கருணை ஆண்டவர் இல்லாத இடத்தில் பரிசுத்த ஆவியானவர் இல்லை…அதனால் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்போரே ! முதலில் சேற்றில் உள்ள உங்கள் கால்களை எடுத்து விடுங்கள்…

பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்பட நம் பாவக்கரைகளை விட்டு விட்டு தூய ஆவியானவரின் கனிகளை பெற்று நம்மை தூய்மையாக்க, என்றும் கன்னியான, அலகையின் தலையை மிதிப்பவளான, கடவுளுக்கும், நமக்கும் தாயாக இருக்கும் நம் தூய மாதாவிடம் நம்மை ஒப்படைப்போம்…

மாதாவின் தூய்மையையும், பரிசுத்த ஆவியானவரும், நம் பரிசுத்த மரியாயிக்கும் இருக்கும் உறவினை தியானித்து இன்றைய நாளை செலவிடுவோம்…

" பரிசுத்த ஆவியின் வருகையை தியானித்து " மாதாவுடன் பதினைந்து நிமிடங்கள் தங்கியிருப்போம்...

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !