பரிசுத்த வார சிந்தனைகள் 1 : இறைவன் குடிலில் நம் இல்லக்குடில்களை அமைப்போம்..

உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான இடம் (Safest Place) கடவுளின் திருக்குடில்தான்… பாலன் இயேசு…, பரிசுத்த தேவ மாதா…பாதுகாவலர் புனித சூசையப்பர்…

யாராவது, எதாவது நெருங்க முடியுமாமா? இந்த குடிலை… பாவம் நிறைந்த மனித வாசனை வேண்டாம் என்றுதானே பரிசுத்த கடவுள் ஆடுமாடுகளோடு தன் பிறப்பை வைத்துக்கொண்டார்.. அவைகள் வாயில்லா ஜீவன்கள்… ஆனால் பாவம் செய்ய இயலாதவைகள்.. கடவுளின் ஒவ்வொரு திட்டத்திலும், பொருள் இருக்கும், பரிசுத்தம் இருக்கும்…

திருக்குடும்பத்தை பார்த்து ஏங்காதவர்கள் யார்..???

ஆண்டவர் இயேசு தன் இருப்பிடத்தை மாதாவுக்கும், சூசையப்பருக்கும் நடுவில் வைத்துக்கொண்டார்.

தன் பரிசுத்த அன்னை.. அவர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் சேவைக்கும், கடமைக்கும், அர்ப்பணத்திற்கும் எல்லையே இல்லை…வீட்டில் இருக்கும் குறைந்த உணவையும், நிறைவும் அன்பும் பரிவும் கொடுத்து ஆண்டவரின் பாலப்பருவம் முதல்.. ஆண்டவரின் வாலிபப்பருவம் வரை கொடுத்து வளர்த்தெடுத்தார்.. ஆண்டவரின் வீட்டிலும் வறுமை இருந்தது, பசி இருந்தது, பட்டினி இருந்தது.. இவற்றின் மத்தியிலும் ஜெபமும் தவமும் பரிகாரமும் இருந்தது… உணவை சமைத்துத்தரும் தாயாக மட்டும் இல்லாமல் ஆன்ம உணவைத் தயாரித்து தரும் தன் பிள்ளையிடம், மாணவியாகவும், சீடத்தியாகவும் இருந்தார்கள்.. தன் மகன் போதிக்கும் காலத்தில் தலமைக்குருக்களாலும், பரிசேயர்களாலும் நிந்திக்கப்பட்டு, தள்ளப்பட்டு, துரத்தப்பட்டு அவமானப்பட்டு இல்லம் வரும்போதெல்லாம் அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் தன் பாசமிகு தாய்..மட்டுமே. அவரின் புண்ணகை மட்டுமே..

மகனின் வேதனையும், கவலையும் அடைந்த முகத்தைக் காணப் பொருக்காமல் வரும் கன்ணீரையும், தன் வேதனையையும், சொல்ல முடியா துயரையும், தன் வியாகுலத்தில் அடக்கி விட்டு ஒரு புண்சிரிபோடு வரவேற்று, ஆறுதல் சொல்லி தேற்றி தன் மகனுக்காய் ஜெபித்து, தன் மகனோடு ஜெபித்து கடவுளுக்கே ஆறுதல் தந்தவர்களல்லவா அவர்கள்… “நேரம் வரவில்லை என்ற மகனுக்கு.. “மகனே உன் நேரம் ஏற்கனவே வந்து விட்டது என்பதை அவருக்கு மறைமுகமாக உணர்த்துவதாகட்டும் ( காணாவூர் திருமணம்).. தன் மகனின் சிலுவைப்பயணத்தில், “துவண்டு விடாதே மகனே ! உறுதியோடு இரு.. கடவுளின் திட்டத்தை நிறைவேற்று என்று தன்னை கொன்று கொண்டிருக்கும் தன் வியாகுலத்தை அடக்கி அவரை எதிர்கொண்டு சென்று ஊக்கப்படுத்தி “யார் உன்னை விட்டு பிரிந்தாலும் நான் உன்னோடு இருக்கிறேன்.. வெற்றி நடை போடு ராஜா “ என்று சொல்லுவதாகட்டும்… அப்படிப்பட்ட ஒரு அன்னை தன் தாயாக இருந்தால் ஆண்டவர் ஒரு சிலுவை அல்ல நூறு சிலுவை தூக்குவார்.. நூறு முறை மரிப்பார்… ஏன் நாமும் சிலுவைகளை தூக்கமாட்டோமா என்ன? நம் ஆண்டவராகிய இயேசுவைப் போல். .

அப்படிப்பட்ட ஒரு அன்புக்கடல், தாழ்ச்சியின் சிகரம், தூய்மையின் உச்சம் ஒரு புறம் இருக்க மறுபுறம்… பிதாப்பிதாவான புனித சூசையப்பர்..

கடவுளின் தாய்க்கும், கடவுளுக்கும் தன் பாதுக்காப்பைத் தரவேண்டும்.. கடவுளையே காப்பாற்ற எகிப்திற்கு ஓட வேண்டும்.. தான் சுயமாய் உழைத்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து கடவுளுக்கே சோறுபோட வேண்டும்… கடவுளே தன்னை “ அப்பா” என்று அழைக்கும்போது தூக்கி வைத்து விளையாட்டு காட்ட வேண்டும்.. கொஞ்சவேண்டும், அழுதால் ஆறுதல் தர வேண்டும்.. மகன் வளர வளர தன் தச்சுத்தொழிலை கடவுளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்… தன் மகனுக்கு தான் ஆசிரியராய் இருந்தாலும் மகனிடம் ஆன்மீகப்பாடம் படிக்க வேண்டும்.. தாழ்ச்சி, கற்பு, தூய்மை, கண்ணியம், கடமை, நேர்மை என்று விசித்திரமான வாழ்க்கை வாழ்ந்தவர் தன் மறுபுறம்..

அகில உலகை படைத்த கடவுளானாலும், குழந்தையாகி விட்டதால் தன் பெற்றோருக்கு கீழ்படிய வேண்டும், அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும், தனக்கு பசித்தால் அவர்களிடம் சோறு கேட்க வேண்டும்.. உலக மக்களின் தேவைகளை தீர்க்கும் கடவுளாக இருந்தாலும் தன் ஒவ்வொரு தேவைக்கும் மாதாவையும் சூசையப்பரையுமே நாட வேண்டும்… சர்வத்தைப்படைத்து ஆட்சி செய்யும் கடவுள் தன்னை எப்படித் தாழ்த்தினார் பாருங்கள்...

இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமானால் முதலில் இருக்க வேண்டிய குணம் தாழ்ச்சிதான்…அதன் பிறகுதான் அன்பு, பொறுமை,கடமை எல்லாம்…

ஆக இவர்கள் மூவரிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் “ தாழ்ச்சி “.அதற்கு பின்புதான் அவர்களின் மற்ற குணாதிசயங்கள்.. இப்போது தாழ்ச்சிக்குத்தான் பஞ்சகாலம் நடக்கிறது… எல்லாரும் “தான்” “தான்” என்ற சிந்தனையுடன்தான் அலைகிறார்கள்.. அலைகிறோம்.. எத்தனை படித்திருந்தாலும், எவ்வளவு திறமையிருந்தாலும், எவ்வளவு அருள் வரங்கள் இருந்தாலும் தாழ்ச்சி இல்லையென்றால்.. அவர்களிடம் இருக்கும் அனைத்துமே குப்பைதான். தாழ்ச்சி முதலில் என்னிடம் இருக்கிறதா என்று நான் பார்க்க வேண்டும்.. இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்…

ஆக நாம் திருக்குடும்பத்திடம் தஞ்சம் புகுவோம்.. தேவ குடிலில் நம் குடும்பங்களை… வைப்போம். திருக்குடும்பத்திடம் பாடம் கற்போம்…

நாம் கொஞ்சம் கற்பனையாக ஆண்டவர் இயேசு பிறந்திருக்கும் குடிலுக்குள் செல்வோம்.. அது உலக இரட்சகர் பிறந்திருக்கும் குடில்.. ஆகையால் அது மிகப்பெரிய குடில்… அங்கு கடவுளின் தாயும், நம் தாயுமான மாதா இருக்கிறார்கள்… இயேசு சுவாமியின் வளர்ப்புத்தந்தையும், திருக்குடும்பத்தின் பாதுகாவலருமான புனித சூசைமாமுனியும் இருக்கிறார்.. மற்றபடி கள்ளம்கபடமில்லா வாயில்லா ஜீவன்கள் ஆடுமாடுகள். இந்த இடத்தை தவிர சிறந்த இடம் (Best Place) நமக்கு எங்கு கிடைக்கும்… ஆகையால் திருக்குடிலின் ஒரு மூலையிலாவது நமது குடும்பங்களை வைப்போம்.. நம் வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றாலும் அந்த மூவரும் பார்த்துக்கொள்வார்கள்…

ஆகையினால் World Best Place- ஆன திருக்குடிலுக்குள் நம் குடும்பங்களையும் வைத்து பாவமில்லாத பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து தாழ்ச்சி, அன்பு, பிறரன்பு, இறையன்புகளை கடைபிடித்து திருக்குடும்பத்தை ரோல்மாடல்களாக பாவித்து நம் குடும்பங்களையும் திருக்குடும்பங்காக்குவோம்.. அதற்கான வரத்தை பெற அந்த பரிசுத்த திருக்குடும்பத்திடம் மன்றாடுவோம் ஆமென்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !