✠ புனிதர் ஆண்ட்ரூ பொபோலா

புனிதர் ஆண்ட்ரூ, ஒரு போலிஷ் மறைப்பணியாளரும், இயேசு சபையின் மறைசாட்சியும் (Martyr of the Society of Jesus) ஆவார். “லித்துவானியாவின் அப்போஸ்தலர்” (Apostle of Lithuania) என்றும், "ஆன்மாக்களை வேட்டையாடுபவர்" (Hunter of souls) என்றும் அறியப்படுகிறார்.

கி.பி. 1591ம் ஆண்டு, பிறந்த பொபோலா, கி.பி. 1611ம் ஆண்டு, தமது இருபதாம் வயதில் "விளினஸ்" எனும் இடத்திலுள்ள இயேசு சபையில் (Society of Jesus in Vilnius) இணைந்தார். கி.பி. 1622ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், ஆலோசகராகவும், போதகராகவும் இயேசு சபை இல்ல தலைவராகவும் பல்வேறு இடங்களில் பணியாற்றினார்.

கி.பி. 1652ம் ஆண்டு முதல் கிரேக்க பிரிவினையைச் சேர்ந்தவர்களால் போலந்து நாட்டில் குழப்ப சூழ்நிலை நிலவிய காலகட்டத்தில் லித்துவேனியாவில் (Lithuvenia) மறைபணியாளராக பணியாற்றினார். அப்போது போலந்து நாட்டில் மிகவும் குழப்பம் ஏற்பட்டது. பிரிவினையாளர்கள் வெறி பிடித்தவர்களைப் போல நடந்துகொண்டனர். ஆனால் ஆண்ட்ரூ அவர்களிடையே அஞ்சாமல், பணிவுடன் மறைப் பணியாற்றினார். ஏழை எளியவர்களின் குடிசைகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து, மறைக்கல்வியை நுணுக்கமாகக் கற்றுக்கொடுத்தார். போலந்து நாட்டில் பிளேக் நோய் பரவியபோது, நோயுற்ற மக்களை பரிவுடன் கவனித்துக்கொண்டார்.

“கோசாக்ஸ்” (Cossacks) என்றழைக்கப்பட்ட குழப்பக்காரர்கள் போலந்து நாட்டிலிருந்த கத்தோலிக்க மக்களை வேரோடு அழிக்க திட்டமிட்டனர். அப்போது ஜானாவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் ஆண்ட்ரூ சிக்கிக்கொண்டார். இக்கொடிய வெறியர்கள் இவரை தடியாலும், சாட்டையாலும் அடித்தனர். குதிரையின் பின் காலில் இவரைக் கட்டி, குதிரையை அடித்து, வேகமாக ஓடவிட்டனர். குதிரை ஓடிய இடமெல்லாம் இவரை இழுத்து சென்றது. இதனால் குரு ஆண்ட்ரூ சாகும் தருவாய்க்கு தள்ளப்பட்டார்.

அப்போது அவர்கள் ஆண்ட்ரூவிடம், “நீ ஒரு குருவா?” என்று வினவி ஏளனம் செய்தனர். அப்போது ஆண்ட்ரூ, "ஆம், நான் கத்தோலிக்க விசுவாசத்தில் பிறந்தவன். நான் குருதான். குருவாகவே கிறிஸ்துவுக்காக இறக்கவும் விரும்புகிறேன்" என்று கூறினார். மீண்டும், "நான் கிறிஸ்துவுக்காக இறப்பதால், அவர் எனக்கு மீட்பளிப்பார். நீங்களோ மனந்திரும்புவீர்கள். அதற்கு நீங்கள் தவம் புரிவீர்கள், இல்லையேல் மீட்பு பெறமாட்டீர்கள்" என்று கூறினார். இச்சொற்களை கேட்டதால் மேலும் அவர்கள் சீற்றங்கொண்டு, முன்பைவிட பன்மடங்கு துன்புறுத்தினர். ஆண்ட்ரூவின் தலையில் அடித்து, கூரிய ஈட்டியால் தலையில் குத்தினார்கள். அவரின் உடலில் தோலை உரித்தனர். தீப்பந்தங்களை வைத்து அவரது நெஞ்சில் சுட்டு, காயம் உண்டாக்கினர். அப்போது கூட ஆண்ட்ரூ மனம் தளரவில்லை. மாறாக, தமது விசுவாசப் பிரமாணத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.

இவரின் விசுவாசத்தைக் கண்ட அவர்கள், மீண்டும் ஆண்ட்ரூவின் காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவையும் கண்களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் கிடந்தபோதும், பகைவர்கள் மனமிரங்காமல் தொடர்ந்து துன்புறுத்தினர். இறுதியாக இரக்கமற்றவர்களின் துன்புறுத்தல்களை தாங்கமுடியாமல், கி.பி. 1657ம் ஆண்டு, மே மாதம், 16ம் நாளன்று, இப்புனிதரின் தூய ஆன்மா இறைவனடி சேர்ந்தது.