தேவமாதா யார்? பகுதி-22 : மாதாவின் பிரமாணிக்கத்திற்கு என்ன காரணம்?

“அது கடவுளுடைய வல்லமையில் ஆவி; எல்லாம் வல்லவரது மகிமையொளியின் தூய சுடர்: ஆதலால் மாசுள்ளது எதுவும் அதற்குள் நுழைய முடியாது “

ஞான ஆகமம் 7 : 25

மாதாவின் இத்தகைய பிரமாணிக்கத்திற்கு என்ன காரணம்?

( பாலன் இயேசுவைக்) கண்ட பின்னர், அப்பாலனைப் பற்றித் தமக்குக் கூறப்பட்டதைப் பிறருக்கு அறிவித்தனர்.

கேட்ட யாவரும் தங்களுக்கு இடையர் கூறியதுபற்றி வியப்படைந்தனர்.

மரியாளோ இந்நிகழ்ச்சிகளை எல்லாம் உள்ளத்தில் இருந்திச் சிந்தித்து வந்தாள்.

லூக்காஸ் 1 : 17- 19

“பின்பு அவர் (இயேசு) அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாள்.”

லூக்காஸ் 2 : 51

புனித கபரியேல் தூதரின் அறிவிப்பு தொடங்கி, இயேசு சுவாமியின் பிறப்பு, சிமியோனின் தீர்க்கதரிசனம் குறிப்பாக “ வாள் “ பற்றிய அறிவிப்பு, காணாமல் போன இயேசுவைக் கண்டபின் இயேசு சுவாமியின் பேச்சு  மற்றும் நடந்த, நடக்கின்ற சம்பவங்ளையெல்லாம் மாதா தன்னுள்ளத்தில் வைத்து சிந்தித்து வந்தார்கள்…

மாதாவின் பிரமாணிக்கத்திற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.. ஒன்று மாதா கடவுளை முழுமையாக நம்பினார்.. இரண்டு தன்னுடைய மனித அறிவைப்பயன்படுத்தாமல் தேவ ஞானத்தை மட்டுமே பயன்படுத்தினார்கள்..

மனித அறிவு.. மனித புத்தி தடம் பிறழக்கூடியது.. சில நேரங்களில் யாருமே நினைத்துப்பார்க்க முடியாத மிக உயர்ந்த மலையில் உச்சியில் கொண்டு போய் நிறுத்தும். திடீரென்று “ தொபுக்கடீர் “ -னு அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு விடும்..

இதற்கு பூலோகத்தில் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.. உச்ச நிலையில் இருந்த பலர் கீழே விழுந்து மண்ணை கவ்வியது அதல பாதாளத்திற்கு சென்ற பலரை நாம் நினைத்துப்பார்க்க முடியும்..

இயேசு சுவாமியோடு இருந்த அவரின் அப்போஸ்தலர்கள் கூட அதில் அடங்குவர்..

புனித இராயப்பர் : யாருமே வாய் திற்க்காமல் இருக்கும்போது “ நீர் மெசியா உன்னத கடவுளின் மகன்” என்பார் ஞானத்தால் அறிந்து.. உடனே மனித அறிவிக்குள் சென்று பாடுகள் வேண்டாம் என்பார்.. ஆண்டவரிடம் “ போ.. அப்பாலே சாத்தானே ! “ என்று வாங்கி கட்டுவார்..

புனித யாகப்பரையும், அருளப்பரையும் அனைத்தையும் இழந்துவிட்டு ஆண்டவரை ஆண்டவரை பின் செல்ல வைத்தது கடவுளைக் கண்டுபிடிக்க வைத்த ஞானம்.. அனால் அதே அவர்களை,

 ‘ ஆண்டவரின் வலப்பக்கமும், இடப்பக்கமும் ‘ அமர அதாவது சீட்டு பிடிக்க ஆசையை தூண்டியது எது மனித அறிவு..

“ அவரோடு செல்வோம். ஆண்டவரோடு மரிப்போம்” என்று புனித தோமையாரை வேத சாட்சியாகும் அளவிற்கு சொல்ல வைத்தது எது ஞானம்.. ஆனால் அதே அவரை “ நான் அவரின் காயத்தில் கை வைத்தால்தான் நம்புவேன் “ என்று சொல்ல வைத்தது எது மனித புத்தி..

யூதாஸை ஆண்டவரைக் கண்டுபிடிக்க வைத்து நற்செய்தி பணி செய்ய வைத்து பலவித அற்புதங்களை செய்ய வைத்தது எது? ஞானம்.. அதே யூதாஸை தன்னுடைய அன்பு போதகரை மெசியாவை காசுக்காக காட்டிக்கொடுக்க வைத்து மரத்தில் அவனைத் தொங்க வைத்தது எது மனித புத்தி..

ஆக மனித மனித புத்தி, மனித அறிவை மட்டும் பயன்படுத்துபவர்கள் பலர் தோல்வி கண்ட வரலாறுகள் பல குறிப்பாக ஆன்மீகத்தில்..

1500 வருடங்களாக இருந்து வந்த கத்தோலிக்க திருச்சபையில்.. பயிராக இருந்த ஒருவர் திடீரென்று களையாக மாறி கத்தோலிக்க விசுவாசத்து மறுத்து பிரிந்து போய் ‘ புராட்டஸ்டாண்ட்’ என்ற பிரிவினை சபையை துவக்க காரணமாயிருந்தது எது.. மனித அறிவு..

இப்போது கூட பத்தாயிரத்திற்கும் அதிகமான பிரிவினை சபைகள் தோன்றி அவர்களும் இடியாப்ப சிக்கலில் இருந்து கொண்டு இருப்பவர்களையும் அதிலேயே சிக்கி.. தானும் குளம்பி.. மற்றவர்களையும் குளப்பி திருச்சபையை விட்டு வெளியே சென்று தப்பரையில் அவர்கள் வாழ என்ன காரணம் ‘ மனித அறிவு, புத்தி ‘ தான் காரணம்..

இதே போல் மாதாவுக்கும் மனித புத்தியை பயன்படுத்த பல சந்தர்ப்பங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டன.. ஆனால் அதில் ஒன்றையும் அவர் பயன்படுத்தவில்லை.. 

“ அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை “

லூக்காஸ் 1 : 49

மாதாவுக்கு விளங்கவே இல்லையென்றாலும் மாதா ஒரு வார்த்தை கூட எதிர்த்துப்பேச வில்லை கேள்வி கேட்க வில்லை குறிப்பாக மனித புத்தியை பயன்படுத்தவில்லை..

அதை தன்னுடைய ஞானத்திற்கு எடுத்துக்கொண்டு சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்..

மாதா புத்தியை பயன்படுத்த மாதாவிற்கு இன்னும் பல சந்தர்பங்களை கடவுள் கொடுத்தார்..

என்னவென்று பார்க்கலாமா? கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

பரிசுத்த ஆவியானார் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !