மனுமகன் சேசு பாகம் - 20

தந்தையின் அலுவலில் இயேசு..

" ஏன் என்னைத் தேடினீர்கள் ? என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா ?" என்றார்.

லூக்காஸ் 2 : 49

எந்த வயதில் கடவுளைத் தேட வேண்டும்?

குழந்தைப் பருவத்திலா? டீன் ஏஜிலா ( வாலிப பருவத்திலா?) ? திருமனம் முடிந்த பின்பா? அல்லது கடைசி காலத்திலா?

முன்பெல்லாம் நாம் கேள்விப்பட்டதும், பார்த்ததும் கடைசி காலத்திலே..

ரிட்டையர்ட் ஆகி ஓய்வு பெற்றதும் கோயில் கோயிலாக அலைவது..

அப்போது வேறு வேலையும் இருக்காது… வேறு வழியும் இருக்காது..

அப்போது கடவுளைத் தேடி என்ன பயன்? அப்போதும் கடவுளைத் தேட வேண்டும்தான்..

இங்கே இயேசு சுவாமி நமக்கு ஒரு மாதிரி காட்டுகிறார்..

அப்போது ஆண்டவர் இயேசு டீன் ஏஜைக் கூட தொடவில்லை..

வயது 12- தான் ஆகிறது அதற்குள் ஆலயத்திற்கு சென்று அப்பாவின் பணியைத் துவக்கிவிடுகிறார்..

“ மூன்று நாளுக்குப்பின் அவரைக் கோயிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்தார்.

கேட்டவர் அனைவரும் அவருடைய மறுமொழிகளில் விளங்கிய அறிவுத்திறனைக் கண்டு திகைத்துப்போயினர்.

அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு மலைத்துப்போயினர்.”

லூக்காஸ் 2 : 46-48

பனிரெண்டு வயது வரை அவரை ஜெபிக்கவைத்தது யார் ? அவருடைய பெற்றோர்கள்..

அதுவரை மாதாவோடும், சூசையப்பரோடும் அமர்ந்து ஜெபித்து வந்தவர்.. அவர்கள் சொல்வதை கேட்டு தேவ ஞானத்தில் வளர்ந்தவர் தன்னுடைய பனிரெண்டாவது வயதிலேயே ஆலயத்தில் தனியாக அமர்ந்து பெரியவர்களோடு பேச ஆரம்பித்துவிட்டார்..

அதுவும் அவர் கேள்வி கேட்கவும் ஆரம்பித்துவிட்டார்..

பரிசுத்த வேதாகமத்திற்கும் முந்தைய பைபிளான ‘பரிசுத்த புதிய ஏற்பாட்டில்’ (மறு பதிப்பு கி.பி.1955- நேரடி வுல்கேட்ஸ் பைபிள்) 47-வது வசனம் இப்படிச் சொல்கிறது..

“ அவருடைய வாக்கைக் கேட்ட யாவரும் அவருடைய ஞானத்தையும் மாறுத்தாரங்களையும்பற்றி பிரமித்துக் கொண்டிருந்தார்கள் “

என்கிறது.. “ மாறுத்தாரங்கள் “ என்றால் மாற்றுக் கருத்துக்கள்..

அங்கே இருக்கக் கூடிய சாஸ்திரிகளுக்கே “அது அப்படியில்லை.. நீங்கள் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள்.. அது இப்படித்தான்” என்று ஆண்டவர் விளக்கியிருக்கிறார்..

அப்படியானால் ஒன்று புரிகிறது.. அப்போதிருந்த வேத சாஸ்திரிகளே பழைய ஏற்பாட்டு கடவுளின் வார்த்தைக்கு தவறான விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள் என்ற உண்மையும் புரிகிறது..

அப்படியானால் இப்போது ஆண்டவரின் புதிய ஏற்பாட்டிற்கும், பழைய ஏற்பாட்டிற்கும் பிரிவினை சபையினர் புதிய பல வினோதமான விளக்கங்கள் கூறுவது வியப்பான ஒன்றா ? இல்லை..

அப்போது அது சரியில்லை என்று விளக்க அங்கே 12- வயது ஆண்டவர் இருந்தார்.. அப்புறம் 30- வயது ஆண்டவர் இருந்தார்.. இப்போது யார் இருக்கிறார்..? எது இருக்கிறது?

இப்போதும் ஆண்டவர் இயேசுவால் நேரடியாக வழி நடத்தப்படும் ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபை இருக்கிறது..

அது ஏற்கனவே நிறைய கொடுத்துவிட்டது.. விசுவாச சத்தியங்கள், கோட்பாடுகள் எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து கொடுத்துவிட்டது.. அதை நாம் கடைப்பிடித்தாலே போதும்.. இனிமே அதற்கு ஆராட்சி தேவையில்லை..

இங்கே மேலும் ஒரு உண்மையையும் பதிவிட வேண்டும்..

முதலில் நடந்த ஜெருசலேம் சங்கம், நீசே சங்கம், எபேசு சங்கம் முதல் இரண்டாம் வத்திக்கான் சங்கம் வரை அனைத்து சங்கங்களும் அதையே செய்தது..

நிறைய பேர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால்.. குறிப்பாக இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை மட்டும் பிடித்துக்கொண்டிருப்பவர்கள் என்ன நினைத்துகொண்டிருக்கிறார்கள் என்றால்.. அது மட்டும்தான் சங்கம் என்பது போலும்.. அது பழைய சங்கங்கள் சொன்னதையெல்லாம் மாற்ற வந்த சங்கம் போலும் என்று அந்த வேத சாஸ்திகளைப் போல தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

இரண்டாம் வத்திக்கான் சங்கமும் பழைய சங்கங்கள் சொல்லியதையெல்லாம் மேலும் உறுதிபடுத்தியது என்பது யாரும் மறக்கக் கூடாது..

புதிதாக கூட்டப்படும் எந்த சங்கத்திற்கும், எந்த தனிப்பட்ட மனிதருக்கும் ஏன் திருச்சபைக்குமே (திருச்சபை அப்படி செய்யாது) பழைய சங்கத்தின் தீர்மானத்தை, விசுவாசக்கோட்பாட்டை மாற்ற அல்லது கூட்ட குறைக்க அதிகாரம் இல்லை..

இதற்கும் பரிசுத்த வேதாகமே ஆதாரம்..

“நாங்கள் அறிவித்த நற்செய்தியினின்றும் வேறான ஒன்றை, நாங்களோ, விண்ணிலிருந்து வந்த ஒரு தூதரோ, யார் வந்து அறிவித்தாலும், அவன் சபிக்கப்படுக!”

கலாத்தியர் 1 : 8

ஒன்பதாவது வசனமும் அதுவே.. டபுள் ஸ்ட்டாராங்.. வசனம்..

இதையும் கவனத்தில் கொள்க..

(இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் வழிபாட்டு முறைகளில் ஒரு சில மாற்றங்கள், நவீனங்கள் புகுத்தப்பட்டது. அப்படி அவற்றைக் கொண்டு வந்தவரே சங்கம் முடியும் முன்பாக என்ன சொன்னார் என்பதையும் விவரம் தெரிந்தவர்கள் அறிவார்கள்)

அதே போல் மேலே சொல்லிய பைபிள் பற்றி கூறியதில் ஒன்றையும் சொல்லவேண்டியதும் கட்டாயமே..

வுல்கேட்ஸ் பைபிளும், வுல்கேட்ஸ் வேதாகமத்திற்கு ஒத்த வேதாகமான “ பரிசுத்த வேதாகமும் “ தப்பரைகள் இல்லாத வேதாகமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வேதாகமம் என்பதையும் கருத்தில் கொள்க ( மொழிபெயற்புக்கள் எல்லாம் Reference – க்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்)

இப்போது 12- வயதில் ஆலயத்திற்கு சென்று தந்தையின் திருப்பணியை செய்த இயேசு சுவாமியிடம் வருவோம்..

கடவுளை நாம் எந்த வயதில் தேட வேண்டும் ? 

குழந்தைப்பருவத்திலா?

சிறுமைப் பருவத்திலா?

இளமைப் பருவத்திலா?

திருமணம் ஆன பின்பா?

நடுப்பருவத்திலா?

கடைசி காலத்திலா?

நம் ஆண்டவர் என்ன சொல்கிறார் என்றால்..

எல்லாப் பருவத்திலும், எல்லா வருடங்களிலும், எல்லா நாட்களிலும் கடவுளைத் தேட வேண்டும் என்கிறார்..

முக்கியமாக இளமையில் ஆண்டவரைத் தேட வேண்டும்..

குழந்தைப் பருவரும், சிறு வயதுப்பருவமும் நம் பெற்றோர்கள் கைகளில் இருக்கின்றன..

இளமைப் பருவமே நம் கையில் இருக்கின்றன..

இளமைப் பருவத்தில் ஆண்டவரைத் தேட வேண்டும் என்பதை விட இளமைப் பருவம் முதல் கடைசி காலம் வரை ஆண்டவரை எல்லா நாட்களிலும் தேட வேண்டும் என்பதே சரியானது..

ஆண்டவர் இயேசுவும் அதையே செய்தார்..

இளமைப் பருவத்தின் நிறைவயதான முப்பத்து மூன்றாம் வயதில்தான் தன் இரத்தம் முழுவதையும், கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி சொல்லொன்னா பாடுகள் பட்டு நம்மை மீட்டு வெற்றிக் கொடி நாட்டினார்..

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !

சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !

மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !