கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் பாகம் - 10

“அனைவரும் பெயரைப் பதிவு செய்ய தத்தம் ஊருக்கு சென்றனர். சூசையும் கர்ப்பவதியாயிருந்த மனைவி மரியாளோடு பெயரைப்பதிவு செய்ய கலிலேயா நாட்டு நாசரேத்தூரை விட்டு, யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு வந்தனர். “ லூக்காஸ் 2 : 3-4

சட்டதிட்டங்களுக்கு உட்படுகிறார் கடவுள். அவர் பெற்றோரின் பெயர்கள் ஏட்டில் ஏறுகிறது. உலகம் முழுவதும் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் கடவுளின் பெற்றோர்களும் பங்கேற்கிறார்கள். இறைவன் இயேசுவின் பெயரையும் பின்னாளில் ஏட்டில் எழுதியிருப்பார்கள். உலகத்தை மீட்க மனிதனாக தோன்றிய கடவுளும் தன் பிறப்பை தன் பெற்றோர்களை ரிக்காடில் ஏற்றுகிறார். இல்லையென்றால் பின்னாளில் இயேசு என்ற ஒருவர் பிறக்கவே இல்லை என்றிருப்பார்கள். மரியாள், சூசை என்பவர்கள் பெயர்கள் பட்டியலில் இல்லை. கிறிஸ்தவர்கள் கதை கட்டுகிறார்கள் என்று சொல்லியிருப்பார்கள். 

கி.மு, கி.பி என்று ஆண்டுகளை பிரித்திருக்க மாட்டார்கள். கடவுளுக்கு மக்களை பற்றி நன்றாக தெரிந்திருந்ததால் எல்லாவற்றையும் ரிக்கார்ட் (பதிவு) செய்திருக்கிறார். நான் கடவுள்… மனிதனின் கஷ்ட்ட நஷ்ட்டங்கள் எனக்குத் தெரியாது. அவன் எப்படியும் வாழ்ந்துவிட்டு போகட்டும். தவறு செய்தால் அவன் செய்யும் தவறுகளுக்கேற்ப தண்டணை. போலீஸ் துறையும், நீதித்துறையும் செயல்படுவது போல் செயல்பட்டிருக்கலாமே.. ஒருவருமே சரியில்லையா ?, ஒன்றுமே சரியில்லையா இந்த உலகத்தை அழித்து விட்டு புதிதாக ஒரு உலகத்தை படைப்போம். புது மனிதனை மீண்டும் படைப்போம் இவர்களை நம்பி புரயோஜனம் இல்லை. இவர்கள் திருந்தப்போவதும் இல்லை.அவன் நரகம் போனால் என்ன? உத்தரிக்கும் ஸ்தலம் போனால் என்ன என்று எல்லாம் வல்ல கடவுள் எதுவும் செய்திருக்கலாமே! அவரால்தான் எல்லாம் முடியுமே..

ஏன் அப்படி செய்யவில்லை ? 

தன் சாயலாகவும், பாவனையாகவும் படைக்கப்பட்ட மனிதன், தன் ஆவியை ஊதி உயிர் கொடுத்த மனிதன். தான் பாவச்சேற்றில் மூழ்கினாலும், கடவுளை மறந்து ஊதாரி மைந்தன் போல் தன் இன்பங்களில் மூழ்கித்திளைத்தாலும். அவனை மீட்க வேண்டும். அவன் தான் யார் என்பதை உணராவிட்டாலும் அவன் யார் என்பதை அவனுக்கு உணர்த்துவோம். இப்படி நமக்காக நம் பாவங்களுக்காக தானே மனிதனாகத் தோன்றி நமக்காக பாடுகள்பட்டார். இப்படி ஒரு அதிசய கடவுள் எங்கு தேடினாலும் கிடைக்காது..

மீண்டும் ரிக்கார்ட்டுக்கு வருவோம் எத்தனையோ மனிதர் தோன்றுகிறார்கள். மரிக்கிறார்கள் அவர்கள் பெயர்களும் பிற்ப்பு சான்றிதல் தொடங்கி, ரேசன் கார்டுகள், பள்ளி சான்றிதல்கள், வேலை செய்யும் இடங்கள் என்று எத்தனையோ இடங்களில் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. உலக மக்கள் தொகையில் நாமும் ஒருவர். நமக்கும் ரிக்கார்டு உண்டு..

.விண்ணகத்திலும் ஒரு ரிக்கார்ட் உள்ளது. அதில் நம் பெயர்கள் பதிவு செய்யப்படவேண்டும். அதில் பெயர்கள் பதிவு செய்யப்பட அட்லீஸ்ட் கீழே உள்ள தகுதிகளில் ஒரு தகுதியாவது பெற வேண்டும்..

1. பாவமில்லாத வாழ்வு : முதலில் பாவத்திலிருந்து உடனே விடுபட வேண்டும். பாவசங்கீர்த்தணம் செய்து நம் ஆன்மாவை பாவ சேற்றிலிருந்து விடுவிக்க வேண்டும். மீண்டும் பாவம் செய்யாமல் கவனமாக வாழ வேண்டும். நற்கருணையை தகுந்த தயாரிப்போடு ஒவ்வொருமுறையும் உட்கொள்ள் வேண்டும். தன்னை நேசிப்பது போல பிறரையும் நேசித்து வாழவேண்டும். எளிதாக சொல்லவேண்டும் என்றால் பாவமில்லாத வாழ்வு வாழ வேண்டும். ( புனித தொன்போஸ்கோ இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்த வழி)

2. பரித்தியாக வாழ்வு (ஒறுத்தல் வாழ்வு) : அதாவது இயேசுவுக்கு ஆன்மாக்களை மீட்டுகொடுக்கும் வாழ்வு. சிறு சிறு ஒருத்தல் முயற்சிகள், ஒரு சந்திகள் தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றாதன் மூலம் பிறர் மனந்திருந்த ஒப்புக்கொடுப்பது. தனக்கு வரும் இன்னல்களை, கஷ்ட்டங்களை பொறுமையோடு ஏற்றுக்கொள்வது. அதையும் பிறர் மனம்திரும்ப ஒப்புக்கொடுப்பது. சுறுக்கமாக சொல்ல வேண்டுமென்றால் புனித குழந்தை தெரசாள் தேர்ந்தெடுத்த வழி.

3. அர்ப்பண அல்லது தியாக வாழ்வு : தன் வாழ்வையே பாவிகள் மற்றும் எளியவர்களுக்கா கையளிக்கும் வாழ்வு. அன்னை மரியாள், அப்போஸ்தலர்கள், அன்னை தெரசா, தந்தை பியோ, புனித ரீத்தா, மகதலேன் மரியா இன்னும் எத்தனையோ புனிதர்கள் இதில் அடங்கும். தவமும், ஜெபமும் மேலோங்கி இருக்கும், வாழ்க்கையே துன்பத்திற்குள் அடங்கி விடும். தன்னைப்பற்றி சிறிதும் யோசிக்காது. வாழ்வு முழுவதும் பிறருக்காகவே இருக்கும். தன்னலமற்ற தார்மீகமாக பிறருக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கும் வாழ்வு...

இந்த மூன்றிலுமே இல்லையா ? அல்லது எதில் இருக்கிறோம் என்று சிந்திப்போம்..

ஜெபம் : மூவொரு இறைவா ! எங்கள் வரவு, செலவு, எங்கள் பாவக்கணக்கு, ஏன் நாங்கள் செய்யும் ஒவ்வொரு நற்செயலும், தீச்செயலும் உமக்கு தெரியும். எங்கள் தலைமயிரையே எண்ணி வைத்திருக்கும் நீர் எங்கள் எண்ணங்களை அறிவீர்..மேலே சொல்லிய மூன்று நிலையில் அட்லீஸ்ட் முதல் நிலைக்காவது முன்னேறி இந்த கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட எங்களை தகுதியாக்கும் இறைவா !- ஆமென்

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !