உத்தரியம் - பாகம் 06 - உத்தரியம் சாத்தானுக்கு எதிரான பாதுகாப்பு கேடயம்

பரிசுத்த கார்மல் அன்னையின் உத்தரிய பக்தியினை பரப்பும் அன்பர்களுக்கு எதிராக சாத்தான் ஒரு வெறிநாயினைப் போல செயல்படுகின்றான். அது ஏன்? என்பதற்கு தேவதாயாரின் மைந்தர்களில் ஒருவரான வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் ஏப்ஸ் வாழ்க்கையில் நடந்த நிகழ்வின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒருநாள் அவர் அணிந்திருந்த அவரது உத்தரியம் கீழே விழுந்துவிட்டது. அவர் அதனை மீண்டும் அணிந்த பொழுது சாத்தான், “இந்த பழக்கத்தினை கைவிட்டுவிடு, இந்தப் பழக்கம்தான் எங்களிடம் வந்து சேரவேண்டிய எத்தனை எத்தனையோ ஆன்மாக்களை தட்டிப் பறித்துவிட்டது” என அலறியது.

அப்பொழுதே அவர், சாத்தான் எதற்கெல்லாம் மிகவும் பயப்படுவான் என கேட்ட பொழுது, மூன்று வகையான செயல்களுக்கு மிகவும் பயந்து நடுங்குவதாக சாத்தான் அறிக்கையிட்டது. அந்த மூன்று செயல்கள் எது என அவர் மீண்டும் கேட்டபொழுது, சாத்தான், “இயேசு கிறிஸ்துவின் திருப்பெயர், பரிசுத்த கன்னி மாமரியின் திருப்பெயர் மற்றும் கார்மல் சபையின் பழுப்பு நிற உத்தரியம்” என பதிலுரைத்தது. இவற்றுடன் நாம் பரிசுத்த செபமாலையினையும் சேர்த்துக்கொள்ளலாம். 

*****சிந்தனை*****     

இவ்வுலக வாழ்வில் நாம் அன்றாடம் பள்ளிச் சீருடை, காவலர் சீருடை போன்ற வெவ்வேறு வகையான சீருடை அணிந்தவர்களைப் பார்க்கின்றோம். அவர்கள் அணிந்துள்ள சீருடைகளின் வாயிலாக நாம் அவர்களது பணியினை அறிந்து அதற்கான மரியாதை கொடுக்கின்றோம். அதற்கும் மேலாக, நமது பண்பாட்டில், தாலி அணிந்திருக்கும் பெண்களை திருமணமானவர்கள் என அடையாளம் கண்டு கொள்கின்றோம்.

அனைத்திற்கும் மேலான நமது நித்திய வாழ்வினை நோக்கிய பயணத்தில், எப்பொழுது நம்மை விழுங்கலாம் என காத்துக்கொண்டிருக்கும் சாத்தானிடமிருந்து நமது ஆன்மாவினை பாதுகாக்கும் கவசமாக அன்னை நமக்கு வழங்கியது உத்தரியம். இதை நாம் எப்பொழுதும் பக்தியோடு அணிந்திருக்கும் பொழுது, நாம் தேவதாயின் பிள்ளைகள் என சாத்தானுக்கு அடையாளம் காட்டுகின்றோம்.

சாத்தான், இயேசு கிறிஸ்துவையோ அல்லது அன்னை மரியாயையோ எதுவும்  செய்ய முடியாமல் அவளது எஞ்சி இருக்கும் பிள்ளைகளின் மேல் போர் தொடுக்கின்றது. அன்னையின் உத்தரியத்தினை எப்பொழுதும் அணிந்து கொள்ளும் பொழுது, எதிரிகளிடமிருந்து தன் குழந்தையைக் காக்கும் தாயினைப் போல, தமத்திருத்துவத்திடம் நமக்காக மன்றாடி, சாத்தானின் சோதனைகளை எளிதாக வெற்றி கொள்ளக் கூடிய எண்ணற்ற அருள் வரங்களைப் பெற்றுத் தருகிறார்கள்.

அன்னையின் இரக்கத்தின் ஆடையினை அணிந்து கொண்டு நாம் அவளது பிள்ளைகள் என அனைவருக்கும் அடையாளம் காட்டத் தயாரா????

நன்றி : சகோ. ஜெரால்ட்

source : www.catholictamil.com

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !