இயேசு பிறந்த பிறகும் மரியாள் கன்னியாக இருந்தார்" என்று எப்படி கூற முடியும்?

"தூய்மையான உள்ளத்தோரே கடவுளைக் காண்பர்" (மத்தேயு 5:8) என்கிறார் இயேசு. அப்படியெனில், மனித உருவில் தோன்றிய இறை மகனைக் கருத்தாங்கிய கன்னி மரியாள், உடலிலும் உள்ளத்திலும் எத்துணை தூயவராக இருந்திருக்க வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 'இயேசுவின் தாய் மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியாள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் பரிசுத்த ஆவியால் கருவுற்றிருந்தார். "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவையாவும் நிகழ்ந்தன.' (மத்தேயு 1:18,22) என்று நற்செய்தி கூறுவதில் இருந்தே, ஆண்டவரின் மீட்பு திட்டத் தில் முன்குறிக்கப்பட்டவர் மரியாள் என்பது தெளிவாகிறது.


கன்னி மரியாளின் வயிற்றில் இயேசுவின் உடலை உருவாக்குமாறு "பரிசுத்த ஆவி அவரில் குடிகொண்டிருந்ததால், அவர் ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருந்தார்." (உரோ மையர் 8:9) பரிசுத்த ஆவியின் ஆலயமாகவும், இறைமகன் இயேசுவின் தாயாகவும் திகழ்வது மரியாளுக்கு "கடவுள் அளித்த தனிப்பட்ட அருள்கொடை" (1கொரிந்தியர் 7:7) ஆகும். "பரிசுத்த ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது" (கலாத்தியர் 5:17) என்பதால், கடவுளுக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்த மரியாள், வாழ்நாள் முழுவதும் கன்னியாகவேத் திகழ்ந்தார் என்பதில் சந்தேகமில்லை. "மரியாளின் கன்னிமையே, கடவுள் மனித உடலெடுத்ததன் தூய தொடக்கத்தை வெளிப்படுத்துகிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 503)


"கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவராக மரியாள் திகழ்கிறார்." (எபேசியர் 1:11) "மரியாளின் வாழ்வு கிறிஸ்துவோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்து இவ்வுலகில் மனிதராய்த் தோன்றுவதற்காக, மரியாளும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றினார்." (கொலோசையர் 3:3-4) "உண்மையில், கிறிஸ்துவின் பிறப்பு அவரது தாயின் கன்னிமையை குறைவுபடுத்துவதற்கு பதிலாக புனிதப்படுத்தியது. எனவே திருச்சபையின் திருவழிபாட்டில் மரியாள், 'எப்பொழுதும் கன்னி' என்று கொண்டாடப்படுகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 506)