"இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்று இயேசு கூறினார். அப்படியெனில், முடிவுக்கு பிறகு அவர் நம்மோடு இருக்க மாட்டார் என்று அர்த்தம் கொள்ள முடியுமா? புனித யோசேப்பின் மனநிலையை நாம் சரியாக புரிந்துகொண்டால், மரியாளின் கன்னிமை பற்றிய சந்தேகங்களுக்கு இடமில்லாமல் போய்விடும். 'மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியாள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கி விடத்திட்டமிட்டார்' (மத்தேயு 1:18,19) என்று நற்செய்தி எடுத்துரைப்பதைக் காண்கிறோம். இதிலிருந்தே, மற்றொருவருடைய மனைவியைத் தன்னுடையவராக ஏற்றுக்கொள்ள யோசேப்புக்கு மனம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
யோசேப்பு பிறரை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாதவர் என்பதால், மரியாளை மறைவாக விலக்கத் திட்டமிடுவதைக் காண்கிறோம். 'அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால் தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்' (மத்தேயு 1:20-21,24) என்று நற்செய்தி கூறுகிறது. இதன் மூலம் யோசேப்பு, கடவுளின் திட்டத்துக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்தார் என்பதை அறிந்து கொள்கிறோம்.
மரியாள் மற்றொரு மனிதரால் கருவுற்றிருக்கிறார் என்ற சந்தேகத்தால் அவரை விலக்கிவிடத் திட்டமிட்ட யோசேப்பு, மரியாள் பரிசுத்த ஆவியால் கருவுற்றிருக்கிறார் என்பதை அறிந்ததும் அவரை ஏற்றுக்கொள்கிறார். இவ்வுலகில் பிறக்க இருந்த மீட்பருக்கும், அவரது தாய்க்கும் பாதுகாவலராக விளங்க வேண்டுமென்ற கடவுளின் திட்டத்தை, யோசேப்பு சரியாகப் புரிந்து கொண்டார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆகவே, 'மரியாள் தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை' (மத்தேயு 1:25) என்ற வார்த்தைகள், இறைமகனின் மாட்சியைக் காணும் முன்பே தன்னடக்கத்துடன் இருந்த யோசேப்பு, இயேசு பிறந்தபிறகு எத்துணை பரிசுத்தராக விளங்கியிருப்பார் என்பதை புரிந்துகொள்ள உதவுகின்றன. "மரியாளின் கணவர் யோசேப்பு நேர்மையாளர்" (மத்தேயு 1:19) என்ற புகழுரையே யோசேப்பின் பரிசுத்தத்துக்கு சான்று பகர்கின்றது. எனவே, மரியாளின் கன்னிமை மீதான சந்தேகம் தேவையற்றது.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠