ஃபெப்ரவரி 6 புனிதர் கொன்சாலோ கார்ஸியா ***


புனிதர் கொன்சாலோ கார்ஸியா

(St. Gonzalo Garcia)

ஃபிரான்சிஸ்கன் சபையின் குருத்துவம் பெறாத பொதுநிலை சகோதரர் மற்றும் மறைசாட்சி:

(Franciscan Lay Brother and Martyr)

பிறப்பு: ஃபெப்ரவரி 5, 1557

வாசை, மும்பை, போர்ச்சுகீசிய இந்தியா

(Vasai, Mumbar, Portuguese India)

இறப்பு: ஃபெப்ரவரி 5, 1597

நாகசாகி, ஜப்பான்

(Nagasaki, Japan)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 14, 1627

திருத்தந்தை எட்டாம் அர்பன்

(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஜூன் 8, 1862

திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்

(Pope Pius IX)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 6

முக்கிய திருத்தலங்கள்:

புனிதர் கொன்சாலோ கார்ஸியா ஆலயம், காஸ், வாசை

(St. Gonsalo Garcia Church, Gass, Vasai, India)

பாதுகாவல்:

ரோமன் கத்தோலிக்க உயர் மறைமாவட்டம், மும்பை

(Roman Catholic Archdiocese of Bombay, East Indian Community)

புனிதர் கொன்சாலோ கார்ஸியா, போர்ச்சுகீசிய இந்தியாவில் பிறந்து, ஜப்பான் நாட்டில் மறை சாட்சியாக மரித்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இருபத்தாறு புனிதர்களுள் ஒருவர் ஆவார். இவர் ஒரு ஃபிரான்சிஸ்கன் பொதுநிலையினர் சகோதரர் (Franciscan Lay Brother) ஆவார். இந்தியாவில் பிறந்து, அருட்பொழிவு செய்யப்பட்ட முதல் புனிதரும் இவரேயாவார். மும்பை நகரின் வடக்கே, சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேற்கத்திய கடற்கரை நகரான வாசை என்னுமிடத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த அக்காலத்தில், அப்பகுதி போர்ச்சுகீசிய காலணித்துவ ஆட்சியின்கீழ் இருந்தது.

இவரது தந்தை ஒரு போர்ச்சுகீசிய படை வீரர் ஆவார். தாயார் “கொங்கண்” (Konkan) மொழி பேசும் ஒரு இந்தியப் பெண் ஆவார். இவர், ஜப்பான் ஃபிரான்சிஸ்கன் சபைத்தலைவரான புனிதர் பீட்டர் பாப்டிஸ்டின் வலக்கரமாக இருந்தார்.

"குன்டி ஸ்லாவுஸ் கார்ஸியா" எனும் இயற்பெயர் கொண்ட இவர், வாசையில் பணியாற்றிய 'செபஸ்தியோ கான்கால்வ்ஸ்' என்னும் இயேசு சபை குருவிடம் கல்வி பயின்றார். இயேசு சபையினரிடமே கி.பி. 1564 முதல் 1572 வரை எட்டு வருடம் பயின்றார். தனது 15ம் வயதில் குரு செபஸ்தியோவுடன் ஜப்பான் சென்றார். ஜப்பானிய மொழியை இவர் எளிதில் கற்றதால், அம்மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இவர் அங்கிருந்து ஆல்கோ சென்று வணிகம் செய்தார். அது தென்கிழக்காசியா முழுவதும் பல கிளைகள் கொண்டு பரவியது.

இவரின் கனவான இயேசு சபை குருவாவது நிறைவடையாமலேயே இவர் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்கு பொதுநிலை மறைப்பணியாளராய் சென்றார். அங்கே ஃபிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்டிஸ்டினால் தூண்டப்பட்டு அச்சபையில் பொதுநிலை சகோதரராக சேர்ந்தார். தொழு நோயாளர்களோடு அங்கே பணியாற்றினார். அப்போதே அவர் அச்சபையில் திருநிலைப்பாட்டினைப் பெற்றார்.

மே 26, 1592ல் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் எசுபானிய ஆளுனரால் அரசு சார்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். அங்கே நான்காண்டுகள் பணிபுரிந்த பின்னர், அப்போது ஜப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தங்கியிருந்த மியாகோ (கியோத்தோ) என்னும் இடத்திலிருந்த மடத்திலேயே 8 டிசம்பர் 1596 அன்று சிறைவைக்கப்பட்டார். சிலநாட்களுக்கு பின் மாலை செபம் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 3, 1597 அன்று கைது செய்யப்பட்ட 26 பேர்களுடைய இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறிஸ்தவர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.

ஃபெப்ரவரி 5, 1597 அன்று அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்ப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை கார்சியா முதலில் அடைந்தார். அவர் முதலில் அங்கிருந்த ஒரு சிலுவையின் அருகில் சென்று, "இது எனக்கானதா?" என்றார். "இது இல்லை" என்று பதில் கூறி அவரை வேறு சிலுவையிடம் கூட்டிச்சென்றனர். சிலுவையை அடைந்ததும் முழந்தாள் பணிந்து அதனைத் தழுவினார். அவரோடு கைது செய்யப்பட்ட மற்றெல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும்வரை இறை புகழ் பாடிக்கொண்டே இருந்தார். 

புனிதர் பட்டமளிப்பு:

கி.பி. 1927ல் கார்சியாவும் அவருடன் இரத்த சாட்சிகளானவர்களும் வணக்கத்திற்குரியவர்கள் என திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII) அவர்களால் அறிவிக்கப்பட்டனர். ஜூன் 8, 1862 அன்று திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களால் இவர்கள் அனைவரும் புனிதர்களாக அருட்பொழிவு செய்யப்பட்டது.

இவர் ஒரு போர்ச்சுகீசிய தந்தைக்கும், கொங்கண் தாய்க்கும் பிறந்தவராதலால் இவர் இந்தியப் புனிதராக கருதப்படுவதில்லை. இவர் கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப்பூர்வ பட்டியலில் போர்ச்சுகீசிய புனிதராவார்.