இன்றைய புனிதர் - ஜனவரி 22 - சரகோஸ்ஸா நகர் புனிதர் வின்சென்ட் ***


சரகோஸ்ஸா நகர் புனிதர் வின்சென்ட்

(St. Vincent of Saragossa)

மறைசாட்சி:

(Martyr)

பிறப்பு : மூன்றாம் நூற்றாண்டு 

ஹூயெஸ்கா, அரகன், ஸ்பெயின்

(Huesca, Aragon, Spain)

இறப்பு: 22 ஜனவரி 304 

வாலென்சியா, ஸ்பெயின்

(Valencia, Spain)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Churches)

நினைவுத் திருநாள்: ஜனவரி 22

பாதுகாவல்: 

அல்கார்வ் மறைமாவட்டம் (Diocese of Algarve),

ஸாஓ வின்சென்ட் (São Vicente), லிஸ்பன் (Lisbon), இத்தாலி (Italy), வினிகர் உற்பத்தியாளர்கள் (vinegar-makers), திராட்சை இரசம் உற்பத்தியாளர்கள் (wine-makers), வலேன்ஸியா (Valencia), விகென்ஸா (Vicenza),

இத்தாலியிலுள்ள "பெர்கமோ" கத்தோலிக்க மறைமாவட்டத்தின் திருத்தொண்டர் சபை (Order of Deacons of the Catholic Diocese of Bergamo (Italy)

புனிதர் வின்சென்ட் "சரகோஸ்ஸா" தேவாலயத்தின் (Church of Saragossa) திருத்தொண்டரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மறைசாட்சியும் ஆவார்.

ஸ்பெயின் நாட்டின் "சரகோஸ்ஸா" (Saragossa) அருகேயுள்ள "ஹூயெஸ்கா" (Huesca) என்னுமிடத்தில், தோராயமாக மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிறந்த இப்புனிதரின் தந்தையார், "யூட்ரிஷியஸ்" (Eutricius) ஆவார். தாயார் பெயர், "எனோலா" (Enola) ஆகும். பெற்றோர் இருவருமே "ஓஸ்கா" (native of Osca) குடிகளாவர்.

தமது வாழ்வின் பெரும்பகுதியை "சரகோஸ்ஸா" (Saragossa) நகரிலேயே கழித்த இவர், கல்வியையும் இங்கேயே கற்றார். "சரகோஸ்ஸா" மறைமாவட்டத்தின் ஆயர் "வலேரியஸ்" (Bishop Valerius of Saragossa) வின்சென்ட்டை திருத்தொண்டராக அருட்பொழிவு செய்வித்தார். சரியாக பேச்சுத்திறன் இல்லாத, (திக்கும்) (Speech Impediment) வழக்கமுள்ள ஆயர் அவர்கள், வின்சென்ட்டை மறைமாவட்டம் முழுதும் சென்று மறை பிரசங்கிக்க பணித்தார். வின்சென்ட் ஆயரது பேச்சாளராக செயல்பட்டார்.

ரோமப் பேரரசன் டையோக்லேஷியன் (Roman Emperor Diocletian) கிறிஸ்தவர்களை வாட்டி வதைத்து துன்புறுத்தல்களைத் தொடங்கியபோது, இவர்களிருவரும் வலேன்சியாவிலுள்ள ரோம ஆளுநர் "டேசியன்" (Dacian in Valencia) முன்னால் கொண்டுபோய் நிறுத்தப்பட்டார்கள். வின்சென்ட்டும் ஆயர் வலேரியஸும் வலேன்சிய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் கொடிய வேதனைகளுக்கு ஆளானார்கள். இறுதியில், புனித நூல்களை தீயிலிட ஒப்புக்கொண்டால் இருவரையும் விடுதலை செய்வதாக ஆளுநர் சொன்னான். ஆனால், வின்சென்ட் அதற்கு மறுத்துவிட்டார். ஆயரின் சார்பாக பேசிய வின்சென்ட், எந்தவித பயமுறுத்தல்களுக்கும் பணியப்போவதில்லை என்று கூறிவிட்டார்.

இவரது பேச்சால் ஆத்திரமுற்ற ஆளுநரின் உத்தரவின்பேரில், படைவீரர்கள் இவரை மூச்சுவிட முடியாத அளவிற்கு அடித்து உதைத்தனர். உடைந்த கண்ணாடி துண்டுகளை கொண்டு உடல் முழுவதையும் குத்திக் கிழித்தனர். காயங்களின்மேல் உப்பு தடவினார். இரும்புக் கம்பியை சூடாக்கி உடலெங்கும் சுட்டுப் பொசுக்கினர். தோல்களை கூர்மையான ஊசிகொண்டு குத்தி கிழித்தனர். அளவற்ற வேதனை ஏற்படுத்தினர். தங்களின் விருப்பப்படி அவரை அக்கொடியவர்கள் கொன்றனர்.

புனிதர் வின்சென்ட்டின் உடல் ஒரு சாக்குப் பையில் கட்டப்பட்டு கடலில் எறியப்பட்டது. ஆனால், உடனே கிறிஸ்தவ மக்கள் அதனை மீட்டெடுத்தனர். வயதான ஆயர் வலேரியஸ் நாடு கடத்தப்பட்டார்.

புனிதர் வின்சென்ட் சிறைச்சாலையில் துன்புறுத்தப்பட்டபோது மிகவும் அசாதரணமான அமைதியை கடைப்பிடித்தார். இது, சிறை அதிகாரியை அதிசயப்பட வைத்தது. பின்னர், தமது பாவங்களுக்காக மனம் வருந்திய சிறைச்சாலை அதிகாரி, மனம் மாறினார்.