உத்தரியத்தின் பழைய ஏற்பாட்டின் வரலாறு!

கத்தோலிக்க திருச்சபையின் புனிதர்களின் குறிப்புகளில் பின்வரும் நிகழ்வுகள் குறிப்பிடப்படுள்ளன.

பரிசுத்த கார்மல் மலை அன்னையின் (உத்தரிய அன்னை) பக்தி முயற்சியானது, புனித சைமன் ஸ்டாக் வாழ்ந்த காலத்தினை விட மிகவும் பழமையானது. இன்னமும் சொல்ல வேண்டுமெனில், நமது மீட்பரின் காலத்திற்கும் முன்னரே, கி.மு 8 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த ஒன்றாகும்.

அக்காலக்கட்டத்தில் தான், கடவுளின் இறைவாக்கினர்களில் முதன்மையானவரான எலியாஸ், பாலஸ்தீனில் இருந்த கார்மல் மலையின் உச்சிக்குச் சென்று அங்கு செபம் மற்றும் தியானத்தினை கொண்ட ஒரு பாரம்பரியத்தினை ஏற்படுத்துகின்றார்.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பரிசுத்த இறைவாக்கினரான எலியாசும் அவரது சீடர்களும், கடவுளின் தாயராக தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணிற்காக (பரிசுத்த கன்னி மாமரி) தங்களது வாழ்வினை அர்ப்பணித்துக் கொண்டனர்.

கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த பாரம்பரியமான செபம், தியானம் மற்றும் அன்னை மரியாளிடத்தில் பக்தி முயற்சிகள் இன்னமும் கத்தோலிக்க திருச்சபையினில் மிகவும் முக்கியமானதாக இருந்து வருகின்றது.

காலம் கனிந்த பொழுது, வார்த்தையானவர் நமக்காக கடவுள்-மனிதனான இயேசு கிறிஸ்துவாக நம்மிடையே குடிகொண்டார். நமது மீட்பரான அவரின் வாழ்வு, இறப்பு, உயிர்த்தெழுதல் மற்றும் விண்ணேற்பினை புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளின் வாயிலாக நாம் அறிந்து கொள்கின்றோம். அது மட்டுமின்றி, தனக்குப் பிறகு, தனது பெயரால் நற்செய்தியினை உலகிற்கு அறிவிக்கவும், கடவுளின் ஆட்சியினை உலகினில் ஏற்படுத்தவும், உலகத்தினை சுத்திகரிக்கவும் கத்தோலிக்க திருச்சபையினை ஏற்படுத்தி, அதற்கு அதிகாரம் வழங்கினார் என  புதிய ஏற்பாட்டின் வாயிலாக நாம் அறிந்துகொள்கிறோம்.

மூன்றாம் ஆளான பரிசுத்த ஆவியானவர், தேவதாயரின் மேலும் அப்போஸ்தலர்களின் மேலும் பொழியப்பட்ட நாளான, பெந்தகொஸ்தே பெருவிழாவின் போது, கார்மல் மலையின் மேல் வாழ்ந்து வந்த பரிசுத்த இறைவாக்கினரான எலியாசின் வழிவந்தவர்களும் அவர்களது சீடர்களும் கீழே இறங்கி வந்தனர். அவர்கள்தான் பெந்தகொஸ்தே நாளின் பொழுது இயேசு கிறிஸ்துவினைக் குறித்த நற்செய்தியினை ஏற்றுக்கொண்டு அப்போஸ்தலர்களிடம் திருமுழுக்கு பெற்றனர்.

கடைசியாக பரிசுத்த தேவதாயரைக் கண்டு, தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டபொழுது, அன்னையின் திரு உதரங்களில் இருந்து வெளிவந்த இனிமையான சொற்களைக் கேட்ட பொழுது அருளும் மாட்சியும் நிறைந்த உணர்வினை பெற்றனர்.

அனைவருடனும் பிரியாவிடை பெற்று தங்களது பரிசுத்த மலைக்கு திரும்பிச் சென்ற பின்னர், பரிசுத்த தேவ தாயாருக்காக அவரை மகிமைப் படுத்த அவருக்காக ஒரு சிற்றாலயத்தினை எழுப்பினார்கள். அக்கணம் முதலே, பரிசுத்த தேவ தாயாரின் பக்தி முயற்சியானது, அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக கார்மல் மலையில் வாழ்ந்து வந்த துறவிகளுக்கு அவர்களது ஆன்மீகச் சொத்தாக அருளப்பட்டது. 

*****உத்தரியத்தின் வாயிலாக கடலின் கடும் சீற்றத்தில் இருந்து காப்பற்றப்பட்ட கப்பலும் மனம் மாறிய பிரிவினை சபை போதகரும்******                 

1845-ஆம் ஆண்டின், கோடை காலத்தின் கடைசியில் ஆஸ்திரேலியாவை நோக்கிச் சென்ற “பெருங்கடலின் அரசன்” (King of Ocean) என்ற ஆங்கிலேயக் கப்பலானது கடுமையான் புயற்காற்றின் நடுவில் சிக்கிக் கொண்டது. காற்றும் கடலும் அக்கப்பலை பயங்கரமாக அலைக்கழித்தன.

அக்கப்பலில் பிரிவினை சபையினைச் சேர்ந்த போதகரான, திரு.பிஷேர் (Mr. Fisher)  தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு பயணம் செய்து கொண்டிருந்தார். மரணம் நெருங்கிக்கொண்டிருந்த அவ்வேளையில், தனது குடும்பத்தினர் மற்றும் சக பயணிகளோடு கடவுளின் இரக்கத்திற்காகவும் அவரது மன்னிப்பிற்காகவும் மன்றாட, மிகவும் கடினப்பட்டு கப்பலின் மேல் தளத்திற்கு வந்து செபித்துக் கொடிருந்தார்கள்.

அக்கப்பலில் அயர்லாந்து நாட்டினைச் சேர்ந்த ஜான் மெக்கலிப் (John McAuliffe) என்ற இளைஞன் கப்பல் பணியாளனாக இருந்தான். நிலைமையின் தீவிரத்தினை உணர்ந்த அவன், தனது மேல்சட்டையினைத் திறந்து, தான் அணிந்திருந்த உத்தரியத்தினை கழற்றி ஆர்பரித்துக் கொண்டிருந்த கடலினை நோக்கி சிலுவை அடையாளம் வரைந்து, கடலினுள் எறிந்தான். அந்த உடனே காற்றும், கடலும் அடங்கியது. அதன் பின்னர் கப்பலின் மேல் தளத்தினை தொட்ட ஒரே அலையானது அவன் எறிந்த அவனது உத்தரியத்தினை கொண்டு வந்து போட்டது.

இந்நிகழ்வுகளை எல்லாம் துவக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த அப்போதகர், அவனது செயல்களின் வாயிலாக விளைந்த அற்புதத்தினையும் கண்டார். அப்போதகர் அவ்விளைஞனிடம் அதனைக் குறித்து கேட்டறிந்த பொழுது, அவன் அவருக்கு பரிசுத்த தேவதாயாரைக் குறித்தும்,   உத்தரியத்தினைக் குறித்தும் அவருக்கு தெளிவாக் விளக்கினான். அப்போதகரும், அவரது குடும்பத்தினரும் மிகவும் மனம் மகிழ்ந்து கப்பல் கரையினை அடைந்ததும், கத்தோலிக்க திருச்சபையினில் இணைந்து நமதன்னையின் உத்தரிய பாதுகாப்பினை ஏற்றுக்கொண்டார்கள்.

****சிந்தனை****

நாம் வாழும் ஒவ்வொரு கணமும் நமதான்மாவிற்காக இருவர் போராடுகின்றனர். முதல்வர், தனது சாயலாக உள்ள ஆன்மா எப்படியாவது தன்னிடம் வந்து சேரவேண்டுமென ஏங்கித் தவிக்கும் கடவுள், இரண்டாமர் எப்படியாவது கடவுளின் சாயலைக்  கொண்ட ஆன்மாவினை நரக நெருப்பினும் வீழ்த்த நினைக்கும் சாத்தான்.

சாத்தான் நமக்காக, நம்மை கடவுளிடமிருந்து பிரித்துச் செல்ல, நமது உடல் உலக மாயை போன்ற கண்ணிகளை வைத்து காத்துக் கொண்டிருக்கின்றான். நாமும் அது தெரியாமல் அல்லது தெரிந்தே  விளக்கினைத் தேடி ஓடும் விட்டில் பூச்சிகள் போன்று அகன்னியில் சிக்கித் தவிக்கின்றோம்.

நாம் கடவுளுக்குரிய வழியில் நடந்து அவரைச் சென்றடைய, நமக்கு எண்ணற்ற அருள் வரங்களையும், அருட்கருவிகளையும், அருளடையாளங்களையும் தந்து உதவுகின்றார். நமதன்னையின் வாயிலாக அவரை சென்றடைய, அவர் நமகளித்த மிகச் சிறந்த அருளடையாளத்தில் ஒன்று தான் உத்தரியம்.

இதன் வாயிலாக நமதன்னை நம்மை அவரது திருக்குமாரனுடன் எப்படியாவது கொண்டு சேர்த்துவிடுகிறார். பாவங்களின் வாயிலாக பிரிந்து சென்ற தனது ஆன்ம குழந்தைகளை, உத்தரியத்தின் வாயிலாக அவர்களை மீட்டெடுத்து தனது தலைச்சன் பிள்ளையிடம் (இயேசு கிறிஸ்து) கொண்டு சேர்க்கின்றார்.

பாவத்தில் வீழ்ந்து கிடக்கும் நாமும் அன்னையின் உத்தரியத்தினை மகிழ்வோடும் விடா முயற்சியோடும் அணிந்து கொண்டு அன்னையின் பாதுகாப்பினை உறுதி செய்யத் தயாரா????   

சேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!!!!!

நன்றி : சகோ. ஜெரால்ட்