மாதாவின் வியாகுலம் : கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து!

ஆண்டவரின் கல்லறையில் மாதா..

மாதாவின் மடியில் ஆண்டவர் வளர்த்தப்பட்டபோது ஒரு மிகப்பெரிய வியாகுலம் ஒன்று முடிந்திருந்தது ஏற்கனவே பலமுறை தன் கண்ணீர்களால் தன் மகனை குளிப்பாட்டியிருந்தார்கள்.. இதோ இப்போது அடுத்த வியாகுலம்..

இப்போது ஆண்டவரின் கல்லறையில் மீண்டும் தொடர்கிறது...

சேசுவைச் சுமந்து வந்த இருவரும், மூடியிருந்த துப்பட்டியை நீக்குகிறார்கள்.. இரண்டு பந்தங்களின் வெளிச்சத்தில் அங்கு ஒரு மூலையில் வெட்டப்பட்டுள்ள  ஒரு கற்பலகைத் தட்டில் அவர்கள் சரீரத்தை கட்டும் துணிகளையும் வாசனைப் பொருட்களையும் ஆயத்தமாக்குகிறார்கள்..
அப்போது மாதா சேசு மீது குனிந்து அழுது கொண்டிருக்கிறார்கள். சேசுவின் இடையில் கட்டப்பட்டிருக்கும் மாதாவின் முக்காட்டுத் துகிலால் மறுபடியும் சரீரத்தைத் துடைக்கிறார்கள். தாயின் கண்ணீர்களோடு நடைபெறும் இதுவே ஆண்டவருடைய குளிப்பாட்டுதலாக இருந்தது. ஏராளமாய்ப் பாயும் அக்கண்ணீர்கள், சித்திரவதைப்பட்ட அந்த சரீரத்தில் படிந்த தூசி, வியர்வை, இரத்தம் ஆகியவற்றை மேலாப்பாகவே நீக்க உதவின.

விறைத்துப்போன அந்த அங்கங்களை தடவி அன்புச் சீராட்டல் செய்வதில் மாதா சற்றும் சலித்துப்போகவில்லை. ஒரு புதிதாய்ப் பிறந்த குழந்தையை தொடுவதைவிட அதிக நுண்ணியமாய் அவருடைய வாதைப்பட்ட கரங்களை எடுக்கிறார்கள். தன் கரங்களுக்குள் வைத்துக் கொள்கிறார்கள். விரல்களை முத்தமிடுகிறார்கள். அவற்றை நீட்டுகிறார்கள். விரிந்திருக்கும் காயங்களை அதிக வலியில்லாமல் வைத்தியம் செய்வதுபோல் கிட்ட நெருங்குகிறார்கள். தன் கன்னங்களை தொட முடியாத அக்கரங்களை தன் கரங்களால் இறுக்குகிறார்கள்.
தன்னுடைய பயங்கரமான துயரத்தில் ஏங்கி ஏங்கி புலம்புகிறார்கள்.

அவருடைய பாதங்களை நீட்டி ஒன்றாய்ச் சேர்க்கிறார்கள். அவை நமக்காக இத்தனை நெடுந்தூரங்கள் நடந்ததால் களைத்துப் போனவை போல் தொய்வாக உள்ளன. அவை சிலுவையிலே அதிகமாக மொழி புரட்டப்பட்டு விட்டன. இடது பாதம் அதன் கனுக்காலே இல்லாததுபோல் தட்டையாக்கப்பட்டிருக்கின்றன.

மாதா மறுபடியும் அவருடைய சரீரத்தைச் சீராட்டுகிறார்கள். அது ஏற்கனவே குளிர்ச்சியடைந்து விரைப்பாயிருக்கிறது. இயேசு இப்போது மல்லாக்க கிடத்தப்பட்டிருப்பதால், ஈட்டியால் குத்தப்பட்ட காயம் திறந்து ஒரு வாய் போல்  காணப்படுகிறது. அதனால் மார்ப்புக்கூட்டின் உட்கூடு, கூடுதல் தெளிவாகத் தெறிகிறது. இருதயத்தின் முனை, மார்பெழும்புக்கும், இடது விலாக் கூட்டின் வளைவுக்குமிடையே துலக்கமாயிருக்கிறது. அந்த முனையிலிருந்து இரண்டு செண்டிமீட்டருக்கு மேல் புறமாக ஈட்டியின் நுனி இருதயத்திலும், நெஞ்சுப்பையை மூடும் சவ்விலும் ஏற்படுத்திய காயம் ஒன்றரை செண்டி மீட்டர் நீளமாக உள்ளது.

அதைப்பார்த்த மாதா கல்வாரியில் எழுப்பிய கூக்குரல் போல் குரலெழுப்பி ஒரு ஈட்டி தன்னைக் குத்தி ஊடுறுவுவது போல் அப்படி வேதனையால் நடுங்குகிறார்கள் ( உம்முடைய உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும்) சேசுவின் இருதயத்தைப்போல் குத்தப்பட்ட தன் இருதயத்தை கையால் அழுத்தியிருக்கிறார்கள். எத்தனை முத்தங்களை அந்தக் காயத்தில் பதிக்கிறார்கள். பாவம் அந்தத் அந்தத் தாய்.

மறுபடியும் சேசுவின் சிரசை நோக்குகிறார்கள். ஏனென்றால் அது சற்று வளைந்தும் வலது பக்கம் கூடுதல் சாய்ந்தும் இருக்கிறது. அரைக் கண் திறந்திருக்கிற அவருடைய இமைகளை மூடவும், வலப்புறமாய் சற்றுத் திருகித் திறந்து வலித்துப் போயிருக்கிற வாயை மூடி வைக்கவும் முயல்கிறார்கள். அவருடைய முடியை சீர்ப்படுத்துகிறார்கள். நேற்றுத்தான் அது அழகாகயும், ஒழுங்காயும் இருந்தது. ஆனால் இப்பொழுது இரத்தத்தால் கணத்து சிக்குப் பிடித்திருக்கிறது. மாதா அதில் நீள முடிக்கற்றைகளை பிரித்து தன் விரல்களால் மெதுப்படுத்தி, தன் சேசுவின் அழகிய மெல்லிய சுருள்முடியின் உருவத்தை மறுபடி கொண்டுவரும்படியாக அவற்றை  சுருள்படுத்துகிறார்கள்.
அவர் சிறுவனாயிருந்ததை நினைத்து ஏக்கங்கொண்டு அழுகிறார்கள்….

மாதாவின் துயரத்தின் அடிப்படைக் காரணம் :  சேசுவின் பாலப்பருவ  நினைவுதான் – அவர்கள் அவரை நேசித்த அன்புதான்- அவர்களின் கரிசனைதான். அது மிக நல்ல காற்றைக் கூட தன் தெய்வீக மகனுக்குக் கேடு செய்யுமோ எனப் பயப்பட்டது. அதை இப்பொழுது மனிதர்கள் அவருக்குச் செய்ததுள்ளதுடன் அவர்கள் ஒப்பிட்டுப்பார்பதால் அவர்களின் துயரம் பொங்குகிறது.

மாதாவின் துயரப் புலம்புதல் என்னை வேதனைப்படுத்துகிறது. ஏங்கியழும்போது அவர்கள் சொல்கிறார்கள் : “ மகனே, அவர்கள் உமக்கு என்ன செய்தார்கள்! “ என்று. அவர் இப்படி ஆடையின்றி விரைத்துப்போய் ஒரு கல்லின் மேல் இருப்பதை பொறுக்கமாட்டாமல், தன் கைகளை அவருடைய தோளுக்குக் கீழாகக் கொடுத்து, மற்ற கையால் அவரைத் தன் நெஞ்சோடு அணைத்து அவரைத் தாலாட்டுகிறார்கள். பெத்லகேம் குகையில் எப்படி தாலாட்டி அசைந்தார்களோ அப்படியே இப்போதும் செய்கிறார்கள்.
இது என் இதயத்தை யாரோ பிசைந்தது போல் என்னை வேதனைப்படுத்தி அழ வைக்கிறது..

நன்றி : கடவுள் மனிதனின் காவியம்..( பாகம் 10) அனைத்துப் பாகங்களும் (10) வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479,

மாதாவின் வியாகுலம் இப்படியே…  நீள்கிறது… அது ஆண்டவரை கல்லறையில் வைத்த பின்பு அதைவிட அதிகமாகிறது… தொடர்கிறது.. நீள்கிறது.. இன்னும்.. இன்னும் அதிகமாகிறது.. இன்று இரவும் தொடரும்.. மாதாவின் வியாகுலம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாதது...

ஏன் ஆண்டவரைப் பிரிந்து ஒரு நொடிப்பொழுது மாதா இதுவரை இருந்ததில்லையே…
இந்த மூன்று நாள் பிரிவு கூட மாதாவால் தாங்க முடியவில்லை...

நாம் எத்தனை நாட்கள்.. மாதங்கள்... வருடங்கள்.. அவரைப் பிரிந்து இருந்திருக்கிறோம்...

இன்றைய நாள் மாதாவின் வியாகுலத்தை தியானிக்கும் நாள்…

வியாகுல மாமரியே… தியாகத்தின் மாதாவே.. சிலுவையின் அடியினிலே சிந்தை நொந்தழுதாயோ…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !