நிலைமை வரத்திற்கான மன்றாட்டு

ஓ உன்னதரும், நித்தியருமாகிய சர்வேசுரா, என்னைச் சிருஷ்டித்து, சேசுநாதரைக் கொண்டு என்னை மீட்டு இரட்சித்ததற்காகவும், சத்திய விசுவாசத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிற ஒரு கிறீஸ்தவனாக என்னை ஆக்கியதற்காகவும், இத்துணை அதிகப் பாவங்களுக்குப் பிறகும் என் மனந்திரும்புதலுக்காகக் காத்திருந்ததற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஓ எல்லையற்ற தாராளமுள்ள பேரிரக்கமே, தேவரீரை அடியேன் சகலத்திற்கும் மேலாக நேசிக்கிறேன்.  உம்மை நோகச் செய்ததற்காக என் முழு இருதயத்தோடும் மனஸ்தாபப்படுகிறேன்.  நீர் என்னை ஏற்கெனவே மன்னித்து விட்டீர் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உள்ளதென்றாலும் திரும்பவும் பாவத்தில் விழும் ஆபத்தில் நான் எப்போதும் இருக்கிறதினால் என் மரணம் வரையிலும், சேசுக்கிறீஸ்துநாதருடைய நேசத்தின் நிமித்தமாக எனக்குப் பரிசுத்த நிலைமை வரத்தைத் தந்தருள வேண்டுமென்று உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.  

ஓ ஆண்டவரே, எனக்கு உதவுவீராக.  ஏனென்றால் என்னுடைய பலவீனத்தைத் தேவரீர் அறிந்திருக்கிறீர்.  உம்மை விட்டு நான் ஒருபோதும் பிரியவிடாதேயும். உமது வரப்பிரசாதத்தை இழக்கும் பரிதாபத்திற்கு உட்படுவதற்குப் பதிலாக ஓராயிரம் தடவை மரிக்கிறதற்கும் நான் ஆயத்தமாயிருக்கச் செய்வீராக.  

மரியாயே, என் மாதாவே, எனக்கு நிலைமை வரத்தைப் பெற்றுத் தந்தருளும்.  

ஆமென்.