நன்மரணமடைய சேசுநாதரை நோக்கி செபம்.

ஓ! மதுரமான சேசுவே, தயை மிகுந்த ஆண்டவரான சேசுக்கிறீஸ்துநாதரே, மிகுந்த மனஸ்தாபப்பட்டுக் கலங்கிப் பிரலாபித்து உமது திருச்சந்நிதியில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிற அடியேனைப் பாரும். பாவத்துக்கு ஆசைப்பட்டு உமது நேச அழைத்தலைக் கவனியாமல், தேவரீரை இப்பொழுது நான் புறக்கணித்து நிந்திக்கலாம். ஆனால் ஒருநாள் நான் சாவது நிச்சயம். நான் நினையாத நேரத்தில் மரணம் வந்து என்னைப் பிடித்துக்கொள்ளும். மின்னலலைப் போலும், அதிதுரிதமாக அது வந்தென்னைக் கைப்பற்றும். அதன்பின் எனது தீர்வை நடக்கும். அது மோட்ச இன்பத்திற்கோ, நித்திய நரக வேதனைக்கோ என்னை நிச்சயிக்கும்.

என் அன்பான சேசுவே, என் பலவீனத்தையும், பாவச் சார்பையும் அறிந்திருக்கிற நான், என் நிர்ப்பாக்கியத்தில் உம்மையே, ஓ சேசுவே, உலக சீவியத்தின் முக்கியமான நேரமாகிய மரண அவஸ்தையில், என்மேல் இரக்கமாயிருக்கும்படி கெஞ்சி மன்றாடுகின்றேன்.

என் கால்கள் இரண்டும் அசைவின்றி, உஷ்ணமின்றி என் படுக்கையிலே கடினமாய் வலித்து, நான் இவ்வுலகில் செய்த பயணம் முடிந்ததென்று காட்டும்போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

என் கைகளிரண்டும் அதிர்ந்து, நடுநடுங்கிப் பலனற்று, கடைசிச் சரணமாக ஏந்தியிருக்கிற உமது திருச்சிலுவை சுரூபத்தை கைநெகிழ விடும்போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

என் உதடுகள் குளிர்ந்து, கறுத்துக், கிடுகிடுத்து, உமது திருநாமத்தைக் கடைசிவிசையாய் உச்சரிக்கும்போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

என் கன்னங்களிரண்டும் ஒன்றோடொன்று ஒட்டி, மரணத்தின் அடையாளமாய் வெளுத்து, என் தலையோடு மயிரொட்டி, என் நெற்றியிலே வியர்வை எழ, என்னைச் சூழ்ந்து நிற்பவர்களுக்குப் பயங்கரமும் அருவருப்பும் வருத்துவிக்கும்போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

என் கண்களிரண்டும் பஞ்சடைந்து, அகோரமாய்த் திகைத்து, பயங்கரமாய் விழித்து, இவ்வுலகத்திலுள்ள பொருட்களை ஒன்றும் காணாமல், தன்னந்தனியே அச்ச நடுக்கத்தோடு நான் சரணடைகிறபோது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

என் காதிரண்டும் கேள்வியற்று, மனித சம்பாஷனையை விட்டுப் பிரிந்து, நீர் ஊழியுள்ள காலம் இடப்போகிற தீர்வையைக் கேட்கத் தயாராகும்போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

மயங்கும் என் மனதிலே அச்சம் உறுத்த, வீண் எண்ணங்களும் அவலட்சணத் தோற்றங்களும் தோன்றி, பயங்கரமாயிருக்கும் அந்நேரத்தில், தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

இப்பயங்கரத்தினால் என் இருதயம் கலங்கியிருக்கும் வேளையில், பசாசு என் பாவங்களை மிகுவித்து, உமது நீதியைப் பெருக்கி, உமது அளவில்லாத கிருபையை மறைத்து, நான் அவநம்பிக்கையாய்ச் சாக என்னோடு கடைசி யுத்தம் நடத்தும்போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாயிருக்கும் போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

மரணம் மட்டும் கடைசிக் குறியாக என் கண்களிலே நின்று கண்ணீர் சொரிந்து விழ, அந்தக் கண்ணீரை என் பாவங்களுக்குப் பரிகாரமாகக் கிருபையாய் ஏற்றுக்கொண்டு பயங்கரமான அவ்வேளையில் என்னைக் கைவிடாதேயும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

சுவாசம் விட நான் படும் பாட்டையும், மரண இக்கட்டுக்குள்ளே அகப்பட்டு நான் படும் வேதனையையும் என் பாவங்களுக்குப் பரகாரமாக, நான் அனுபவிக்கிற தண்டனையாக ஏற்றுக்கொண்டு என்பேரில் இரக்கமாயிரும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

இவ்வுலகில் உள்ளதெல்லாம் என்னைக் கைவிட, நான் கடைசி மூச்சை வாங்கி, என் ஆத்துமம் சரீரத்தை விட்டுப்பிரிய கடும் போர் புரியும்போது உமதுபேரில் எனக்குள்ள சிநேகத்தால் உம்மிடம் வர நான் படும் பிரயாசையை ஏற்றுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

என் சுற்றத்தார், சிநேகிதர் என்னைச் சூழ்ந்துகொண்டு, அலறிப் பதறி மாரடித்து எனக்காக உம்மை மன்றாடி, ஐயோ சாகிறானே என்று சொல்லியழும்போது, என்மேல் இரக்கமாயிரும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

குளிர்ந்த உணர்வற்ற என் சரீரத்தினின்று என் ஆத்துமம் பிரியும்போது, நான் அதை உம் திரு இருதயத்துக்கு நேசப்பலியாக ஒப்புக்கொடுக்கிறேன். என் அன்பான பலியை ஏற்றுக்கொள்ளும் சுவாமி.  தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

நான் நினையாதபோது திடீரென்று மரணம் எனக்கு வந்தாலும், ஓ! ஆண்டவரே, எனக்கு உதவ தீவிரித்து வரத் தாமதியாதேயும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

கடைசியாய் என் ஆத்துமம் மகிமைப் பிரதாபமுள்ள உமது சமூகத்திலே நிறுத்தப்பட்டு, தன்னுடைய தீர்வையை கேட்க நடுநடுங்கி நிற்கும்போது மதுரமான சேசுவே, எனக்கு நடுவராயிராமல், என் இரட்சகராய் இரும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

என் நல்ல தகப்பனே, என்னைப் புறக்கணித்துத் தள்ளாமல், என்னைக் கிருபாகடாட்சத்தோடேபார்த்து உம்மை என்றென்றும் வாழ்த்தித் துதிக்க நான் உமது இராச்சியத்திற்கு வரப்பண்ணியருளும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

செபிப்போமாக.

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா, எங்கள் மரண நேரத்தையும், இடத்தையும், சந்தர்ப்பத்தையும் எங்களுக்கு மறைக்கத் தேவரீருக்குச் சித்தமாயிற்று. ஆகையால் மரண நேரம் வரும்போது நாங்கள் இஷ்டப்பிரசாத அந்தஸ்திலே மரித்து, உமது நித்திய மகிமைப் பாக்கியத்திற்குப் பங்காளிகளாகிறதற்கு, எப்பொழுதும் பரிசுத்த புண்ணிய சீவியம் சீவிக்கும்படி எங்களை ஆசீர்வதிக்க வேணுமென்று தேவரீரைப் பிரார்த்திக்கிறோம். இந்த மன்றாட்டுகளை சேசுக்கிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளையும், திரு இரத்தத்தையும், திருக்காயங்களையும் பார்த்து, பூங்காவனத்தில் அவர் பட்ட மரண அவஸ்தையினாலேயும் எங்களுக்குத் தந்தருள அவருடைய திருநாமத்தினாலே வேண்டிக்கொள்ளுகிறோம்.

ஆமென்.