செபமாலையும் அர்ச் சூசையப்பரும்.

பிரிக்க முடியாத மூன்று ஆட்களின் பெயர்களை பரிசுத்த ஆவியே வேதத்தில் எழுதி இருக்கிறார் . சேசு மேரி சூசை . காலா காலமும் இம்மூன்று நாமங்களும் முழங்கும் . தேவ தாயே செபமாலையைக் கொடுத்து தம் தேவ மகனின் உண்மையான சித்திரத்தை அதில் வரைந்திருக்கும் போது சூசையப்பரின் பேரும் அதில் கலக்காமல் இருக்க முடியுமா? ஒரு விதத்தில் சூசையப்பரின் இரகசிய சரிதை தான் செபமாலை என்றே சொல்லி விடலாம் . மனிதாவதாரத்திலும் ஈடேற்றத்திலும் சூசையப்பருக்குள்ள தொடர்பு என்னவென்று செபமாலையில் அறிய வருவோம் . திருச்சபை மனிதாவதாரத்தின் தொடர்ச்சி தானே ? அதில் சூசையப்பரைக் காணாமல் இருக்க முடியுமா ?

பரிசுத்த தமத்திருத்துவம் உலகத்தைப் படைத்து அதற்குத் தலைமை பூண்டு விளங்குவது போல , வேறொரு திரித்துவம் அதை ஈடேற்றுவதில் இறங்கியது . மனிதருடைய ஈடேற்றத்தில் முதல் பாகம்  - முக்கிய பாகம்  -  இயேசுவுக்குத்தான் .அடுத்தபடியில் இரட்சகரின் தாயாகிய கன்னிமரியைக் காண்கிறோம் . இவர்கள் இருவரையும் விட்டு சூசையப்பரைப் பிரிக்க முடியுமோ? கடவுளுடைய அன்பாலும் இரக்கத்தாலும் கிறிஸ்து மேலும் மாமரியின் மேலும் இவருக்குச் செல்வாக்கை ஆண்டவர் அளித்துள்ளார் . நாசரேத்தின் திரித்துவமாகிய இம்மூவரும் கன்னிமை பூண்டவர்கள் . ஆதலால் சந்தோசத்திலும் துக்கத்திலும் இவர்கள் அதிகம் நெருங்கி நின்றனர்

இயேசுவும் மாறியும் சூசையப்பருக்குச் சொந்தம் , பத்தினி பத்தாவுக்குச் சொந்தம் அல்லவா ? இவருடைய கற்பின் நிமித்தம் , அவர்களுடைய தாம்பத்திய உறவு , ஞான உறவு அதிகம் நெருங்கிய உறவு , இயேசுவும் சூசையப்பரின் சொத்து தானே ? புனித பிரான்சிஸ் சலேசியார் சொன்ன உவமை எவ்வளவு இன்பகரமான பொருத்தமுள்ளது. ஒரு தோட்டத்திற்குள் ஒரு புறா வித்தொன்றைப் போட அது பெரிய மரமாகிப் பழுக்குமேயாகில்  -  தோட்டக்காரன் விதைக்காவிடினும்  -  அம்மரம் தோட்டக்காரனுடைய சொத்து . ஏனெனில் தோட்டம் அவனுக்குச் சொந்தம் . அதே போல் கன்னிமரி சூசையப்பரின் மெய்யான பத்தினியானபடியால் கன்னி மரியிடம் உற்பவித்த கனியாகிய இயேசுவும் சூசையப்பருக்குச் சொந்தம்.

இந்த நெருங்கிய ஐக்கியத்தினால் தான் கடவுள் புனித சூசையப்பருக்கு மகத்தான அருட்கொடைகளை அளித்திருந்தார் . முதல் நாளில் இருந்து வந்த மரபை உறுதிப்படுத்தி புனித பொன்வாய் அருளப்பர் சொல்லுவார் . புனித சூசையப்பர் பிறக்கும் முன்னரே ஜென்ம பாவத்தில் இருந்து கழுவப் பெற்றார். தேவ தாய்க்கு அடுத்தபடியில் புனித சூசையப்பர் வரப்பிரசாதத்தின் ஊற்றாகிய இயேசுவோடு அதிகமதிகம் நெருங்கி இருந்த படியினால் பெரும் கிருபைகளைப் பெற்றார் . குழந்தை இயேசுவை தன் கரத்தில் ஏந்திச் சென்ற போதும் அவருக்குக் கன்னி முத்தம் அளித்த போதும் எவ்வளவு அன்னியோன்னிய ஆத்தும ஒற்றுமை பலித்திருக்கும் . சூசையப்பரிடத்தில் காண முடியாத புண்ணியம் இல்லை என்றே சொல்லலாம்

சூரிய பிரகாசம் ஒரு கண்ணாடியில் பாய அவ்வொளி அக்கண்ணாடியில் இருந்து பிரதிபலிக்குமேயாகில் இரண்டும் ஒரே பிரகாசமாகத்தான் விளங்கும் . அது போல சூசையப்பர் நேர் முகமாக எல்லா ஞானத்தையும் இயேசுவிடம் இருந்து பெறாவிடினும் தேவதாயிடமிருந்து பெற்றார். அவர் உள்ளத்தில் ஞானப் பிரகாசத்தை ஊற்றியவர் இயேசு . ஆதலால் சூசையப்பரின் உள்ளம் இயேசுவின் புண்ணியங்களால் பிரகாசிக்கிறது

இதனால் தான் தேவ இரகசியங்கள் முழுவதிலும் சூசையப்பரைக் காண்கிறோம் . இயேசுவின் பகிரங்க வாழ்க்கைக்கு முன்னர் இயேசு மேரி கரத்தில் சூசையப்பர் தன் உயிரைக் கொடுத்தார் என்பது ஐதீகம் . இயேசுநாதர் உயிர் விட்டவுடன் பாதாளம் சென்று பரகதியின் பாக்கியத்தை அங்கு உள்ளோருக்கு அளித்தார் . சூசையப்பருக்கு என்ன பாக்கியம், என்ன மகிழ்ச்சி ! இயேசு அவர்களைத் தம் கல்லறைக்கு அழைத்து வந்து உத்தானத்திற்கு முன் தம் காயங்களைக் காட்டியபோது புனித சூசையப்பர் எவ்வளவு தூரம் இயேசுவின் பாடுகளை உணர்ந்து அவைகளோடு ஒன்றித்துப் போயிருப்பார் . தேவ தாய்க்கு காட்சி கொடுத்த உயிர்த்த இயேசு தம் கைத்தாதைக்கும் தம் மகிமையைக் காட்டாமல் இருப்பாரோ ? மோட்ச ஆரோகணத்தின் போது தன் கைத்தாதையையும் தானே இயேசு அழைத்துக் கொண்டு போனார் . திருச்சபைக்குப் பாதுகாவலராக இருக்க வேண்டிய சூசையப்பர் , திருச்சபை பிறந்த சமயம்  - பரிசுத்த ஆவியானவர் இறங்கின சமயம்  - அங்கில்லாமலா இருந்திருப்பார் ? புனித சூசையப்பர் செபமாலையின் தேவ இரகசியங்கள் முழுதும் தோன்றுகிறார் என்றே சொல்லலாம்

திருச்சபை மனிதாவதாரத்தின் தொடர்ச்சி . அதே போல் ஒவ்வொரு கிறிஸ்துவக் குடும்பமும் திருக்குடும்பத்தின் தொடர்ச்சி . திருக்குடும்பத்தில் அவரது அலுவல் எத்தகையதோ அதே அலுவல் அவருக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு . உலக காரியத்திலும்  -  பழைய ஏற்பாட்டு சூசையைப் போல  -  ஞானக் காரியத்திலும் ஒவ்வொரு குடும்பத்திற்கு உதவி செய்கிறார்

குழந்தை இயேசுவை வளர்த்த சூசையப்பருக்கு குழந்தைகள் மேல் அன்பு. அதே போல் தொழிலாளர்களுக்கும் , கண்ணியர்களுக்கும், துன்பப்படுவோருக்கும் அகதிகளுக்கும் அவர் அன்பர் . உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களுக்கும் அவர் நண்பர் . பாதாளத்தில் இருந்த போது மோட்ச பாக்கியம் இல்லாத குறையை  - மோட்சம் போன பின்பு கண்டுபிடித்திருப்பார் அல்லவா ?

16 ம் நூற்றாண்டில் ஒரு குருவானவர் சொல்லுவார் :" தேவதாயின் பிரமாநிக்கமுள்ள தாசர்கலே , தேவ தாயின் செபமாலையைச் சொல்லும்போது அதன் முடிவில் அவர் பத்தாவாகிய சூசையப்பரைக் கண்டு ஒரு சிறு செபம் சொல்லுவது கஷ்டம் என்று எண்ணாதீர்கள் .இச்சிறு காணிக்கை கடவுளுக்கு மகாப் பிரியமாயிருக்கும் ; வானத்தையும் பூமியையும் மகிழ்விக்கும் ; இயேசுவின் கைத்தாதைக்குச் சாற்றும் துதியை கண்டு மோட்ச வாசிகள் அக்களிப்பார்கள் . இதனால் புனித சூசையப்பரின் மன்றாட்டால் வானுலக கிருபைகள் பூமியின் மேல் பொழியும் . 1889 ம் ஆண்டு 13ம் சிங்கராயர் பகிரங்கமாக , செபமாலை சொன்னபின் சூசையப்புக்கு ஒரு சிறு செபம் சொல்லச் சொன்னார் . அதை அவரே இயற்றினார் . செபமாலை முடிந்த பின் புனித சூசையப்பரிடம் திரும்பும்படி புனித பத்தாம் பத்தினாதரும் கேட்டுக் கொண்டார்

13 ஆம் சிங்கராயர் அர்ச் சூசையப்பர் பேரில் செய்த செபம்.

அர்ச் சூசையப்பரே ! எங்களுடைய துன்ப துயரங்களில் உம்முடைய சரணமாக ஓடி வந்தோம் . உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின் உமது அடைக்கலத்தை அடைய நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறோம் . தேவ தாயாரான அமலோற்பவ கன்னி மரியாளின் பேரில் நீர் வைத்திருக்கிற அன்பின் ஐக்கியத்தைப் பார்த்து திவ்விய பாலனான இயேசுவை அன்போடு அரவணைத்து வளர்த்த தந்தைக்குரிய உமது நேசத்தைப் பார்த்து , அத்திவ்விய கர்த்தர் தமது திரு இரத்தத்தால் மீட்டு இரட்சித்த மனுக்குலத்தைக் கிருபாகடாட்சமாய்ப் பார்த்தருளி எங்கள் தேவைகளிலே உமது செல்வாக்குள்ள மன்றாட்டினால் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறோம் . திருக்குடும்பத்தைக் காத்து நடத்திய காவலனே ! இயேசுக்கிறிஸ்துவின் பிரஜைகளை ஆதரித்தருளும் . அதிமிக உருக்க நேசம் அமைந்த பிதாப்பிதாவே ! சகல பாவ மாசுகளிநின்றும் எங்களை தற்காத்தருளும்

வல்லமை பொருந்திய காவலனே , எங்கள் சத்துருக்களோடு நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களைப் பாதுகாத்தருளும் . மரண ஆபத்திலிருந்து திவ்விய பாலனை அன்று மீட்டு இரட்சித்தது போல இப்போது எங்கள் சத்துருக்களின் சகல தந்திரங்களில் இருந்தும் இக்கட்டு இடையூறுகளில் இருந்தும் திருச்சபையைப் பாதுகாத்தருளும் . உமது தயவு ஆதரவால் நாங்கள் தற்காக்கப்பட்டு உமது திவ்விய மாதிரியைப் பின்பற்றி பரிச்த்தமாய் சீவித்து பக்தியை மறித்து பரகதியின் ஆனந்தத்தில் வந்து சேரத்தக்கதாக தேவரீருடைய உதவி ஒத்தாசையை எங்களுக்குக் கட்டளையிட்டருளும் ஆமென்.