பாத்திமா சிறுமி ஜெசிந்தாவின் அறிவுரைகள்

லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா இந்த மூன்று சிறுமிகளுடைய வாழ்க்கையில் அன்னையின் காட்சிக்கு பிறகு நிறைய மாற்றங்கள். அதுவும் நரகத்தின் கொடூரத்தை அன்னை காட்டியதை பார்த்தபின்பு அந்த பிஞ்சு குழந்தைகள் பாவிகள் மனந்திரும்ப நிறைய ஒருத்தல்கள், பரிகாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். தங்களுக்கு (ஜசிந்தா, பிரான்சிஸ்) வந்த விஷகாய்ச்சலின் வேதனைகளையும் மரணம் வரை ஒப்புக்கொடுத்தது அவர்கள் பரித்தியாகங்களின் உச்சம். லூசியாவும் அநேக ஒறுத்தல்கள் பரித்தியாகங்கள் செய்திருக்கிறார்கள்.

இதோ ஜெசிந்தா தன்னைப்போன்ற குழந்தைகளுக்கு கோடினோ என்ற அருட்சகோதரியின் முன்னால் வழங்கிய அறிவுரையிலிருந்து சில பகுதிகள் :

1. உலகில் நிறைய யுத்தங்களும், பிரிவுகளும் இருக்கின்றன; பாவத்திற்கு தண்டனைதான் யுத்தம் என்று நம் அம்மா என்னிடம் சொன்னார்கள்

2. உலகத்தைத் தண்டிக்கவிருக்கும் தன் திருக்குமாரனின் கரத்தை நம் அம்மாவால் தாங்கி நிறுத்தக்கூடவில்லை. தபசு செய்வது மிகவும் அவசியம் மக்கள் தங்கள் வாழ்வைத் திருத்தினால், இப்போது கூட ஆண்டவர் உலகத்தைக்காப்பாற்றுவார். இல்லாவிட்டால் தண்டனை வரத்தான் செய்யும்.

3. உலகத்தின் பாவங்கள் மிக மிக அதிகம். நித்தியம் என்றால் என்ன என்று மனிதர்கள் அறிந்தால் அவர்கள் தங்கள் வாழ்வை கட்டாயம் மாற்றிக்கொள்வார்கள்.

4. பாவிகளுக்காகவும், குருக்களுக்காகவும் சந்நியாசத்தில் உள்ளவர்களுக்காகவும் அதிகமாக வேண்டிக்கொள்வது அவசியம்.

5. அரசாங்கங்கள் திருச்சபையை எதுவும் செய்யாமல் சமாதானமாக விட்டு, அதற்கு முழு சுதந்திரம் கொடுப்பார்களானால், கடவுளின் ஆசீரைப் பெறுவார்கள்.

6. செல்வத்தையும், சவுகரீகமான வாழ்வையும் விட்டு ஓடுங்கள். வறுமையையும் மவுனத்தையும் விரும்புங்கள். தீயவர்கள் மீதும் அன்பாயிருங்கள். யாரைப்பற்றியும் குறைவாக பேசவேண்டாம். அப்படிப்பேசுகிறவர்களை விட்டுப் போய்விடுங்கள்.

7. மிகவும் பொறுமையோடிருங்கள். ஏனென்றால் பொறுமை நம்மை மோட்சத்திற்கு கொண்டு செல்கிறது. பரித்தியாகங்களும் நமதாண்டவருக்குப் பிரியமானவை.

8. பாவசங்கீர்த்தனம் இரக்கத்தின் தேவத்திரவிய அனுமானம். மகிழ்வோடும், நம்பிக்கையோடும் பாவசங்கீர்தனத்திற்கு செல்ல வேண்டும்.

9. குருக்கள் மிகவும் தூயவர்களாக இருக்க வேண்டும். குருக்கள், துறவியர் தங்கள் அதிகாரிகளுக்கு கீழ்ப்படியாமலிருப்பது நமதாண்டவருக்கு மிகவும் வெறுப்பாயிருக்கிறது. அதிகாரிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

10. மாதாவுக்குத் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாதவர்கள் தங்கள் காரியங்களில் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.

11. நோயாளிகளைக் குணமாக்கக் கூடிய ஒளி டாக்டர்களுக்கு இல்லை ஏனென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு இல்லை.

12. சில நாகரீக பாணிகள் புகுத்தப்படும். அவை நமதாண்டவரை மிகவும் நோகச்செய்யும். சர்வேசுரனுக்கு ஊழியம் செய்பவர்கள் இப்பாணிகளைப் பின்பற்றக் கூடாது. திருச்சபையில் நாகரீகப் பாணிகள் கிடையாது. நமதாண்டவர் மாற்றமடைவதில்லை.

13. பல திருமணங்கள் கடவுளால் ஆனவை அல்ல. அவை நமதாண்டவருக்கு விருப்ப்ம் இல்லாதவை. அதீகப்படியானவர்கள் நரகத்திற்கு செல்லக் காரணம் சரீர பாவங்களே.

14. கற்பென்னும் வார்த்தைப்பாடு கொடுத்து கன்னிமை விரதம் பூண்ட ஆன்மாக்கள் வரவேண்டுமென தேவதாய் அதிகம் விரும்புகிறார்கள்.

15. எனக்கு மடத்தில் சேர மிக ஆசை. ஆனால் அதைவிட மோட்சம் செல்ல விரும்புகிறேன்.

16. தேவ ஊழியர்காக இருப்பதற்கு மனதிலும், உடலிலும் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்.

தூய்மையாயிருத்தல் என்றால் என்ன என்று உனக்குத் தெறியுமா? என்று கேட்டதற்கு, ”ஆம் தெரியும். உடலில் தூய்மையாயிருத்தல் என்றால் கற்பை அனுசரிப்பதாகும். மனதில் தூய்மையாயிருப்பதென்னவென்றால் எந்த பாவமும் செய்யாதிருப்பது. பார்க்கத் தகாவற்றை பார்ப்பது கூடாது. களவாடல், பொய் கூறல் தகாது. கஷ்ட்டமாக இருந்தாலும் எப்போதும் உண்மையே பேசவேண்டும் “ என்று சொல்லியிருக்கிறாள் அந்த சிறுமி.

இதனால்தான் நம் ஆண்டவர் இயேசு சொன்னாரோ, “ நீங்கள் குழந்தைகளாய் மாறாவிடில் விண்ணரசில் நூழைய மாட்டீர்கள் “ என்று.

நாம் புனித சிறுமி ஜெசிந்தாவின் அறிவுரையை கேட்டு, அந்த மூன்று சிறுமிகள் அடிக்கடி ஜெபித்த ஜெபமாலை, வானவர் ஜெபம் ( என் தேவனே நான் உம்மை விசுவசிக்கிறேன்..) ஜெபித்து அவர்களைப்போல ஒருத்தல் முயற்சிகள், பரித்தியாகங்கள் செய்து நாமும் அவர்கள் போல் மோட்சத்திற்க்கு செல்ல நம்மை இப்போதிலிருந்தே தயாரிப்போமா?.