நாம் மரியாளை 'இயேசுவின் தாய்' என்று அழைத்தாலும், இயேசு அவரை 'பெண்ணே!' என்று சாதாரணமாகத் தானே அழைத்தார்?

இயேசுவின் தாய்

'பெத்லகேமில் இருந்தபொழுது மரியாளுக்கு பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தபோது, அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.' (லூக் 2:6-7,21) இவ்வாறு நற்செய்தியாளர் கூறுவதில் இருந்து 'மரியாள் இயேசுவின் தாய்' என்பது தெளிவாகிறது. இயேசு வளர்ந்த ஊர் மக்கள் அவரை, 'மரியாளின் மகன்' என்றே அழைத்தனர். "இவருடைய தாய் மரியாள் என்பவர் தானே?" (மத்தேயு 13:55) "இவர் மரியாளின் மகன் தானே!" (மாற்கு 6:3) என்று நாசரேத்து ஊரினர் கூறியதாக நற்செய்தி தெளிவாக எடுத்துரைக்கிறது. இயேசு இறைமகனாக இருந்தாலும், தம்மை "மானிடமகன்" (மத்தேயு 16:13) என்று கூறி வந்ததன் மூலம் தம் தாய் மரியாளைப் பெருமைப்படுத்தினார். இவ்வாறு இயேசு, தம்மைப் பெண்ணின் வித்தாகவும், புதிய ஆதாமாகவும் அடையாளப்படுத்துகிறார்.

இறைத்தந்தையின் மீட்புத் திட்டத்தில் புதிய ஆதாமாகத் திகழ்ந்த இயேசுவுக்குத் துணைநிற்கும் புதிய ஏவாளாக மரியாள் செயல்படுவதை காண்கிறோம். முதல் ஆதாமுக்குத் தகுந்த துணையாக முதல் ஏவாள் படைக்கப்பட்டதுபோல (தொடக்க நூல் 2:20-23), புதிய ஆதாமான இயேசுவுக்காக புதிய ஏவாளான மரியாளும் அருள்நிலையில் படைக்கப்பட்டார். இயேசுவின் மீட்பு பணியில் நம்பிக்கையோடு ஒத்துழைத்ததால், மரியாள் நம்பிக்கை கொண்டோரின் தாயாக விளங்குகிறார். இவ்வாறு, "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்" (தொடக்க நூல் 3:15) என்ற முன்னறிவிப்பை நிறைவேற்றிய பெண்ணாக மரியாள் திகழ்கிறார். இதை சுட்டிக்காட்டவே, இயேசு தம் வாழ்வின் இரண்டு முக்கியத் தருணங்களில் மரியாளை "பெண்ணே!" என்று அழைக்கிறார்.

முதலாவதாக இயேசு இறையாட்சி பணியைத் தொடங்கிய காலத்தில், கானாவூர் திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதை கூறும் மரியாளிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்?" (யோவான் 2:4) என இயேசு கேட்கிறார். இருந்தாலும் மரியாளின் நம்பிக்கையால், தண்ணீர் திராட்சை இரசமான முதல் அற்புதத்தை இயேசு நிகழ்த்துவதைக் காண்கிறோம். ஆதாம் பாவம் செய்ய ஏவாள் காரணமாக இருந்ததைப்போல, இயேசு அற்புதம் நிகழ்த்த மரியாள் காரணமாக இருக்கிறார். இரண்டாவது, உலக மீட்புக்காக இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில், தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" (யோவான் 19:26) என்றார். இவ்வாறு இயேசு, தம் சீடர்கள் அனைவரையும் மரியாளின் பிள்ளைகளாக ஒப்படைத்தார். எனவே, மண்ணில் வாழ்வோர் அனைவருக்கும் தாயாக ஏவாள் இருப்பது போன்று, விண்ணக வாழ்வுக்கு தகுதிபெறும் அனைவருக்கும் தாயாக மரியாள் திகழ்கின்றார்.