பாத்திமா காட்சிகள் - லூஸியாவின் புதுநன்மை

லூஸியாவுக்கு ஆறு வயது. சிறுவர்களுக்கும் நற்கருணை வழங்கலாம் என்று அர்ச். பத்தாம் பத்திநாதர் பாப்பரசர் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் உத்தரவு அளித்திருந்தார். மரிய ரோசா இந்த உத்தரவின்படி தன் இளைய மகள் லூஸியாவுக்கு ஆறு வயதிலேயே புது நன்மை கொடுத்து விடத் தீர்மானித்து அதற்கு அவளை ஆயத்தப்படுத்தி வந்தாள். ஒரு குறிப்பிட்ட நாளில் தாயும் மகளும் பாத்திமா பங்குக் குருவைப் பார்க்கச் சென்றார்கள்.

பங்குக் குரு லூஸியாவிடம் வேத சத்தியங்களைப் பற்றிக் கேட்டார். திருப்தியாகப் பதிலளித்தாள் லூஸியா. ஆயினும் குரு சற்று நேரம் சிந்தித்த பின் அவள் மிகவும் சிறு வயதாயிருப்பதால், ஒரு வருடம் பிந்தி நற்கருணை கொடுக்கலாம் என்று கூறி விட்டார். இந்த ஏமாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கோவிலில் போய் அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டாள் மரிய ரோசா. லூஸியாவோ ஒரே அழுகை!

அந்நேரத்தில் புதுநன்மை ஆயத்தப் பிரசங்கம் செய்ய வந்திருந்த சங். குரூஸ் சுவாமி அங்கு வர நேர்ந்தது. தாயும் மகளும் இருந்த நிலையைப் பார்த்து, காரணம் என்ன என்று கேட்டார். லூஸியாவிடம் சில ஞானப் பாடக் கேள்விகள் கேட்டார். 

பின் அவளைக் கூட்டிக் கொண்டு பங்குக் குருவிடம் சென்று, "புதுநன்மை வாங்கப் போகும் மற்ற அநேகப் பிள்ளைகளை விட அதிக நன்றாய் இப்பிள்ளைக்கு வேத சத்தியங்கள் தெரியும். ஆதலால் புதுநன்மைக்கு இவளைச் சேர்த்துக் கொள்ளலாம்'' என்றார். அவளுக்கு வயது ஆறுதானே என்று பங்குக் குரு கூறினாலும் குரூஸ் சுவாமியின் வற்புறுத்தலின் மேல் லூஸியாவை சேசு வாங்க அனுமதித்தார்.

லூஸியா மிகவும் மகிழ்ச்சியுற்றாள். உடனே முதல் பாவசங்கீர்த்தனம் செய்ய ஆயத்தமானாள்.

சங். குரூஸ் சுவாமியிடமே லூஸியா பாவசங்கீர்த்தனம் செய்தாள். கபடமே அறியாத குழந்தை, கோவிலில் இருந்தவர்களுக் கெல்லாம் கேட்குமளவு சத்தமாக பாவங்களைச் சொன்னாள். அது அவளுக்கே தெரியாது. அவளுக்குப் பாவப் பொறுத்தல் அளிக்குமுன் அக்குரு, "மகளே, உன் ஆன்மா பரிசுத்த ஆவியானவரின் இல்லமாயிருக்கிறது. அதில் அவர் செயல் புரியுமாறு எப்போதும் அதைத் தூய்மையாய் வைத்திரு" என்றார். 

அப்படியே செய்வதாகக் கூறிவிட்டு லூஸியா எழுந்து தேவதாயின் பீடத்தடியில் சென்று முழங்காலிட்டு மாதா சுரூபத்தை உற்றுப் பார்த்து : ''அம்மா, என் எளிய இருதயத்தைக் கடவுளுக்காகவே காப்பாற்றி வையுங்கள்" என்று மன்றாடினாள். இப்படி அவள் கேட்டபோது, ''அந்த சுரூபம் புன்னகைத்து அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டது போலிருந்தது' என்று லூஸியா பின்னால் கூறியுள்ளாள்.

அவர்கள் வீடு திரும்பும்போது மரிய ரோசா லூஸியாவிடம் : ''பாவசங்கீர்த்தனம் என்பது மிகப் பெரிய இரகசியம் அல்லவா? அதை மெதுவான குரலில் அல்லவா சொல்ல வேண்டும்? நீ பாவசங்கீர்த்தனம் செய்ததை எல்லோரும் கேட்டார்களே' என்றாள். லூஸியா தலை கவிழ்ந்து பதில் கூறாமலே நடந்தாள். 

அவள் தாய் மேலும் தொடர்ந்து சொன்னாள்: ''நீ குருவிடம் கடைசியில் கூறியதைத் தான் கேட்க முடியவில்லை ." இதற்கும் லூஸியா பதில் கூறவில்லை. "நீ குருவிடம் கடைசியில் என்ன சொன்னாய்?" என்று மீண்டும் கேட்டாள் மரிய ரோசா. வீடு சேரும் வரை கேட்டுப் பார்த்தாள். லூஸியா ஒரு வார்த்தையும் பேசவேயில்லை.

அன்று இரவு வெகு நேரம் வரை லூஸியாவின் மூத்த சகோதரிகள் அவளுடைய புதுநன்மைக்கு தயாரிப்புகளைச் செய்தார்கள். லூஸியாவுக்கு உறக்கம் வரவேயில்லை. அடிக்கடி எழுந்து மணி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை எழுப்ப வந்த மூத்த அக்காள் மரியா, லூஸியாவிடம் அவள் எதையாவது தின்னவோ, பருகவோ கூடாது. சேசுவை வாங்கும் வரை உபவாசமாயிருக்க வேண்டும் என்று ஞாபகமூட்டினாள். 

(அப்போது நடுச்சாமம் முதல் நன்மை வாங்கும் வரை தண்ணீர் முதலாய்ப் பருகாமல் உபவாசமா யிருக்க வேண்டும் என்ற ஒழுங்கு இருந்தது). அதன்பின் அவளுக்குப் புது நன்மை உடைகளை அணிவித்து பெற்றோரிடம் கூட்டி வந்து, அவர்களிடம் தான் செய்த குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்டு அவர்கள் கரங்களை முத்தம் செய்து அவர்களிடம் ஆசீர் பெற்றுக் கொள்ளும்படி கூறினாள். 

லூஸியாவும் அவ்வாறே செய்து பெற்றோரிடம் ஆசீர் பெற்றார். அப்போது மரிய ரோசா தன் மகளிடம், "ஜாஸியா, தேவ அன்னை உன்னை ஒரு அர்ச்சியசிஷ்டவளாக்கும்படி கேட்க மறந்து விடாதே” என்று கூறினாள்.

விடியற்காலையில் மரிய ரோசா குடும்பத்தினர் பாத்திமா பங்குக் கோவிலுக்கு நடந்து சென்றார்கள். பூசை ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்தது. லூஸியா ஜெபமாலைத் தாயின் பீடத்தடிக்கு மீண்டும் சென்று, ''அம்மா, என்னை அர்ச்சியசிஷ்டவளாக்குங்கள்; ஆண்டவரிடம் மன்றாடி என்னை அர்ச்சியசிஷ்டளாக்குங்கள்" என்று கேட்டாள்.

அன்று சேசுவை முதலில் வாங்கியது லூஸியாதான். அவள் தான் எல்லோரையும் விடச் சிறியவளாதலால் முதல் வரிசையில் முதல் இடத்தில் இருந்து மற்றவர்களுக்கு முந்தி சேசுவைப் பெற்றுக் கொண்டாள். 

சேசு தன் நாவில் பட்டதும், "நிரந்தரமான ஓர் அமைதியும் சமாதானமும் என்னிடம் ஏற்பட்டது" என்று லூஸியா கூறுகிறாள். பூசை முடியும் வரை, "சேசுவே, என்னை அர்ச்சிய சிஷ்டவளாக்குங்கள். என் இருதயத்தை எப்போதும் தூய்மையாக உங்களுக்கென வைத்துக் கொள்ளுங்கள் சேசு!" என்று கூறிக் கொண்டிருந்தாள். 

அவள் உள்ளத்தில் சேசு, "இன்று நான் உனக்குத் தரும் வரப்பிரசாதம் நித்திய வாழ்வின் பலனைக் கொடுக்கும்படி உன் ஆன்மாவில் நிலைத்திருக்கும்" என்று கூறிய மொழிகளை லூஸியா தெளிவாகக் கேட்டாள். அன்று முதல் அவள் எங்கோ இழுக்கப்பட்டவளாயும், எதிலோ ஈடுபட்டவளாயும் காணப்பட்டாள்.

லூஸியாவின் பற்கள் விழுந்து முளைத்தபோது, அவை அவள் முகத்தைச் சற்று விகாரப்படுத்தின. பிடிவாத குணமுள்ள முகம் போல் அவள் முகம் காணப்பட்டது. ஆனால் அவள் முகம் எந்த உணர்ச்சியையாவது வெளிப்படுத்தும்போது, அதில் ஒரு வசீகரம் இருக்கும். அவள் முறுவலிக்கும்போது, இரு கன்னங்களிலும் தோன்றும் சிறு குழிகள் அதை அதிகரித்துக் காட்டின. 

அவள் குரல் சற்று மெலிந்த கீச்சுக்குரல் போலிருக்கும். பெரியவர்கள் முன் அவள் மெளனமாகவே இருப்பாள். ஆயினும் எந்த உதவியையும் செய்ய முந்திக் கொள்வாள். அவளை விட வயதில் சிறிய குழந்தைகள் அவளைத் தேடி ஆவலுடன் வருவார்கள். அவர்கள் மத்தியில் லூஸியா சர்வ சாதாரணமாகப் பழகுவாள். நல்ல கதைகள் சொல்லி அவர்களை மகிழ்விப்பாள்.